தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal-திரட்டு

திரட்டு

1. திருமால்

இருந்தையூர் அமர்ந்த இறைவனது அடி பரவுதல்

வான் ஆர் எழிலி மழை வளம் நந்த,
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து,
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய

5

இருந்தையூர் அமர்ந்த செல்வ! நின்
திருந்துஅடி தலை உறப் பரவுதும், தொழுது.
இருந்தையூரின் சிறப்புகள்
மலை, குளம், வயல், ஆகியவற்றின் வளம்
ஒருசார்-அணி மலர் வேங்கை, மராஅ, மகிழம்,
பிணி நெகிழ் பிண்டி, நிவந்து சேர்பு ஓங்கி,
மணி நிறம் கொண்ட மலை.

10

ஒருசார்-தண் நறுந் தாமரைப் பூவின் இடைஇடை
வண்ண வரி இதழ்ப் போதின்வாய் வண்டு ஆர்ப்ப,
விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின்
கண் வீற்றிருக்கும் கயம்.
ஒருசார்-சாறுகொள் ஓதத்து இசையொடு மாறு உற்று

15

உழவின் ஓதை பயின்று, அறிவு இழந்து
திரிநரும், ஆர்த்து நடுநரும், ஈண்டி,
திரு நயத்தக்க வயல்.

அந்தணர் இருக்கை
ஒருசார்-அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி,
விறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித்

20

திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி,
அறத்தின் திரியா, பதி.

வணிகரும் உழவர்களும் வாழும் தெருக்கள்
ஆங்கு ஒருசார்-உண்ணுவ, பூசுவ, பூண்ப, உடுப்பவை,
மண்ணுவ, மணி பொன் மலைய, கடல,
பண்ணியம், மாசு அறு பயம் தரு காருகப்

25

புண்ணிய வணிகர் புனை மறுகு ஒருசார்:
விளைவதை வினை எவன் மென் புல வன் புலக்
களமர் உழவர் கடி மறுகு பிறசார்:
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம்
இயல் கொள நண்ணியவை.

ஆதிசேடனது திருக்கோயிலில் மைந்தரும் மகளிரும் வழிபடுதல்

30

வண்டு பொரேரென எழ,
வண்டு பொரேரென எழும்;
கடிப் புகு வேரிக் கதவமிற் றோட்டி,
கடிப்பு இகு காதில் கனம் குழை தொடர-
மிளிர் மின் வாய்ந்த விளங்கு ஒளி நுதலார்

35

ஊர் களிற்றன்ன செம்மலோரும்,
வாய் இருள் பனிச்சை வரி சிலை புருவத்து
ஒளி இழை ஒதுங்கிய ஒண் நுதலோரும்,
புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும்,
நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும்,

40

விடையோடு இகலிய விறல் நடையோரும்,
நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும்,
கடல் நிரை திரையின் கரு நரையோரும்,
சுடர் மதிக் கதிரெனத் தூ நரையோரும்-
மடையர், குடையர், புகையர், பூ ஏந்தி,

45

இடை ஒழிவு இன்றி, அடியுறையார் ஈண்டி,
விளைந்தார் வினையின் விழுப் பயன் துய்க்கும்
துளங்கா விழுச் சீர்த் துறக்கம் புரையும்-
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின்
வரை கெழு செல்வன் நகர்.

பூ முடி நாகர் கோயிலில் எழும் ஓசைகள் முதலியன

50

வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப,
விண்ட கட கரி மேகமொடு அதிர,
தண்டா அருவியொடு இரு முழவு ஆர்ப்ப,
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப்
புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற,

55

சூடு நறவொடு தாமம் முகிழ் விரிய,
சூடா நறவொடு காமம் விரும்ப,
இனைய பிறவும், இவை போல்வனவும்,
அனையவை எல்லாம் இயையும்-புனை இழைப்
பூ முடி நாகர் நகர்.

குளவாய் அமர்ந்தான் நகரில் மகளிரும் மைந்தரும் வணங்கிப் பேறு பெறுதல்

60

மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி
அவிர் நிமிர் புகழ் கூந்தல்,
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி
மது மகிழ்பு அரி மலர் மகிழ் உண்கண், வாணுதலோர்-
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது
 
இகழ் கடுங் கடாக் களிற்று அண்ணலவரோடு,
அணி மிக வந்து இறைஞ்ச, அல் இகப்ப, பிணி நீங்க,
நல்லவை எல்லாம் இயைதரும்-தொல் சீர்
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கைக்
குளவாய் அமர்ந்தான் நகர்.

ஆதிசேடனின் சிறப்புகளைப் போற்றுதல்

65

திகழ் ஒளி முந்நீர் கடைந்த அக் கால், வெற்புத்
திகழ்பு எழ வாங்கித் தம் சீர்ச் சிரத்து ஏற்றி,
மகர மறி கடல் வைத்து நிறுத்து,
புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
அமுது கடைய, இரு வயின் நாண் ஆகி,
 
மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க,

70

உகாஅ வலியின் ஒரு தோழம் காலம்
அறாஅது அணிந்தாரும் தாம்;
மிகாஅ மறலிய மே வலி எல்லாம்
புகாஅ, எதிர் பூண்டாரும் தாம்;
 
மணி புரை மா மலை ஞாறிய ஞாலம்

75

அணிபோல் பொறுத்தாரும் தாஅம்; பணிவு இல் சீர்ச்
செல் விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி,
கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகித்
தொல் புகழ் தந்தாரும் தாம்.

விண்ணப்பம்
 
அணங்குடை அருந் தலை ஆயிரம் விரித்த

80

கணங்கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி,
நல் அடி ஏத்தி நிற் பரவுதும்-
எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே.

கடவுள் வாழ்த்து

இப்பாடல், தொல்காப்பியம் செய்யுள் இயல், சூ. 121, பேராசிரியர், நச்சினார்க் கினியர் உரைகளில் கண்டது.

2. வையை

வையையில் புனல் விரைந்து வருதல்

மா நிலம் தோன்றாமை மலி பெயல் தலைஇ,
ஏம நீர் எழில் வானம் இகுத்தரும் பொழுதினான்,
நாக நீள் மணி வரை நறு மலர் பல விரைஇ,
காமரு வையை கடுகின்றே, கூடல்.

புதுப் புனலை விரும்பி மக்கள் கோலம் கொண்டு செல்லுதல்

5

'நீர் அணி கொண்டன்று வையை' என விரும்பி,
தார் அணி கொண்ட உவகை தலைக்கூடி,
ஊர் அணி கோலம் ஒருவர் ஒருவரின்
சேர் அணி கொண்டு, நிறம் ஒன்று வெவ்வேறு
நீர் அணி கொண்ட நிறை அணி அங்காடி,

10

ஏர் அணி கொண்டார், இயல்.

வையைத் துறையில் மன்னனும் மக்களும் கூடுதல்

கை புனை தாரினர், கண்ணியர்,
ஐ எனும் ஆவியர், ஆடையர்,
நெய் அணி கூந்தலர், பித்தையர்,
மெய் அணி யானை மிசையராய், ஒய்யெனத்

15

தங்காச் சிறப்பின் தளிர் இயலார் செல்ல;
பொங்கு புரவிப்புடைப் போவோரும், பொங்கு சீர்
வையமும் தேரும் அமைப்போரும்; எவ் வாயும்
பொய்யாம் போய் என்னாப் புடை கூட்டிப் போவநர்
மெய்யாப்பு மெய் ஆர மூடுவார்; வையத்துக்கு

20

ஊடுவார்; ஊடல் ஒழிப்பார்; உணர்குவார்:
ஆடுவார், பாடுவார்; ஆர்ப்பார், நகுவார்; நக்கு
ஓடுவார்; ஓடித் தளர்வார்; போய், உற்றவரைத்
தேடுவார்; ஊர்க்குத் திரிவார் இலராகி-
கற்றாரும், கல்லாதவரும், கயவரும்,

25

பெற்றாரும், பெற்றாற் பிழையாத பெண்டிரும்,
பொற்றேரான் தானும், பொலம் புரிசைக் கூடலும்,
முற்றின்று-வையைத் துறை.

நீராடற் காட்சிகள்
தலைவன் பரத்தைமையைத் தோழி குறிப்பால் உணர்த்துதல்


துறை ஆடும் காதலர் தோள் புணையாக,
மறை ஆடுவாரை அறியார் மயங்கி,

30

பிறை ஏர் நுதலியர் எல்லாரும் தம் முன்
நிகழும் நிகழ்ச்சி எம்பால் என்று, ஆங்கே,
இகல் பல செல்வம் விளைத்தவட் கண்டு, இப்பால்,
அகல் அல்கும் வையைத் துறை.
காதலான் மார்பின் கமழ் தார், புனல் வாங்கி,

35

ஏதிலாள் கூந்தலிடைக் கண்டு, 'மற்று அது
தா தா' என்றாளுக்கு, 'தானே புறன் தந்து
வேய்தந்தது'. 'என்னை? விளைந்தமை மற்று அது
நோதலே செய்யேன், நுணங்கு இழையாய்! இச் செவ்வி
போதல் உண்டாம்கொல்? அறிந்து புனல் புணர்த்தது!

40

ஓஒ! பெரிதும் வியப்பு.
கயத் தக்க பூப் பெய்த காமக் கிழமை
நயத் தகு நல்லாளைக் கூடுமா கூடும்
முயக்குக்கு, செவ்வி முலையும் முயக்கத்து
நீரும் அவட்குத் துணை; கண்ணின் நீர் விட்டோய்!

45

நீயும் அவட்குத் துணை.

குலமகளிர் உரிமை மைந்தரோடு நீராடுதல்

பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல்,
மணி எழில், மா மேனி, முத்த முறுவல்,
அணி பவளச் செவ் வாய், அறம் காவற் பெண்டிர்
மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித்

50

தணிவின்று, வையைப் புனல்.

தலைவன் கூற்று

'புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,
எனலூழ் வகை எய்திற்று' என்று ஏற்றுக்கொண்ட
புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,

55

கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால்,
ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து.
என ஆங்கு-

பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்

'ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு' எனப்
பார்ப்பார் ஒழிந்தார், படிவு.

60

'மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று' என்று,
அந்தணர் தோயலர், ஆறு.
'வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென'
ஐயர், வாய்பூசுறார், ஆறு.

வையை நுரை முதலியவற்றோடு பெருகிச் சென்ற வகை

விரைபு இரை விரை நுரை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல்,

65

கரையொடு கடலிடை வரையொடு கடலிடை நிரைநிரை நீர் தரு நுரை,
நுரையுடன் மதகுதொறு இழிதரு புனல் கரை புரளிய செலும்மறி கடல்,
புகும் அளவுஅளவு இயல் இசை சிறை தணிவின்று,வெள்ள மிகை.

திருமருத முன்துறை

வரை பல புரை உயர் கயிறு அணி பயில் தொழில்
மணி அணி யானைமிசை, மைந்தரும் மடவாரும்,

70

நிரைநிரை குழீஇயினர் உடன் சென்று,
குரு மணி யானை இயல் தேர்ப் பொருநன்
திருமருத முன்துறை முற்றம் குறுகி,
தெரி மருதம் பாடுப, பிணி கொள் யாழ்ப் பாணர்.
பாடிப் பாடி, பாய்புனல்

75

ஆடி ஆடி, அருளியவர்
ஊடி ஊடி, உணர்த்தப் புகன்று
கூடிக் கூடி, மகிழ்பு மகிழ்பு,
தேடித் தேடி, சிதைபு சிதைபு,
சூடிச் சூடி, தொழுது தொழுது,

80

மழுபொடு நின்ற மலி புனல் வையை
விழு தகை நல்லாரும் மைந்தரும் ஆடி,
இமிழ்வது போன்றது, இந் நீர்-குணக்குச் சான்றீர்!
முழுவதும் மிச்சிலா உண்டு.

சாந்து, பூ, முதலியவற்றால் நீர் வேறுபடுதல்

சாந்தும், கமழ் தாரும், கோதையும், சுண்ணமும்,

85

கூந்தலும் பித்தையும் சோர்ந்தன
பூவினும், அல்லால், சிறிதானும் நீர் நிறம்
தான் தோன்றாது-இவ் வையை ஆறு.
மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும்
கழு நீர மஞ்சனக் குங்குமக் கலங்கல்

90

வழி நீர்; விழு நீர அன்று-வையை.

பாண்டியன் கூடலாரொடு வையை நீராடிய மாட்சி

வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன்,
உரு கெழு கூடலவரோடு, வையை
வரு புனல் ஆடிய தன்மை பொருவுங்கால்-
இரு முந்நீர் வையம் படித்து என்னை? யான் ஊர்க்கு

95

ஒரு நிலையும் ஆற்ற இயையா! அரு மரபின்,
அந்தர வான் யாற்று, ஆயிரம் கண்ணினான்
இந்திரன் ஆடும் தகைத்து.

இப் பாடல், தொல்காப்பியம், செய்யுள் இயல், சூ. 118 இளம்பூரணர் உரையில் கண்டது.

3. வையை

அறவோர் உள்ளார் அரு மறை காப்ப,
...
செறுநர் விழையாச் செறிந்த நம் கேண்மை
மறு முறையானும் இயைக! நெறி மாண்ட

5

தண் வரல் வையை எமக்கு.

இப் பகுதி தொல்காப்பியம் செய்யுள் இயல், சூ. 121, பேராசிரியர், நச்சினார்க் கினியர் உரைகளில் கண்டது. இப் பகுதி 'அறவோர் உள்ளார்' என்று தொடங்கும் பரிபாடலின் இறுதி என்று தெரிய வருகின்றது.
4. வையை
தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்
பரிமா நிரையின் பரந்தன்று வையை.

இப் பகுதி திருக்குறள் (23) பரிமேலழகர் உரையைப் பற்றிய 'நுண் பொருள் மாலை' யால் தெரிய வருகின்றது.
மண் ஆர்ந்து இசைக்கும் முழவொடு கொண்ட தோள்
கண்ணாது உடன் வீழும் காரிகை! கண்டோர்க்குத்
தம்மொடு நிற்குமோ, நெஞ்சு?

இப் பகுதி தொல்காப்பியம் செய்யுள் இயல், சூ. 120, பேராசிரியர், நச்சினார்க் கினியர் உரைகளில் உள்ளது.
முன்பு உற்று அறியா முதல் புணர்ச்சி மொய் குழலை
இன்பு உற்று அணிந்த இயல் அணியும் வன் பணியும்
நாண் எனும் தொல்லை அணி என்ன நல்நுதலை ... ... ... னந்து

இப் பகுதி நாற்கவிராச நம்பியகப்பொருள் சூ. 129, உரையில் உள்ளது.

7. மதுரை

உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்
புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்
தான் வாட, வாடாத தன்மைத்தே-தென்னவன்
நான்மாடக் கூடல் நகர்.

இதுவும், இதனைத் தொடர்ந்து வரும் ஐந்தும் (7-11) புறத்திரட்டில் நகர் என்னும் பகுதியில் உள்ளன.
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும் பொகுட்டு அனைத்தே, அண்ணல் கோயில்;

5

தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்;
தாது உண் பறவை அனையர், பரிசில் வாழ்நர்;
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை,

10

வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.
தண் தமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்
நின்று நிலைஇப் புகழ் பூத்தல் அல்லது,
குன்றுதல் உண்டோ மதுரை-கொடித் தேரான்
குன்றம் உண்டாகும் அளவு?

10.
செய்யாட்கு இழைத்த திலகம்போல், சீர்க்கு ஒப்ப,
வையம் விளங்கிப் புகழ் பூத்தல் அல்லது,
பொய்யாதல் உண்டோ மதுரை-புனை தேரான்
வையை உண்டாகும் அளவு?

11.
கார்த்திகை காதில் கன மகர குண்டலம்போல்,
சீர்த்து விளங்கித் திருப் பூத்தல் அல்லது,
கோத்தை உண்டாமோ மதுரை-கொடித் தேரான்
வார்த்தை உண்டாகும் அளவு?

12.
ஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப் பார்த்து உவக்கும்-
சேய் மாடக் கூடலும், செவ்வேள் பரங்குன்றும்,
வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார்; மற்றையார்
போவார் ஆர், புத்தேள் உலகு?

13.
'வையை வருபுனல் ஆடல் இனிதுகொல்?
செவ் வேள் கோ குன்றம் நுகர்தல் இனிதுகொல்?
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணையாக
எவ்வாறு செய்வாம்கொல், யாம்?' என, நாளும்,

5

வழி மயக்குற்று மருடல் நெடியான்
நெடு மாடக் கூடற்கு இயல்பு.

இப் பகுதி தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 11 ஆம் சூத்திர உரையில் இளம் பூரணரால் காட்டப்பெற்றுள்ளது. இது பரிபாடலைச் சார்ந்ததாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கின்றனர்.
புதுப்பிக்கபட்ட நாள் : 08-11-2019 15:37:52(இந்திய நேரம்)