தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குறுவழுதியார்

குறுவழுதியார்
150. நெய்தல்
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக்
கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி;
'எல்லினை பெரிது' எனப் பல் மாண் கூறி,
5
பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து,
அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல்
வாட் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை,
கனைத்த நெய்தற் கண் போல் மா மலர்
நனைத்த செருந்திப் போது வாய் அவிழ,
10
மாலை மணி இதழ் கூம்ப, காலைக்
கள் நாறு காவியொடு தண்ணென மலரும்
கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து;
'வாரார்கொல்?' எனப் பருவரும்
தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே!
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. - குறுவழுதியார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 14:54:56(இந்திய நேரம்)