தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மதுரைத் தத்தங் கண்ணனார்

மதுரைத் தத்தங் கண்ணனார்
335. பாலை
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல்
யானும் அறிவென்மன்னே; யானை தன்
5
கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து,
இன்னா வேனில் இன் துணை ஆர,
முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்ட,
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ் சுரம்
அரிய அல்லமன், நமக்கே விரி தார்
10
ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன்
மாட மூதூர் மதிற்புறம் தழீஇ,
நீடு வெயில் உழந்த குறியிறைக் கணைக் கால்,
தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து யாத்த
குடை ஓரன்ன கோள் அமை எருத்தின்
15
பாளை பற்று அழிந்து ஒழிய, புறம் சேர்பு,
வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய,
நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின்,
ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ
வார் உறு கவரியின் வண்டு உண விரிய,
20
முத்தின் அன்ன வெள் வீ தாஅய்,
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி
நகை நனி வளர்க்கும் சிறப்பின், தகை மிகப்
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங் காய்
நீரினும் இனிய ஆகி, கூர் எயிற்று
25
அமிழ்தம் ஊறும் செவ் வாய்,
ஒண் தொடி, குறுமகட் கொண்டனம் செலினே!
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு அழுங்கியது. - மதுரைத் தத்தங் கண்ணனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:10:57(இந்திய நேரம்)