தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விற்றூற்று மூதெயினனார்

விற்றூற்று மூதெயினனார்
37. பாலை
மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக்
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர்
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்,
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப,
5
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி,
தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக்
கிளி போல் காய கிளைத் துணர் வடித்து,
புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை
10
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங் குடை,
கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர,
கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக்
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய
15
பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல,
மருதமர நிழல், எருதொடு வதியும்
காமர் வேனில்மன் இது,
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே!
தலைமகள் தோழிக்கு வன்புறை எதிர் அழிந்து சொல்லியது; பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉம் ஆம்.-விற்றூற்று மூதெயினனார்
136. மருதம்
மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி,
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட்
5
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து,
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி,
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று,
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,
10
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை,
பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி,
15
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி,
மழை பட்டன்ன மணல் மலி பந்தர்,
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி,
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
'உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
20
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற' என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
25
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே பேணி,
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- விற்றூற்று மூதெயினனார்
288. குறிஞ்சி
சென்மதி; சிறக்க, நின் உள்ளம்! நின் மலை
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை,
சாரல் வேங்கைப் படு சினைப் புதுப் பூ
முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை,
5
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல்,
எவ்வம் கூரிய, வைகலும் வருவோய்!
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின்,
எண்மை செய்தனை ஆகுவை நண்ணிக்
கொடியோர் குறுகும் நெடி இருங் குன்றத்து,
10
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர்க்
கயந் தலை மந்தி உயங்கு பசி களைஇயர்,
பார்ப்பின் தந்தை பழச் சுளை தொடினும்,
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து,
15
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக்
கொந்தொடு உதிர்த்த கதுப்பின்,
அம் தீம் கிளவித் தந்தை காப்பே.
பகற்குறிக்கண் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - விற்றூற்று மூதெயினனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:19:22(இந்திய நேரம்)