தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆஅய் எயினன்

ஆஅய் எயினன்
148. குறிஞ்சி
பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை,
கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின்,
வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை
தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி;
5
உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து;
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட!
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென,
காணிய செல்லாக் கூகை நாணி,
10
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை
பெரிதால் அம்ம இவட்கே; அதனால்
மாலை, வருதல் வேண்டும் சோலை
முளை மேய் பெருங் களிறு வழங்கும்
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே.
பகல் வருவானை 'இரவு வருக' என்றது. - பரணர்
181. பாலை
துன் அருங் கானமும் துணிதல் ஆற்றாய்,
பின் நின்று பெயரச் சூழ்ந்தனைஆயின்,
என் நிலை உரைமோ நெஞ்சே! ஒன்னார்
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை
5
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ,
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப,
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு
10
விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன்,
பூ விரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க்
காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி,
எக்கர் இட்ட குப்பை வெண் மணல்
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்
15
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை,
நான் மறை முது நூல் முக்கட் செல்வன்,
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
20
மகர நெற்றி வான் தோய் புரிசைச்
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்
புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர்
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்,
பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென் தோள்,
25
அணங்குசால், அரிவை இருந்த
மணம் கமழ் மறுகின் மணற் பெருங் குன்றே.
இடைச் சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
208. குறிஞ்சி
யாம இரவின் நெடுங் கடை நின்று,
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
5
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்,
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து,
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, 'புள் ஒருங்கு
10
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி,
நிழல் செய்து உழறல் காணேன், யான்' எனப்
படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து,
உரு வினை நன்னன், அருளான், கரப்ப,
15
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர்
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல்,
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை
அகுதை கிளைதந்தாங்கு, மிகு பெயல்
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல,
20
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி,
நல்கினள், வாழியர், வந்தே ஓரி
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக்
கார் மலர் கடுப்ப நாறும்,
ஏர் நுண், ஓதி மாஅயோளே!
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
396. மருதம்
தொடுத்தேன், மகிழ்ந! செல்லல் கொடித் தேர்ப்
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென,
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்,
'அஞ்சல்' என்ற ஆஅய் எயினன்
5
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி,
தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது;
தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி,
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து,
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப, நின்
10
மார்பு தருகல்லாய்; பிறன் ஆயினையே;
இனி யான் விடுக்குவென் அல்லென்; மந்தி,
பனி வார் கண்ணள், பல புலந்து உறைய,
அடுந் திறல் அத்தி ஆடு அணி நசைஇ,
நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு, நின்
15
மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; சினைஇ,
ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத்
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து,
வெஞ் சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே!
காதற்பரத்தை தலைமகற்குச் சொல்லியது. - பரணர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:23:39(இந்திய நேரம்)