தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிமந்தி

ஆதிமந்தி
45. பாலை
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப,
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து,
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு,
5
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்
காடு இறந்தனரே, காதலர். மாமை,
அரி நுண் பசலை பாஅய், பீரத்து
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே,
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
10
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி,
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே,
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
ஆதிமந்தி போல, பேதுற்று
15
அலந்தனென் உழல்வென்கொல்லோ பொலந்தார்,
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்,
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போல,
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே!
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்
76. மருதம்
மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க,
தண் துறை ஊரன் எம் சேரி வந்தென
இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு
நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை
5
அவை புகு பொருநர் பறையின், ஆனாது,
கழறுப என்ப, அவன் பெண்டிர்; 'அந்தில்,
கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன்,
வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல்,
சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ? என,
10
ஆதிமந்தி பேதுற்று இனைய,
சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும்
அம் தண் காவிரி போல,
கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின், யானே.
'தலைமகனை நயப்பித்துக் கொண்டாள்' என்று கழறக் கேட்ட பரத்தை,தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - பரணர்
135. பாலை
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க,
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப்
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி,
எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து,
5
ஆதிமந்தியின் அறிவு பிறிதுஆகி,
பேதுற்றிசினே காதல்அம் தோழி!
காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி,
ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ,
கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம்
10
காடு இறந்தனரே, காதலர்; அடுபோர்,
வீயா விழுப் புகழ், விண் தோய் வியன் குடை,
ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போலக்
கலங்கின்றுமாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. - பரணர்
222. குறிஞ்சி
வான் உற நிவந்த நீல் நிறப் பெரு மலைக்
கான நாடன் உறீஇய நோய்க்கு, என்
மேனி ஆய் நலம் தொலைதலின், மொழிவென்;
முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண்,
5
கழாஅர்ப் பெருந் துறை விழவின் ஆடும்,
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்,
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇ,
தாழ் இருங் கதுப்பின் காவிரி வவ்வலின்,
மாதிரம் துழைஇ, மதி மருண்டு அலந்த
10
ஆதிமந்தி காதலற் காட்டி,
படு கடல் புக்க பாடல்சால் சிறப்பின்
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்,
சென்மோ வாழி, தோழி! பல் நாள்,
உரவு உரும் ஏறொடு மயங்கி,
15
இரவுப் பெயல் பொழிந்த ஈர்ந் தண் ஆறே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லியது. - பரணர்
236. மருதம்
மணி மருள் மலர முள்ளி அமன்ற,
துணி நீர், இலஞ்சிக் கொண்ட பெரு மீன்
அரி நிறக் கொழுங் குறை வௌவினர் மாந்தி,
வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை,
5
இடை நிலம் நெரிதரு நெடுங் கதிர்ப் பல் சூட்டுப்
பனி படு சாய்ப் புறம் பரிப்ப, கழனிக்
கருங் கோட்டு மாஅத்து அலங்கு சினைப் புதுப் பூ
மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன்
காமம் பெருமை அறியேன், நன்றும்
10
உய்ந்தனென் வாழி, தோழி! அல்கல்
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப,
கொடுங் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை
அறியாமையின் அழிந்த நெஞ்சின்,
'ஏற்று இயல் எழில் நடைப் பொலிந்த மொய்ம்பின்,
15
தோட்டு இருஞ் சுரியல் மணந்த பித்தை,
ஆட்டன் அத்தியைக் காணீரோ?' என
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
'கடல் கொண்டன்று' என, 'புனல் ஒளித்தன்று' என,
கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த
20
ஆதிமந்தி போல,
ஏதம் சொல்லி, பேது பெரிது உறலே.
ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பரணர்
396. மருதம்
தொடுத்தேன், மகிழ்ந! செல்லல் கொடித் தேர்ப்
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென,
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்,
'அஞ்சல்' என்ற ஆஅய் எயினன்
5
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி,
தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது;
தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி,
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து,
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப, நின்
10
மார்பு தருகல்லாய்; பிறன் ஆயினையே;
இனி யான் விடுக்குவென் அல்லென்; மந்தி,
பனி வார் கண்ணள், பல புலந்து உறைய,
அடுந் திறல் அத்தி ஆடு அணி நசைஇ,
நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு, நின்
15
மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; சினைஇ,
ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத்
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து,
வெஞ் சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே!
காதற்பரத்தை தலைமகற்குச் சொல்லியது. - பரணர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:24:42(இந்திய நேரம்)