தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தென்னவன்

தென்னவன்

 

13. பாலை
தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத்
தெறல் அரு மரபின் கடவுட் பேணி,
குறவர் தந்த சந்தின் ஆரமும்,
5
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும்
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது,
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
10
வள் வாய் அம்பின், கோடைப் பொருநன்
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்,
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு,
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து,
சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின்,
15
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை,
கவவு இன்புறாமைக் கழிக வள வயல்,
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல்
20
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர,
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை,
இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த
வெண் குருகு நரல, வீசும்
நுண் பல் துவலைய தண் பனி நாளே!
பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது; உடம்பட்ட தூஉம் ஆம். - பெருந்தலைச் சாத்தனார்

 

138. குறிஞ்சி
இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி!
குவளை உண்கண் தெண் பனி மல்க,
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை
பிறிது ஒன்று கடுத்தனள்ஆகி வேம்பின்
5
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி,
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை,
திருந்துஇலை நெடு வேற் தென்னவன் பொதியில்,
அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின்
ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது,
10
உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ,
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு
தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும்
ஆடினர் ஆதல் நன்றோ? நீடு
நின்னொடு தெளித்த நல் மலை நாடன்
15
குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி,
நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள்,
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட்
கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி
நல் நிறம் மருளும் அரு விடர்
20
இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே.
தலைமகன் சிறைப்புறத்தானாகத், தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.- எழூஉப் பன்றி நாகன் குமரனார்

 

342. குறிஞ்சி
ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை;
புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்கு யான்
கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே! தெனாஅது
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை
5
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்,
ஏவல் இளையர் தலைவன், மேவார்
அருங் குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப்
பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை,
10
கெடாஅ, நல் இசைத் தென்னன், தொடாஅ
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ்
வரையரமகளிரின் அரியள்,
அவ் வரி அல்குல் அணையாக்காலே!
அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:39:48(இந்திய நேரம்)