தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அளிதோ தானே

அளிதோ தானே

 

239. பாலை
அளிதோதானே; எவன் ஆவதுகொல்?
மன்றும் தோன்றாது; மரனும் மாயும்
'புலி என உலம்பும் செங் கண் ஆடவர்,
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர்,
5
எல் ஊர் எறிந்து, பல் ஆத் தழீஇய
விளி படு பூசல் வெஞ் சுரத்து இரட்டும்
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி,
புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின்,
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம்
10
புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய,
ஈட்டு அருங்குரைய பொருள்வயிற் செலினே,
நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்?' என,
குறு நெடும் புலவி கூறி, நம்மொடு
நெருநலும் தீம் பல மொழிந்த
15
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே!
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:27:44(இந்திய நேரம்)