தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மாதிரம் புதையப் பாஅய்

மாதிரம் புதையப் பாஅய்

 

364. முல்லை
மாதிரம் புதையப் பாஅய், கால் வீழ்த்து,
ஏறுடைப் பெரு மழை பொழிந்தென, அவல்தோறு
ஆடு களப் பறையின் வரி நுணல் கறங்க,
ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன
5
நீடு இணர்க் கொன்றை கவின் பெற, காடு உடன்
சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ,
முல்லை இல்லமொடு மலர, கல்ல
பகு வாய்ப் பைஞ் சுனை மா உண மலிர,
கார் தொடங்கின்றே காலை; காதலர்
10
வெஞ் சின வேந்தன் வியன் பெரும் பாசறை,
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்;
யாது செய்வாம்கொல்? தோழி! நோதகக்
கொலை குறித்தன்ன மாலை
துனைதரு போழ்தின், நீந்தலோ அரிதே!
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:37:10(இந்திய நேரம்)