தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முருக்கம்பூ(கவிர்)
3. பாலை
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,
5
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
10
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
15
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய்,
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?
முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.
- எயினந்தை மகனார் இளங்கீரனார்.
41. பாலை
வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப,
கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப,
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து,
5
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர,
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
ஓதைத் தெள் விளி புலம்தொறும் பரப்ப,
கோழிணர் எதிரிய மரத்த, கவினி,
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில்,
10
நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய்,
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த
நல் தோள் நெகிழ, வருந்தினள்கொல்லோ
மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன
15
அம் கலுழ் மாமை கிளைஇய,
நுண் பல் தித்தி, மாஅயோளே?
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து, கிழத்தியை நினைந்து சொல்லியது. - குன்றியனார்
99. பாலை
வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின்
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில்
மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
5
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை
அதிரல் பரந்த அம் தண் பாதிரி
உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ
மராஅ மலரொடு விராஅய், பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்
10
நன்றே, கானம்; நயவரும் அம்ம;
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின்,
பிடி மிடை, களிற்றின் தோன்றும்
குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே!
உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ
229. பாலை
பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன்
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென,
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,
கயந் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி
5
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன்
பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண்,
நெடுஞ் சேண் இடைய குன்றம் போகி,
பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள்
நம் இன்று ஆயினும் முடிக, வல்லென,
10
பெருந் துனி மேவல்! நல்கூர் குறுமகள்!
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர்
பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப,
பொன் ஏர் பசலை ஊர்தர, பொறி வரி
நல் மா மேனி தொலைதல் நோக்கி,
15
இனையல் என்றி; தோழி! சினைய
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப்
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து,
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை,
செங் கண் இருங் குயில் நயவரக் கூஉம்
20
இன் இளவேனிலும் வாரார்,
'இன்னே வருதும்' எனத் தெளித்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள், வன்புறை எதிர் அழிந்து, சொல்லியது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
277. பாலை
தண் கதிர் மண்டிலம் அவிர், அறச் சாஅய்ப்
பகல் அழி தோற்றம் போல, பையென
நுதல் ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார்,
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக,
5
கடையல்அம் குரல வாள் வரி உழுவை
பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது,
இரும் பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர்,
சிறு கண், பன்றி வரு திறம் பார்க்கும்
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை,
10
பொத்துடை மரத்த புகர் படு நீழல்,
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும்,
ஈரம் இல், வெஞ் சுரம் இறந்தோர் நம்வயின்
வாரா அளவை ஆயிழை! கூர் வாய்
அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர்
15
மனை உறை கோழி மறனுடைச் சேவல்
போர் புரி எருத்தம் போலக் கஞலிய
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி,
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
வந்தன்று அம்ம, தானே;
20
வாரார் தோழி! நம் காதலோரே.
தலைமகன் பிரிவின்கண் தலைமகள், தோழிக்குப் பருவம் கண்டு அழிந்து,சொல்லி யது. - கருவூர் நன்மார்பன்
317. பாலை
' "மாக விசும்பின் மழை தொழில் உலந்தென,
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி,
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க,
குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று
5
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும்
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன்
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப,
பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல,
10
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப,
துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி
புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும்
ஆன் ஏமுற்ற காமர் வேனில்,
15
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக்
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம்" என்ற பருவம் ஆண்டை
இல்லைகொல்?' என மெல்ல நோக்கி,
நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு
20
உள்ளிய மருங்கின் உள்ளம் போல,
வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து
என்னுழியதுகொல் தானே பல் நாள்
அன்னையும் அறிவுற அணங்கி,
நல் நுதல் பாஅய பசலை நோயே?
தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - வடமோதங் கிழார்
362. குறிஞ்சி
பாம்புடை விடர பனி நீர் இட்டுத் துறைத்
தேம் கலந்து ஒழுக, யாறு நிறைந்தனவே;
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து,
பைங் கண் வல்லியம் கல் அளைச் செறிய,
5
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு
கடி கொள, வழங்கார் ஆறே; ஆயிடை
எல்லிற்று என்னான், வென் வேல் ஏந்தி,
நசை தர வந்த நன்னராளன்
நெஞ்சு பழுதாக, வறுவியன் பெயரின்,
10
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே;
எவன்கொல்? வாழி, தோழி! நம் இடை முலைச்
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும்,
சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிப்பின்
இலங்கு வெள் அருவி போலவும்,
15
நிலம் கொண்டனவால், திங்கள் அம் கதிரே!
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - வெள்ளிவீதியார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:36:51(இந்திய நேரம்)