தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Agananooru

கடவுள் வாழ்த்து

கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்

தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;

மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;

நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,

கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்

5

வேலும் உண்டு, அத் தோலாதோற்கே;

ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே

செவ் வான் அன்ன மேனி, அவ் வான்

இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று,

எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை,

10

முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,

மூவா அமரரும் முனிவரும் பிறரும்

யாவரும் அறியாத் தொல் முறை மரபின்,

வரி கிளர் வயமான் உரிவை தைஇய,

யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன்

15

தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே.

 
 

-பாரதம் பாடிய பெருந்தேவனார்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 19:54:48(இந்திய நேரம்)