தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கோப்பெரும் சோழன்

கோப்பெரும் சோழன்
214
'செய்குவம்கொல்லோ, நல்வினை?' எனவே
ஐயம் அறாஅர், கசடு ஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
5
குறும்பூழ் வேட்டுவன் வறுங் கையும் வருமே:
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு,
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்,
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின்,
10
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
மாறிப் பிறவார் ஆயினும், இமயத்துக்
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு,
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே.
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
அவன் வடக்கிருந்தான் சொற்றது.

215
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ,
ஆய்மகள் அட்ட அம் புளி மிதவை
5
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே;
செல்வக் காலை நிற்பினும்,
அல்லற் காலை நில்லலன்மன்னே.
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
கோப்பெருஞ்சோழன், 'பிசிராந்தையார் வாரார்' என்ற சான்றோர்க்கு, 'அவர் வருவார்' என்று சொல்லியது.

216
'கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய,
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும்,
அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல்' என்று,
5
ஐயம் கொள்ளன்மின், ஆர் அறிவாளீர்!
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே;
தன் பெயர் கிளக்கும்காலை, 'என் பெயர்
பேதைச் சோழன்' என்னும், சிறந்த
10
காதற் கிழமையும் உடையன்; அதன்தலை,
இன்னது ஓர் காலை நில்லலன்;
இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே!
திணையும் துறையும் அவை.
அவன் வடக்கிருந்தான், 'பிசிராந்தையார்க்கு இடன் ஒழிக்க!' என்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:15:44(இந்திய நேரம்)