கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரன், கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனா
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரன், கோனாட்டு
எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனா
எம் கோன் இருந்த கம்பலை மூதூர்,
உடையோர் போல இடையின்று குறுகி,
செம்மல் நாள் அவை அண்ணாந்து புகுதல்
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து,
வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவி கை வண்மைக்
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்கும் காலை,
பாசிலைத் தொடுத்த, உவலைக் கண்ணி,
மாசு உண் உடுக்கை, மடி வாய், இடையன்
சிறு தலை ஆயமொடு குறுகல்செல்லாப்
புலி துஞ்சு வியன் புலத்தற்றே
வலி துஞ்சு தடக் கை அவனுடை நாடே.
சேரமான் குட்டுவன் கோதையைக்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரன்
பாடியது.
கொண்டைக் கூழைத் தண் தழைக் கடைசியர்
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்,
மலங்கு மிளிர், செறுவின் தளம்பு தடிந்து இட்ட
பழன வாளைப் பரூஉக் கண் துணியல்
புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறை ஆக,
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி,
நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும்
வன் கை வினைஞர் புன் தலைச் சிறாஅர்
தெங்கு படு வியன் பழம் முனையின், தந்தையர்
குறைக்கண் நெடும் போர் ஏறி, விசைத்து எழுந்து
செழுங் கோள் பெண்ணைப் பழம் தொட முயலும்,
வைகல் யாணர், நல் நாட்டுப் பொருநன்,
எஃகு விளங்கு தடக் கை இயல் தேர்ச் சென்னி,
சிலைத் தார் அகலம் மலைக்குநர் உளர்எனின்,
தாம் அறிகுவர் தமக்கு உறுதி; யாம் அவன்
எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர்
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது,
திருந்து அடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்டல், அதனினும் இலமே.
திணை வாகை; துறை அரச வாகை.
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய
நலங்கிள்ளி சேட் சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன்
மதுரைக் குமரனார் பாடியது.
நீயே, அமர் காணின் அமர் கடந்து, அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்,
வாஅள் வாய்த்த வடு ஆழ் யாக்கையொடு,
கேள்விக்கு இனியை; கட்கு இன்னாயே:
அவரே, நிற் காணின் புறம் கொடுத்தலின்,
ஊறு அறியா மெய் யாக்கையொடு,
கண்ணுக்கு இனியர்; செவிக்கு இன்னாரே:
அதனால், நீயும் ஒன்று இனியை; அவரும் ஒன்று இனியர்;
ஒவ்வா யா உள, மற்றே? வெல் போர்க்
கழல் புனை திருந்து அடிக் கடு மான் கிள்ளி!
நின்னை வியக்கும் இவ் உலகம்; அஃது
என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே.
ஏனாதி திருக்கிள்ளியைக் கோனாட்டு
எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே;
'இல்' என மறுக்கும் சிறுமையும் இலனே;
இறை உறு விழுமம் தாங்கி, அமரகத்து
இரும்பு சுவைக் கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து,
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி,
வடு இன்று வடிந்த யாக்கையன், கொடை எதிர்ந்து,
ஈர்ந்தையோனே, பாண் பசிப் பகைஞன்;
இன்மை தீர வேண்டின், எம்மொடு
நீயும் வம்மோ? முது வாய் இரவல!
யாம் தன் இரக்கும்காலை, தான் எம்
உண்ணா மருங்குல் காட்டி, தன் ஊர்க்
கருங் கைக் கொல்லனை இரக்கும்,
'திருந்து இலை நெடு வேல் வடித்திசின்' எனவே.
திணையும் துறையும் அவை; துறை
பாணாற்றுப் படையும் ஆம்.
ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனைக்
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்
பாடியது.
வளி நடந்தன்ன வாச் செலல் இவுளியொடு
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ,
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ,
உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ,
மண் கெழு தானை, ஒண் பூண், வேந்தர்
வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப்படூஉமோரே,
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த
குறு நறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு,
புன் புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம் வயின்
பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே;
மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும்
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்;
நல் அறிவு உடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து, நனி பெரிதே.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய
பெருந்திருமாவளவன் பரிசில் நீட்டித்தானைக் கோனாட்டு
எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின்,
ஒலி கதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன்,
வலி துஞ்சு தடக் கை வாய் வாள் குட்டுவன்,
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும்,
உள்ளல் ஓம்புமின், உயர் மொழிப் புலவீர்!
யானும் இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை,
ஒரு கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி,
பாடு இமிழ் முரசின் இயல் தேர்த் தந்தை
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி,
கொன்று சினம் தணியாப் புலவு நாறு மருப்பின்
வெஞ் சின வேழம் நல்கினன்; அஞ்சி
யான் அது பெயர்த்தனெனாக, தான் அது
சிறிது என உணர்ந்தமை நாணி, பிறிதும் ஓர்
பெருங் களிறு நல்கியோனே; அதற்கொண்டு,
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்புறினும்,
'துன் அரும் பரிசில் தரும்' என,
என்றும் செல்லேன், அவன் குன்று கெழு நாட்டே.
கடைநிலை ஆயின எல்லாம் பாடாண்
திணை.
சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக்
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்
பாடியது.
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:17:25(இந்திய நேரம்)