தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இள வெளிமான்

இள வெளிமான்
207
எழு இனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ,
பருகு அன்ன வேட்கை இல்வழி,
அருகில் கண்டும் அறியார் போல,
அகம் நக வாரா முகன் அழி பரிசில்
5
தாள் இலாளர் வேளார் அல்லர்?
'வருக' என வேண்டும் வரிசையோர்க்கே
பெரிதே உலகம்; பேணுநர் பலரே;
மீளி முன்பின் ஆளி போல,
உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென
10
நோவாதோன்வயின் திரங்கி,
வாயா வன் கனிக்கு உலமருவோரே.
திணையும் துறையும் அவை.
வெளிமான் துஞ்சிய பின், அவன் தம்பி இள வெளிமானை, 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.

237
'நீடு வாழ்க?' என்று, யான் நெடுங் கடை குறுகி,
பாடி நின்ற பசி நாட்கண்ணே,
'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி,
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
5
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என
நச்சி இருந்த நசை பழுதாக,
அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு,
'அளியர்தாமே ஆர்க' என்னா
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய,
10
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
வாழைப் பூவின் வளை முறி சிதற,
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க,
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை,
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே:
15
ஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப்
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின்,
எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக்
கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று,
நனியுடைப் பரிசில் தருகம்,
20
எழுமதி, நெஞ்சே! துணிபு முந்துறுத்தே.
திணையும் துறையும் அவை.
வெளிமானுழைச் சென்றார்க்கு, அவன் துஞ்ச, இள வெளிமான் சிறிது கொடுப்ப, கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:51:58(இந்திய நேரம்)