தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி

சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி
80
இன் கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்,
மைந்துடை மல்லன் மத வலி முருக்கி,
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால்
வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே
5
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப்
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணை முயலும் யானை போல,
இரு தலை ஒசிய எற்றி,
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே.
திணை தும்பை; துறை எருமை மறம்.
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது.

81
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர்தாமே ஆர் நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
5
கவி கை மள்ளன் கைப்பட்டோரே?
திணை வாகை; துறை அரச வாகை.
அவனை அவர் பாடியது.

82
சாறு தலைக்கொண்டென, பெண் ஈற்று உற்றென,
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று,
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
5
ஊர் கொள வந்த பொருநனொடு,
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே!
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

83
அடி புனை தொடுகழல், மை அணல் காளைக்கு என்
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே;
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே;
என் போல் பெரு விதுப்புறுக என்றும்
5
ஒரு பாற் படாஅதாகி,
இரு பாற் பட்ட இம் மையல் ஊரே!
திணை கைக்கிளை; துறை பழிச்சுதல்.
அவனைப் பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது.

84
என்னை, புற்கை உண்டும் பெருந் தோளன்னே;
யாமே, புறஞ் சிறை இருந்தும் பொன் அன்னம்மே;
போர் எதிர்ந்து என்னை போர்க் களம் புகினே,
கல்லென் பேர் ஊர் விழவுடை ஆங்கண்,
5
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன்னன்னே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

85
என்னைக்கு ஊர் இஃது அன்மையானும்,
என்னைக்கு நாடு இஃது அன்மையானும்,
'ஆடு ஆடு' என்ப, ஒரு சாரோரே;
'ஆடு அன்று' என்ப, ஒரு சாரோரே;
5
நல்ல, பல்லோர் இரு நன் மொழியே;
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல்,
முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று,
யான் கண்டனன், அவன் ஆடு ஆகுதலே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:10:02(இந்திய நேரம்)