தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வையாவிக் கோப்பெரும் பேகன்

வையாவிக் கோப்பெரும் பேகன்
141
'பாணன் சூடிய பசும் பொன் தாமரை
மாண் இழை விறலி மாலையொடு விளங்க,
கடும் பரி நெடுந் தேர் பூட்டு விட்டு அசைஇ,
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்!
5
யாரீரோ?' என, வினவல் ஆனா,
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல!
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே,
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே,
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும்
10
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும்,
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ,
கடாஅ யானைக் கலி மான் பேகன்,
'எத் துணை ஆயினும் ஈத்தல் நன்று' என,
மறுமை நோக்கின்றோ அன்றே,
15
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே.
திணை அது; துறை பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையும் ஆம்.
வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.

142
அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும்,
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்,
வரையா மரபின் மாரிபோல,
கடாஅ யானைக் கழல் கால் பேகன்
5
கொடைமடம் படுதல் அல்லது,
படைமடம் படான், பிறர் படை மயக்குறினே.
திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

143
'மலை வான் கொள்க!' என, உயர் பலி தூஉய்,
'மாரி ஆன்று, மழை மேக்கு உயர்க!' எனக்
கடவுள் பேணிய குறவர் மாக்கள்,
பெயல் கண்மாறிய உவகையர், சாரல்
5
புனத் தினை அயிலும் நாட! சினப் போர்க்
கை வள் ஈகைக் கடு மான் பேக!
யார்கொல் அளியள்தானே நெருநல்,
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தென,
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி
10
நளி இருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண்,
வாயில் தோன்றி, வாழ்த்தி நின்று,
நின்னும் நின் மலையும் பாட, இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்,
முலையகம் நனைப்ப, விம்மி,
15
குழல் இனைவதுபோல் அழுதனள், பெரிதே?
திணை பெருந்திணை; துறை குறுங்கலி; தாபதநிலையும் ஆம்.
அவனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக அவனைக் கபிலர் பாடியது.

144
அருளாய் ஆகலோ கொடிதே; இருள் வர,
சீறியாழ் செவ்வழி பண்ணி, யாழ நின்
கார் எதிர் கானம் பாடினேமாக,
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண்
5
கலுழ்ந்து, வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப,
இனைதல் ஆனாளாக, 'இளையோய்!
கிளையைமன், எம் கேள் வெய்யோற்கு?' என,
யாம் தன் தொழுதனம் வினவ, காந்தள்
முகை புரை விரலின் கண்ணீர் துடையா,
10
'யாம் அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள், இனி:
எம் போல் ஒருத்தி நலன் நயந்து, என்றும்,
வரூஉம்' என்ப 'வயங்கு புகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு,
முல்லை வேலி, நல் ஊரானே.'
திணையும் துறையும் அவை.
அவனை அவள் காரணமாகப் பரணர் பாடியது.

145
'மடத் தகை மா மயில் பனிக்கும்' என்று அருளி,
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை,
கடாஅ யானைக் கலி மான் பேக!
பசித்தும் வாரேம்; பாரமும் இலமே;
5
களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்
நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி,
'அறம் செய்தீமோ, அருள் வெய்யோய்!' என,
இஃது யாம் இரந்த பரிசில்: அஃது இருளின்,
இன மணி நெடுந் தேர் ஏறி,
10
இன்னாது உறைவி அரும் படர் களைமே!
திணையும் துறையும் அவை.
அவனை அவள் காரணமாக அவர் பாடியது.

146
அன்ன ஆக: நின் அருங் கல வெறுக்கை
அவை பெறல் வேண்டேம்; அடு போர்ப் பேக!
சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன் புல
நல் நாடு பாட, என்னை நயந்து
5
பரிசில் நல்குவைஆயின், குரிசில்! நீ
நல்காமையின் நைவரச் சாஅய்,
அருந் துயர் உழக்கும் நின் திருந்துஇழை அரிவை
கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன,
ஒலி மென் கூந்தல் கமழ் புகை கொளீஇ,
10
தண் கமழ் கோதை புனைய,
வண் பரி நெடுந் தேர் பூண்க, நின் மாவே!
திணையும் துறையும் அவை.
அவனை அவள் காரணமாக அரிசில் கிழார் பாடியது.

147
கல் முழை அருவிப் பல் மலை நீந்தி,
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை,
கார் வான் இன் உறை தமியள் கேளா,
நெருநல் ஒரு சிறைப் புலம்புகொண்டு உறையும்
5
அரி மதர் மழைக் கண், அம் மா அரிவை
நெய்யொடு துறந்த மை இருங் கூந்தல்
மண்ணுறு மணியின் மாசு அற மண்ணி,
புது மலர் கஞல, இன்று பெயரின்,
அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே!
திணையும் துறையும் அவை.
அவள் காரணமாக அவனைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:29:40(இந்திய நேரம்)