தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தூங்கு கையான்

தூங்கு கையான்
22
தூங்கு கையான் ஓங்கு நடைய,
உறழ் மணியான் உயர் மருப்பின,
பிறை நுதலான் செறல் நோக்கின,
பா அடியான் பணை எருத்தின,
5
தேன் சிதைந்த வரை போல,
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாத்து,
அயறு சோரும் இருஞ் சென்னிய,
மைந்து மலிந்த மழ களிறு
கந்து சேர்பு நிலைஇ வழங்க;
10
பாஅல் நின்று கதிர் சோரும்
வான் உறையும் மதி போலும்
மாலை வெண் குடை நீழலான்,
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க;
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
15
ஆய் கரும்பின் கொடிக் கூரை,
சாறு கொண்ட களம் போல,
வேறு வேறு பொலிவு தோன்ற;
குற்று ஆனா உலக்கையான்
கலிச் சும்மை வியல் ஆங்கண்,
20
பொலந் தோட்டுப் பைந் தும்பை
மிசை அலங்கு உளைய பனைப் போழ் செரீஇ,
சின மாந்தர் வெறிக் குரவை
ஓத நீரின் பெயர்பு பொங்க;
வாய் காவாது பரந்து பட்ட
25
வியன் பாசறைக் காப்பாள!
வேந்து தந்த பணி திறையான்
சேர்ந்தவர்தம் கடும்பு ஆர்த்தும்,
ஓங்கு கொல்லியோர், அடு பொருந!
வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய்!
30
வாழிய, பெரும! நின் வரம்பு இல் படைப்பே,
நிற் பாடிய வயங்கு செந் நாப்
பின் பிறர் இசை நுவலாமை,
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ!
'மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
35
புத்தேள் உலகத்து அற்று' எனக் கேட்டு வந்து,
இனிது கண்டிசின்; பெரும! முனிவு இலை,
வேறு புலத்து இறுக்கும் தானையொடு,
சோறு பட நடத்தி நீ துஞ்சாய்மாறே!
திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:34:45(இந்திய நேரம்)