தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நீண்டு ஒலி அழுவம்

நீண்டு ஒலி அழுவம்
161
நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு,
ஈண்டு செலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇ,
பெரு மலை அன்ன தோன்றல, சூல் முதிர்பு,
உரும் உரறு கருவியொடு, பெயல் கடன் இறுத்து,
5
வள மழை மாறிய என்றூழ்க் காலை,
மன்பதை எல்லாம் சென்று உண, கங்கைக்
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றியாங்கு,
எமக்கும் பிறர்க்கும் செம்மலைஆகலின்,
'அன்பு இல் ஆடவர் கொன்று, ஆறு கவர,
10
சென்று தலைவருந அல்ல, அன்பு இன்று,
வன் கலை தெவிட்டும், அருஞ் சுரம் இறந்தோர்க்கு,
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர' எனக்
கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து,
அருந் துயர் உழக்கும் என் பெருந் துன்புறுவி நின்
15
தாள் படு செல்வம் காண்தொறும் மருள,
பனை மருள் தடக் கையொடு முத்துப் பட முற்றிய
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு,
ஒளி திகழ் ஓடை பொலிய, மருங்கில்
படு மணி இரட்ட, ஏறிச் செம்மாந்து,
20
செலல் நசைஇ உற்றனென் விறல் மிகு குருசில்!
இன்மை துரப்ப, இசைதர வந்து, நின்
வண்மையின் தொடுத்த என் நயந்தனை கேண்மதி!
வல்லினும், வல்லேன்ஆயினும், வல்லே,
என் அளந்து அறிந்தனை நோக்காது, சிறந்த
25
நின் அளந்து அறிமதி, பெரும! என்றும்
வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்து அருந்திப்
பல் பொறிக் கொண்ட ஏந்து எழில் அகலம்
மாண் இழை மகளிர் புல்லுதொறும் புகல,
நாள் முரசு இரங்கும் இடனுடை வரைப்பில் நின்
30
தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப,
வாள் அமர் உழந்த நின் தானையும்,
சீர் மிகு செல்வமும், ஏத்துகம் பலவே.
திணை அது; துறை பரிசில் துறை.
அவனை அவர் பாடிப் பகடு பெற்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:41:33(இந்திய நேரம்)