தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வரை புரையும் மழ களிற்றின்

வரை புரையும் மழ களிற்றின்
38
வரை புரையும் மழ களிற்றின் மிசை,
வான் துடைக்கும் வகைய போல,
விரவு உருவின கொடி நுடங்கும்
வியன் தானை விறல் வேந்தே!
5
நீ, உடன்று நோக்கும்வாய் எரி தவழ,
நீ, நயந்து நோக்கும்வாய் பொன் பூப்ப,
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்,
வெண் திங்களுள் வெயில் வேண்டினும்,
வேண்டியது விளைக்கும் ஆற்றலைஆகலின்,
10
நின் நிழல் பிறந்து, நின் நிழல் வளர்ந்த,
எம் அளவு எவனோ மற்றே? 'இன் நிலைப்
பொலம் பூங் காவின் நல் நாட்டோரும்
செய் வினை மருங்கின் எய்தல் அல்லதை,
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
15
கடவது அன்மையின், கையறவு உடைத்து' என,
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்,
நின் நாடு உள்ளுவர், பரிசிலர்
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத்து எனவே.
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
அவன், 'எம் உள்ளீர்? எம் நாட்டீர்?' என்றாற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:04:28(இந்திய நேரம்)