தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பசு (ஆ,ஆன், நிரை, கறவை)

பசு (ஆ,ஆன், நிரை, கறவை)
5
எருமை அன்ன கருங் கல் இடை தோறு,
ஆனின் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை! நீயோ, பெரும!
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்:
5
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,
குழவி கொள்பவரின், ஓம்புமதி!
அளிதோ தானே; அது பெறல் அருங் குரைத்தே.
திணை பாடாண்திணை; துறை செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.
சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக!' என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது.

9
'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
5
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என,
அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும்
எம் கோ, வாழிய, குடுமி தம் கோச்
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த,
10
முந்நீர் விழவின், நெடியோன்
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே!
திணையும் துறையும் அவை.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

34
'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்,
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்,
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என,
5
'நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என,
அறம் பாடின்றே ஆயிழை கணவ!
'காலை அந்தியும், மாலை அந்தியும்,
புறவுக் கரு அன்ன புன் புல வரகின்
10
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி,
குறு முயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு,
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து,
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி,
அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு
15
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்,
எம் கோன், வளவன் வாழ்க!' என்று, நின்
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின்,
படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்;
யானோ தஞ்சம்; பெரும! இவ் உலகத்து,
20
சான்றோர் செய்த நன்று உண்டாயின்,
இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றி,
கொண்டல் மா மழை பொழிந்த
நுண் பல் துளியினும் வாழிய, பலவே!
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

117
மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும்,
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,
வயலகம் நிறைய, புதல் பூ மலர,
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க் கண்
5
ஆமா நெடு நிரை நன் புல் ஆர,
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி,
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே
பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
10
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

138
ஆனினம் கலித்த அதர் பல கடந்து,
மானினம் கலித்த மலை பின் ஒழிய,
மீனினம் கலித்த துறை பல நீந்தி,
உள்ளி வந்த, வள் உயிர்ச் சீறியாழ்,
5
சிதாஅர் உடுக்கை, முதாஅரிப் பாண!
நீயே, பேர் எண்ணலையே; நின் இறை,
'மாறி வா' என மொழியலன் மாதோ;
ஒலி இருங் கதுப்பின் ஆயிழை கணவன்
கிளி மரீஇய வியன் புனத்து
10
மரன் அணி பெருங் குரல் அனையன் ஆதலின்,
நின்னை வருதல் அறிந்தனர் யாரே?
திணை அது; துறை பாணாற்றுப்படை.
அவனை மருதன் இளநாகனார் பாடியது.

152
'வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ,
புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
5
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்,
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்,
புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான்; வெறுக்கை நன்கு உடையன்;
10
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்,
சாரல் அருவிப் பய மலைக் கிழவன்,
ஓரி கொலோ? அல்லன்கொல்லோ?
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்
மண் முழா அமைமின்; பண் யாழ் நிறுமின்;
15
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்;
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்;
பதலை ஒரு கண் பையென இயக்குமின்;
மதலை மாக் கோல் கைவலம் தமின்' என்று,
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி,
20
மூ ஏழ் துறையும் முறையுளிக் கழிப்பி,
'கோ' எனப் பெயரிய காலை, ஆங்கு அது
தன் பெயர் ஆகலின் நாணி, மற்று, 'யாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர்' என,
25
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி,
தன் மலைப் பிறந்த தா இல் நன் பொன்,
பல் மணிக் குவையொடும் விரைஇ, 'கொண்ம்' என,
30
சுரத்திடை நல்கியோனே விடர்ச் சிமை
ஓங்கு இருங் கொல்லிப் பொருநன்,
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே!
திணை அது; துறை பரிசில் விடை.
வல் வில் ஓரியை வன்பரணர் பாடியது.

168
அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக்
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு,
கடுங் கண் கேழல் உழுத பூழி,
5
நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர்
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார்
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்,
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி
10
வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி,
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளம் கவினிய குளவி முன்றில்,
செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,
15
நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி,
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும!
கை வள் ஈகைக் கடு மான் கொற்ற!
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப,
பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப்
20
பாடுப என்ப பரிசிலர், நாளும்
ஈயா மன்னர் நாண,
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே.
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.

204
'ஈ' என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர்,
'ஈயேன்' என்றல் அதனினும் இழிந்தன்று;
'கொள்' எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்,
'கொள்ளேன்' என்றல் அதனினும் உயர்ந்தன்று;
5
தெண் நீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங் கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உண, கலங்கி,
சேற்றொடு பட்ட சிறுமைத்துஆயினும்,
உண்நீர் மருங்கின் அதர் பல ஆகும்;
10
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை,
உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால்
புலவேன் வாழியர், ஓரி! விசும்பில்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.
திணையும் துறையும் அவை.
வல்வில் ஓரியைக் கழைதின்யானையார் பாடியது.

224
அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்;
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி,
இரு பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்;
அறம் அறக் கண்ட நெறி மாண் அவையத்து,
5
முறை நற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
தூ இயல் கொள்கைத் துகள் அறு மகளிரொடு,
பருதி உருவின் பல் படைப் புரிசை,
எருவை நுகர்ச்சி, யூப நெடுந் தூண்,
வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்;
10
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்:
இறந்தோன் தானே; அளித்து இவ் உலகம்!
அருவி மாறி, அஞ்சு வரக் கருகி,
பெரு வறங் கூர்ந்த வேனில் காலை,
பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார்,
15
பூ வாள் கோவலர் பூவுடன் உதிரக்
கொய்து கட்டு அழித்த வேங்கையின்,
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே.
திணையும் துறையும் அவை.
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.

230
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்,
வெங் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும்,
களம் மலி குப்பை காப்பு இல வைகவும்,
விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல்,
5
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள்,
பொய்யா எழினி பொருது களம் சேர
ஈன்றோள் நீத்த குழவி போல,
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய,
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு
10
நோய் உழந்து வைகிய உலகினும், மிக நனி
நீ இழந்தனையே, அறன் இல் கூற்றம்!
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான்,
வீழ் குடி உழவன் வித்து உண்டாஅங்கு
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின்,
15
நேரார் பல் உயிர் பருகி,
ஆர்குவை மன்னோ, அவன் அமர் அடு களத்தே.
திணை அது; துறை கையறு நிலை.
அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில் கிழார் பாடியது.

258
முள் கால் காரை முது பழன் ஏய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு,
பச்சூன் தின்று, பைந் நிணம் பெருத்த
5
எச்சில் ஈர்ங் கை வில்புறம் திமிரி,
புலம் புக்கனனே, புல் அணல் காளை;
ஒரு முறை உண்ணாஅளவை, பெரு நிரை
ஊர்ப் புறம் நிறையத் தருகுவன்; யார்க்கும்
தொடுதல் ஓம்புமதி, முது கள் சாடி;
10
ஆ தரக் கழுமிய துகளன்,
காய்தலும் உண்டு, அக் கள் வெய்யோனே.
திணையும் துறையும் அவை.
......................உலோச்சனார் பாடியது.

259
ஏறுடைப் பெரு நிரை பெயர்தர, பெயராது,
இலை புதை பெருங் காட்டுத் தலை கரந்து இருந்த
வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய்;
செல்லல், செல்லல்; சிறக்க, நின் உள்ளம்,
5
முருகு மெய்ப் பட்ட புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கும் ஆன்மேல்
புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே!
திணை கரந்தை; துறை செரு மலைதல்; பிள்ளைப் பெயர்ச்சியும் ஆம்.
.......................கோடை பாடிய பெரும்பூதனார் பாடியது.

260
வளரத் தொடினும், வௌவுபு திரிந்து,
விளரி உறுதரும் தீம் தொடை நினையா,
தளரும் நெஞ்சம் தலைஇ, மனையோள்
உளரும் கூந்தல் நோக்கி, களர
5
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி,
பசி படு மருங்குலை, கசிபு, கைதொழாஅ,
'காணலென்கொல்?' என வினவினை வரூஉம்
பாண! கேண்மதி, யாணரது நிலையே:
புரவுத் தொடுத்து உண்குவைஆயினும், இரவு எழுந்து
10
எவ்வம் கொள்குவைஆயினும், இரண்டும்,
கையுள் போலும்; கடிது அண்மையவே
முன் ஊர்ப் பூசலின் தோன்றி, தன் ஊர்
நெடு நிரை தழீஇய மீளியாளர்
விடு கணை நீத்தம் துடி புணை ஆக,
15
வென்றி தந்து, கொன்று கோள் விடுத்து,
வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வை எயிற்று உய்ந்த மதியின், மறவர்
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல் ஆன்
நிரையொடு வந்த உரையன் ஆகி,
20
உரி களை அரவம் மான, தானே
அரிது செல் உலகில் சென்றனன்; உடம்பே,
கானச் சிற்றியாற்று அருங் கரைக் கால் உற்று,
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல,
அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றே;
25
உயர் இசை வெறுப்பத் தோன்றிய பெயரே,
மடம்சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி,
இடம் பிறர் கொள்ளாச் சிறு வழி,
படம் செய் பந்தர்க் கல் மிசையதுவே.
திணை அது; துறை கையறு நிலை; பாண்பாட்டும் ஆம்.
......................வடமோதங் கிழார் பாடியது.

261
அந்தோ! எந்தை அடையாப் பேர் இல்!
வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு
வரையாப் பெருஞ் சோற்று முரி வாய் முற்றம்,
வெற்று யாற்று அம்பியின் எற்று? அற்று ஆகக்
5
கண்டனென், மன்ற; சோர்க, என் கண்ணே;
வையம் காவலர் வளம் கெழு திரு நகர்,
மையல் யானை அயாவுயிர்த்தன்ன
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப்
10
பயந்தனை, மன்னால், முன்னே! இனியே
பல் ஆ தழீஇய கல்லா வல் வில்
உழைக் குரல் கூகை அழைப்ப ஆட்டி,
நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை
விரகு அறியாளர் மரபின் சூட்ட,
15
நிரை இவண் தந்து, நடுகல் ஆகிய
வென் வேல் விடலை இன்மையின் புலம்பி,
கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய
கழி கல மகடூஉப் போலப்
புல்லென்றனையால், பல் அணி இழந்தே.
திணையும் துறையும் அவை.
.....................ஆவூர் மூலங் கிழார் பாடியது.

262
நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்;
பாசுவல் இட்ட புன் கால் பந்தர்ப்
புனல் தரும் இள மணல் நிறையப் பெய்ம்மின்
ஒன்னார் முன்னிலை முருக்கி, பின் நின்று,
5
நிரையொடு வரூஉம் என்னைக்கு
உழையோர் தன்னினும் பெருஞ் சாயலரே.
திணை வெட்சி; துறை உண்டாட்டு; தலைத்தோற்றமும் ஆம்.
....................மதுரைப் பேராலவாயார் பாடியது.

263
பெருங் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண்
இரும் பறை இரவல! சேறிஆயின்,
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது,
வண்டு மேம்படூஉம், இவ் வறநிலை ஆறே
5
பல் ஆத் திரள் நிரை பெயர்தரப் பெயர்தந்து,
கல்லா இளையர் நீங்க நீங்கான்,
வில் உமிழ் கடுங் கணை மூழ்க,
கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.
திணை கரந்தை; துறை கையறுநிலை.
......................................................................

264
பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி,
மரல் வகுந்து தொடுத்த செம் பூங் கண்ணியொடு,
அணி மயில் பீலி சூட்டி, பெயர் பொறித்து,
இனி நட்டனரே, கல்லும்; கன்றொடு
5
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது,
இன்றும் வரும்கொல், பாணரது கடும்பே?
திணையும் துறையும் அவை.
....................உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது.

265
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை,
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப்
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து,
பல் ஆன் கோவலர் படலை சூட்ட,
5
கல் ஆயினையே கடு மான் தோன்றல்!
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க்
கடும் பகட்டு யானை வேந்தர்
ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே.
திணையும் துறையும் அவை.
......................சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந் தும்பியார் பாடியது.

269
குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல்
பயிலாது அல்கிய பல் காழ் மாலை
மை இரும் பித்தை பொலியச் சூட்டி,
புத்தகல் கொண்ட புலிக் கண் வெப்பர்
5
ஒன்று இரு முறை இருந்து உண்ட பின்றை,
உவலைக் கண்ணித் துடியன் வந்தென,
பிழி மகிழ் வல்சி வேண்ட, மற்று இது
கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்தி;
கரந்தை நீடிய அறிந்து மாறு செருவில்
10
பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர்,
கொடுஞ் சிறைக் குரூஉப் பருந்து ஆர்ப்ப,
தடிந்து மாறு பெயர்த்தது, இக் கருங் கை வாளே.
ஒளவையார் பாடியது.

275
கோட்டங் கண்ணியும், கொடுந்திரை ஆடையும்,
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்,
ஒத்தன்று மாதோ, இவற்கே; செற்றிய
திணி நிலை அலறக் கூவை போழ்ந்து, தன்
5
வடி மாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி,
'ஓம்புமின், ஓம்புமின், இவண்!' என, ஓம்பாது,
தொடர் கொள் யானையின் குடர் கால் தட்ப,
கன்று அமர் கறவை மான,
முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே.
திணையும் துறையும் அவை.
ஒரூஉத்தனார் பாடியது.

319
பூவல் படுவில் கூவல் தோண்டிய
செங் கண் சில் நீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முது வாய்ச் சாடி
யாம் கஃடு உண்டென, வறிது மாசு இன்று;
5
படலை முன்றில் சிறு தினை உணங்கல்
புறவும் இதலும் அறவும் உண்கெனப்
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனான்,
முயல் சுட்ட ஆயினும் தருகுவேம்; புகுதந்து
ஈங்கு இருந்தீமோ, முது வாய்ப் பாண!
10
கொடுங் கோட்டு ஆமான் நடுங்கு தலைக் குழவி
புன் தலைச் சிறாஅர் கன்று எனப் பூட்டும்
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்,
வேந்து விடு தொழிலொடு சென்றனன்; வந்து, நின்
பாடினி மாலை அணிய,
15
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே.
திணையும் துறையும் அவை.
ஆலங்குடி வங்கனார் பாடியது.

323
புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
சினம் கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும்
கா ... ... ... ... ..... ..... ...... ...... ..... க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை,
5
வெள் வேல் ஆவம்ஆயின், ஒள் வாள்
கறையடி யானைக்கு அல்லது
உறை கழிப்பு அறியா, வேலோன் ஊரே.
........................................................
................டார் கிழார் பாடியது.

325
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின்,
வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தென,
குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின்,
சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல்
5
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை,
முளவு மாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர்
உடும்பு இழுது அறுத்த ஒடுங் காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறுசெய்திடுமார்,
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம்
10
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து,
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்,
கயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும்
அரு மிளை இருக்கையதுவே வென் வேல்
வேந்து தலைவரினும் தாங்கும்,
15
தாங்கா ஈகை, நெடுந்தகை ஊரே.
திணையும் துறையும் அவை.
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

339
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு
மடலை மாண் நிழல் அசைவிட, கோவலர்
வீ ததை முல்லைப் பூப் பறிக்குந்து;
குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல்
5
நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து;
தொடலை அல்குல் தொடித் தோள் மகளிர்
கடல் ஆடிக் கயம் பாய்ந்து,
கழி நெய்தல் பூக்குறூஉந்து;
பைந் தழை துயல்வரும் செறு விறற..............
10
............................................................................லத்தி
வளர வேண்டும், அவளே, என்றும்
ஆர் அமர் உழப்பதும் அமரியளாகி,
முறம் செவி யானை வேந்தர்
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே.
திணையும் துறையும் அவை.
..............................................................

386
நெடு நீர நிறை கயத்துப்
படு மாரித் துளி போல,
நெய் துள்ளிய வறை முகக்கவும்,
சூடு கிழித்து வாடுஊன் மிசையவும்,
5
ஊன் கொண்ட வெண் மண்டை
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும்,
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது,
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை
ஈத்தோன், எந்தை, இசை தனது ஆக;
10
வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின்
பாத்திப் பன் மலர்ப் பூத் ததும்பின;
புறவே, புல் அருந்து பல் ஆயத்தான்,
வில் இருந்த வெங் குறும்பின்று;
கடலே, கால் தந்த கலன் எண்ணுவோர்
15
கானல் புன்னைச் சினை நிலைக்குந்து;
கழியே, சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி,
பெருங் கல் நல் நாட்டு உமண் ஒலிக்குந்து;
அன்ன நல் நாட்டுப் பொருநம், யாமே;
பொராஅப் பொருநரேம்;
20
குண திசை நின்று குடமுதல் செலினும்,
குட திசை நின்று குணமுதல் செலினும்,
வட திசை நின்று தென்வயின் செலினும்,
தென் திசை நின்று குறுகாது நீடினும்,
யாண்டும் நிற்க, வெள்ளி; யாம்
25
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே!
திணையும் துறையும் அவை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:52:08(இந்திய நேரம்)