தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புலி (உழுவை, ஒருத்தல், வரி, வரிவயம்)

புலி (உழுவை, ஒருத்தல், வரி, வரிவயம்)
4
வாள், வலம் தர, மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன;
தாள், களம் கொள, கழல் பறைந்தன
கொல்ல் ஏற்றின் மருப்புப் போன்றன;
5
தோல், துவைத்து அம்பின் துளை தோன்றுவ,
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே, எறி பதத்தான் இடம் காட்ட,
கறுழ் பொருத செவ் வாயான்,
எருத்து வவ்விய புலி போன்றன;
10
களிறு, கதவு எறியா, சிவந்து, உராஅய்,
நுதி மழுங்கிய வெண் கோட்டான்,
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,
15
மாக் கடல் நிவந்து எழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ
அனையை ஆகன்மாறே,
தாய் இல் தூவாக் குழவி போல,
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பரணர் பாடியது.

13
'இவன் யார்?' என்குவை ஆயின், இவனே
புலி நிறக் கவசம் பூம் பொறி சிதைய,
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின்,
மறலி அன்ன களிற்று மிசையோனே;
5
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்,
பல் மீன் நாப்பண் திங்கள் போலவும்,
சுறவினத்து அன்ன வாளோர் மொய்ப்ப,
மரீஇயோர் அறியாது, மைந்து பட்டன்றே;
நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம!
10
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,
கொழு மீன், விளைந்த கள்ளின்,
விழு நீர் வேலி நாடு கிழவோனே.
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
சோழன் முடித் தலைக் கோப் பெருநற்கிள்ளி கருவூரிடம் செல்வானைக் கண்டு,சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறையோடு வேண்மாடத்து மேல் இருந்து,உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடியது.

19
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகன் கிடக்கை,
தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து,
மன் உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்,
நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய!
5
'இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய
பெருங் கல் அடாரும் போன்ம்' என விரும்பி,
முயங்கினேன் அல்லனோ, யானே மயங்கிக்
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல,
அம்பு சென்று இறுத்த அரும் புண் யானைத்
10
தூம்புடைத் தடக் கை வாயொடு துமிந்து,
நாஞ்சில் ஒப்ப, நிலம் மிசைப் புரள,
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர்
எந்தையொடு கிடந்தோர், எம் புன் தலைப் புதல்வர்;
'இன்ன விறலும் உளகொல், நமக்கு?' என,
15
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணி,
கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை,
எழுவர் நல் வலம் கடந்தோய்! நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே?
திணை வாகை; துறை அரச வாகை.
அவனை அவர் பாடியது.

23
'வெளிறு இல் நோன் காழ்ப் பணை நிலை முனைஇ,
களிறு படிந்து உண்டென, கலங்கிய துறையும்;
கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்,
சூர் நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின்
5
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர்
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில்
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்;
வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும்
கடி மரம் துளங்கிய காவும்; நெடு நகர்
10
வினை புனை நல் இல் வெவ் எரி நைப்ப,
கனை எரி உரறிய மருங்கும்; நோக்கி,
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச் சென்று,
இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும்
துன்னல் போகிய துணிவினோன்' என,
15
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட
கால முன்ப! நின் கண்டனென் வருவல்
அறு மருப்பு எழில் கலை புலிப்பால் பட்டென,
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை
20
பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண் பூக் கறிக்கும்
ஆள் இல் அத்தம் ஆகிய காடே.
திணையும் துறையும் அவை; துறை நல்லிசை வஞ்சியும் ஆம்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.

33
கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர் கொடு வந்த தசும்பும், நிறைய,
ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர்
5
குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்,
ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை;
10
பாடுநர் வஞ்சி பாட, படையோர்
தாது எரு மறுகின் பாசறை பொலிய,
புலராப் பச்சிலை இடை இடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்து கண்டன்ன
ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும்
15
செம்மற்று அம்ம, நின் வெம் முனை இருக்கை
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப,
காம இருவர் அல்லது, யாமத்துத்
தனி மகன் வழங்காப் பனி மலர்க் காவின்,
20
ஒதுக்குஇன் திணி மணல் புதுப் பூம் பள்ளி
வாயில் மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப,
நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே.
திணை வாகை; துறை அரச வாகை.
அவனை அவர் பாடியது.

42
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின்
யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின்
தானையும் கடல் என முழங்கும்; கூர் நுனை
வேலும் மின்னின் விளங்கும்; உலகத்து
5
அரைசு தலை பனிக்கும் ஆற்றலைஆதலின்,
புரை தீர்ந்தன்று; அது புதுவதோ அன்றே;
தண் புனல் பூசல் அல்லது, நொந்து,
'களைக, வாழி, வளவ!' என்று, நின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது,
10
புலி புறங்காக்கும் குருளை போல,
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப,
பெரு விறல் யாணர்த்து ஆகி, அரிநர்
கீழ் மடைக் கொண்ட வாளையும், உழவர்
படை மிளிர்ந்திட்ட யாமையும், அறைநர்
15
கரும்பில் கொண்ட தேனும், பெருந் துறை
நீர் தரு மகளிர் குற்ற குவளையும்,
வன் புலக் கேளிர்க்கு வரு விருந்து அயரும்
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந!
மலையின் இழிந்து, மாக் கடல் நோக்கி,
20
நில வரை இழிதரும் பல் யாறு போல,
புலவர் எல்லாம் நின் நோக்கினரே;
நீயே, மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்று வெகுண்டன்ன முன்பொடு,
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே.
திணை வாகை; துறை அரசவாகை.
அவனை இடைக்காடனார் பாடியது.

52
அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் முனைஇ,
முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல்,
ஊன் நசை உள்ளம் துரப்ப, இரை குறித்து,
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு,
5
வட புல மன்னர் வாட, அடல் குறித்து,
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி!
இது நீ கண்ணியது ஆயின், இரு நிலத்து
யார்கொல் அளியர்தாமே? ஊர்தொறும்
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடுங் கொடி
10
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெரு நல் யாணரின் ஒரீஇ, இனியே
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலி கண் மாறிய பாழ்படு பொதியில்,
நரை மூதாளர் நாய் இடக் குழிந்த
15
வல்லின் நல் அகம் நிறைய, பல் பொறிக்
கான வாரணம் ஈனும்
காடு ஆகி விளியும் நாடு உடையோரே!
திணையும் துறையும் அவை.
அவனை மருதன் இளநாகனார் பாடியது.

54
எம் கோன் இருந்த கம்பலை மூதூர்,
உடையோர் போல இடையின்று குறுகி,
செம்மல் நாள் அவை அண்ணாந்து புகுதல்
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;
5
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து,
வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவி கை வண்மைக்
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்கும் காலை,
10
பாசிலைத் தொடுத்த, உவலைக் கண்ணி,
மாசு உண் உடுக்கை, மடி வாய், இடையன்
சிறு தலை ஆயமொடு குறுகல்செல்லாப்
புலி துஞ்சு வியன் புலத்தற்றே
வலி துஞ்சு தடக் கை அவனுடை நாடே.
திணையும் துறையும் அவை.
சேரமான் குட்டுவன் கோதையைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரன் பாடியது.

73
மெல்ல வந்து, என் நல் அடி பொருந்தி,
'ஈ' என இரக்குவர் ஆயின், சீருடை
முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென், இந் நிலத்து;
5
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என்
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல,
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழை தின் யானைக் கால் அகப்பட்ட
10
வன் திணி நீள் முளை போல, சென்று, அவண்
வருந்தப் பொரேஎன்ஆயின், பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல் இருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!
திணையும் துறையும் அவை.
சோழன் நலங்கிள்ளி பாட்டு.

78
வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன் தாள்,
அணங்கு அருங் கடுந் திறல் என்னை முணங்கு நிமிர்ந்து,
அளைச் செறி உழுவை இரைக்கு வந்தன்ன
மலைப்பு அரும் அகலம் மதியார், சிலைத்து எழுந்து,
5
'விழுமியம், பெரியம், யாமே; நம்மின்
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது' என,
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர்; புறத்தில் பெயர,
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான், ஆண்டு அவர்
10
மாண் இழை மகளிர் நாணினர் கழிய,
தந்தை தம் ஊர் ஆங்கண்,
தெண் கிணை கறங்கச் சென்று, ஆண்டு அட்டனனே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

86
சிற்றில் நல் தூண் பற்றி, 'நின் மகன்
யாண்டு உளனோ?' என வினவுதி; என் மகன்
யாண்டு உளன்ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல,
5
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!
திணை வாகை; துறை ஏறாண் முல்லை.
காவற்பெண்டின் பாட்டு.

90
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல்,
மறப் புலி உடலின், மான் கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
5
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்?
அச்சொடு தாக்கிப் பார் உற்று இங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய,
வரி மணல் ஞெமர, கல் பக, நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?
10
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக் கை
வழு இல் வன் கை, மழவர் பெரும!
இரு நிலம் மண் கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ, நீ களம் புகினே?
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

100
கையது வேலே; காலன புனை கழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்;
வட்கர் போகிய வளர் இளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு,
5
வெட்சி மா மலர், வேங்கையொடு விரைஇ,
சுரி இரும் பித்தை பொலியச் சூடி,
வரிவயம் பொருத வயக் களிறு போல,
இன்னும் மாறாது சினனே; அன்னோ!
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே;
10
செறுவர் நோக்கிய கண், தன்
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே.
திணையும் துறையும் அவை; திணை வஞ்சியும், துறை கொற்றவள்ளையும் ஆம்.
அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.

135
கொடுவரி வழங்கும் கோடு உயர் நெடு வரை,
அரு விடர்ச் சிறு நெறி ஏறலின், வருந்தி,
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின்,
வளைக் கை விறலி என் பின்னள் ஆக,
5
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப,
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடைத் தழீஇ,
புகழ்சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி,
10
வந்தனென் எந்தை! யானே: என்றும்,
மன்று படு பரிசிலர்க் காணின், கன்றொடு
கறை அடி யானை இரியல் போக்கும்
மலை கெழு நாடன்! மா வேள் ஆஅய்!
களிறும் அன்றே; மாவும் அன்றே;
15
ஒளிறு படைப் புரவிய தேரும் அன்றே;
பாணர், பாடுநர், பரிசிலர், ஆங்கு அவர்,
தமது எனத் தொடுக்குவராயின், 'எமது' எனப்
பற்றல் தேற்றாப் பயங் கெழு தாயமொடு,
அன்ன ஆக, நின் ஊழி; நின்னைக்
20
காண்டல் வேண்டிய அளவை வேண்டார்
உறு முரண் கடந்த ஆற்றல்
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே!
திணை அது; துறை பரிசில் துறை.
அவனை அவர் பாடியது.

152
'வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ,
புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
5
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்,
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்,
புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான்; வெறுக்கை நன்கு உடையன்;
10
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்,
சாரல் அருவிப் பய மலைக் கிழவன்,
ஓரி கொலோ? அல்லன்கொல்லோ?
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்
மண் முழா அமைமின்; பண் யாழ் நிறுமின்;
15
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்;
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்;
பதலை ஒரு கண் பையென இயக்குமின்;
மதலை மாக் கோல் கைவலம் தமின்' என்று,
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி,
20
மூ ஏழ் துறையும் முறையுளிக் கழிப்பி,
'கோ' எனப் பெயரிய காலை, ஆங்கு அது
தன் பெயர் ஆகலின் நாணி, மற்று, 'யாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர்' என,
25
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி,
தன் மலைப் பிறந்த தா இல் நன் பொன்,
பல் மணிக் குவையொடும் விரைஇ, 'கொண்ம்' என,
30
சுரத்திடை நல்கியோனே விடர்ச் சிமை
ஓங்கு இருங் கொல்லிப் பொருநன்,
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே!
திணை அது; துறை பரிசில் விடை.
வல் வில் ஓரியை வன்பரணர் பாடியது.

157
தமர் தற் தப்பின் அது நோன்றல்லும்,
பிறர் கையறவு தான் நாணுதலும்,
படைப் பழி தாரா மைந்தினன் ஆகலும்,
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்,
5
நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன்,
சிலை செல மலர்ந்த மார்பின், கொலை வேல்,
கோடல் கண்ணி, குறவர் பெருமகன்
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை,
எல் படு பொழுதின், இனம் தலைமயங்கி,
10
கட்சி காணாக் கடமான் நல் ஏறு
மட மான் நாகு பிணை பயிரின், விடர் முழை
இரும் புலிப் புகர்ப் போத்து ஓர்க்கும்
பெருங் கல் நாடன் எம் ஏறைக்குத் தகுமே.
திணையும் துறையும் அவை.
ஏறைக் கோனைக் குறமகள் இளவெயினி பாடியது.

160
'உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த
முளி புல் கானம் குழைப்ப, கல்லென
அதிர் குரல் ஏறொடு துளி சொரிந்தாங்கு,
பசி தினத் திரங்கிய கசிவுடை யாக்கை
5
அவிழ் புகுவு அறியாதுஆகலின், வாடிய
நெறி கொள் வரிக் குடர் குளிப்பத் தண்ணென,
குய் கொள் கொழுந் துவை நெய்யுடை அடிசில்,
மதி சேர் நாள்மீன் போல, நவின்ற
சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ,
10
"கேடு இன்றாக, பாடுநர் கடும்பு" என,
அரிது பெறு பொலங் கலம் எளிதினின் வீசி,
நட்டோர் நட்ட நல் இசைக் குமணன்,
மட்டு ஆர் மறுகின், முதிரத்தோனே;
செல்குவைஆயின், நல்குவன், பெரிது' என,
15
பல் புகழ் நுவலுநர் கூற, வல் விரைந்து,
உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று,
இல் உணாத் துறத்தலின், இல் மறந்து உறையும்
புல் உளைக் குடுமிப் புதல்வன் பல் மாண்
பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன்,
20
கூழும் சோறும் கடைஇ, ஊழின்
உள் இல் வறுங் கலம் திறந்து, அழக் கண்டு,
மறப் புலி உரைத்தும், மதியம் காட்டியும்,
நொந்தனளாகி, 'நுந்தையை உள்ளி,
பொடிந்த நின் செவ்வி காட்டு' எனப் பலவும்
25
வினவல் ஆனாளாகி, நனவின்
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப,
செல்லாச் செல்வம் மிகுத்தனை, வல்லே
விடுதல் வேண்டுவல் அத்தை; படு திரை
நீர் சூழ் நிலவரை உயர, நின்
30
சீர் கெழு விழுப் புகழ் ஏத்துகம் பலவே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

170
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி,
பரலுடை முன்றில், அம் குடிச் சீறூர்,
எல் அடிப்படுத்த கல்லாக் காட்சி
வில் உழுது உண்மார் நாப்பண், ஒல்லென,
5
இழி பிறப்பாளன் கருங் கை சிவப்ப,
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி
புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும்
மலை கெழு நாடன், கூர்வேல் பிட்டன்,
குறுகல் ஓம்புமின், தெவ்விர்! அவனே
10
சிறு கண் யானை வெண் கோடு பயந்த
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து,
நார் பிழிக் கொண்ட வெங் கள் தேறல்
பண் அமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி,
நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு
15
இரும்பு பயன் படுக்கும் கருங் கைக் கொல்லன்
விசைத்து எறி கூடமொடு பொரூஉம்
உலைக் கல் அன்ன, வல்லாளன்னே.
திணை வாகை; துறை வல்லாண் முல்லை; தானைமறமும் ஆம்.
அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

174
அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென,
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல்
5
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு,
அரசு இழந்திருந்த அல்லல் காலை,
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது
இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி
மல்லல் நல் நாட்டு அல்லல் தீர,
10
பொய்யா நாவின் கபிலன் பாடிய,
மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச்
செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,
அரு வழி இருந்த பெரு விறல் வளவன்
15
மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந!
விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண்,
சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன்
ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர்,
20
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்,
ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலம் தீர,
நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!
கல் கண் பொடிய, கானம் வெம்ப,
25
மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க,
கோடை நீடிய பைது அறு காலை,
இரு நிலம் நெளிய ஈண்டி,
உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே.
திணை வாகை; துறை அரச வாகை.
மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

190
விளை பதச் சீறிடம் நோக்கி, வளை கதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலி முயன்றனையர் ஆகி, உள்ள தம்
வளன் வலியுறுக்கும் உளம் இலாளரொடு
5
இயைந்த கேண்மை இல்லாகியரோ!
கடுங் கண் கேழல் இடம் பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணாதாகி, வழி நாள்,
பெரு மலை விடரகம் புலம்ப, வேட்டு எழுந்து,
இருங் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும்
10
புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து
உரனுடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உள ஆகியரோ!
திணையும் துறையும் அவை.
சோழன் நல்லுருத்திரன் பாட்டு.

202
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட,
கட்சி காணாக் கடமா நல் ஏறு
கடறு மணி கிளர, சிதறு பொன் மிளிர,
கடிய கதழும் நெடு வரைப் படப்பை
5
வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி,
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்,
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி:
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
10
ஒலியல் கண்ணிப் புலிகடி மாஅல்!
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை
இகழ்ந்ததன் பயனே; இயல் தேர் அண்ணல்!
எவ்வி தொல் குடிப் படீஇயர், மற்று, 'இவர்
15
கை வண் பாரி மகளிர்' என்ற என்
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும!
விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து,
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை
மாத் தகட்டு ஒள் வீ தாய துறுகல்
20
இரும் புலி வரிப் புறம் கடுக்கும்
பெருங் கல் வைப்பின் நாடு கிழவோயே!
திணையும் துறையும் அவை.
இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாக, கபிலர் பாடியது.

237
'நீடு வாழ்க?' என்று, யான் நெடுங் கடை குறுகி,
பாடி நின்ற பசி நாட்கண்ணே,
'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி,
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
5
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என
நச்சி இருந்த நசை பழுதாக,
அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு,
'அளியர்தாமே ஆர்க' என்னா
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய,
10
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
வாழைப் பூவின் வளை முறி சிதற,
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க,
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை,
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே:
15
ஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப்
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின்,
எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக்
கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று,
நனியுடைப் பரிசில் தருகம்,
20
எழுமதி, நெஞ்சே! துணிபு முந்துறுத்தே.
திணையும் துறையும் அவை.
வெளிமானுழைச் சென்றார்க்கு, அவன் துஞ்ச, இள வெளிமான் சிறிது கொடுப்ப, கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.

255
'ஐயோ!' எனின், யான் புலி அஞ்சுவலே;
அணைத்தனன் கொளினே, அகல் மார்பு எடுக்கவல்லேன்;
என் போல் பெரு விதிர்ப்புறுக, நின்னை
இன்னாது உற்ற அறன் இல் கூற்றே!
5
நிரை வளை முன் கை பற்றி
வரை நிழல் சேர்கம் நடத்திசின் சிறிதே!
திணையும் துறையும் அவை.
....................வன்பரணர் பாடியது.

269
குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல்
பயிலாது அல்கிய பல் காழ் மாலை
மை இரும் பித்தை பொலியச் சூட்டி,
புத்தகல் கொண்ட புலிக் கண் வெப்பர்
5
ஒன்று இரு முறை இருந்து உண்ட பின்றை,
உவலைக் கண்ணித் துடியன் வந்தென,
பிழி மகிழ் வல்சி வேண்ட, மற்று இது
கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்தி;
கரந்தை நீடிய அறிந்து மாறு செருவில்
10
பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர்,
கொடுஞ் சிறைக் குரூஉப் பருந்து ஆர்ப்ப,
தடிந்து மாறு பெயர்த்தது, இக் கருங் கை வாளே.
திணை வெட்சி; துறை உண்டாட்டு.
ஒளவையார் பாடியது.

323
புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
சினம் கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும்
கா ... ... ... ... ..... ..... ...... ...... ..... க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை,
5
வெள் வேல் ஆவம்ஆயின், ஒள் வாள்
கறையடி யானைக்கு அல்லது
உறை கழிப்பு அறியா, வேலோன் ஊரே.
........................................................
................டார் கிழார் பாடியது.

341
வேந்து குறையுறவும் கொடாஅன், ஏந்து கோட்டு
அம் பூந் தொடலை அணித் தழை அல்குல்,
செம் பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை,
எழு விட்டு அமைத்த திண் நிலைக் கதவின்
5
அரை மண் இஞ்சி நாட் கொடி நுடங்கும்
..........................................................................................................
புலிக் கணத்து அன்ன கடுங் கண் சுற்றமொடு,
மாற்றம் மாறான், மறலிய சினத்தன்,
'பூக் கோள்' என ஏஎய், கயம் புக்கனனே;
10
விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல் இயல்,
சுணங்கு அணி வன முலை, அவளொடு நாளை
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின்,
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு
15
வாரா உலகம் புகுதல் ஒன்று எனப்
படை தொட்டனனே, குருசில்; ஆயிடைக்
களிறு பொரக் கலங்கிய தண் கயம் போல,
பெருங் கவின் இழப்பது கொல்லோ,
மென் புனல் வைப்பின் இத் தண் பணை ஊரே!
திணையும் துறையும் அவை.
பரணர் பாடியது.

374
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும்
புல்வாய் இரலை நெற்றி அன்ன,
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவியத்
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,
5
மன்றப் பலவின் மால் வரை பொருந்தி, என்
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி,
இருங் கலை ஓர்ப்ப இசைஇ, காண்வர,
கருங் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட,
புலிப் பல் தாலிப் புன் தலைச் சிறாஅர்
10
மான் கண் மகளிர், கான் தேர் அகன்று உவா
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங் குறை,
விடர் முகை அடுக்கத்துச் சினை முதிர் சாந்தம்,
புகர் முக வேழத்து மருப்பொடு, மூன்றும்,
இருங் கேழ் வயப் புலி வரி அதள் குவைஇ,
15
விருந்து இறை நல்கும் நாடன், எம் கோன்,
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல,
வண்மையும் உடையையோ? ஞாயிறு!
கொன் விளங்குதியால் விசும்பினானே!
திணை பாடாண் திணை; துறை பூவை நிலை.
ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

398
மதி நிலாக் கரப்ப, வெள்ளி ஏர்தர,
வகை மாண் நல் இல்........................
பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப,
பொய்கைப் பூ முகை மலர, பாணர்
5
கை வல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க,
இரவுப் புறம் பெற்ற ஏம வைகறை,
பரிசிலர் விசையெ
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்,
நகைவர் குறுகின் அல்லது, பகைவர்க்குப்
10
புலியினம் மடிந்த கல் அளை போல,
துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர்,
மதியத்து அன்ன என் அரிக் குரல் தடாரி,
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து,
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்!
15
'தள்ளா நிலையை ஆகியர் எமக்கு' என
என் வரவு அறீஇ,
சிறிதிற்குப் பெரிது உவந்து,
விரும்பிய முகத்தன் ஆகி, என் அரைத்
துரும்பு படு சிதாஅர் நீக்கி, தன் அரைப்
20
புகை விரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ,
அழல் கான்றன்ன அரும் பெறல் மண்டை,
நிழல் காண் தேறல் நிறைய வாக்கி,
யான் உண அருளல் அன்றியும், தான் உண்
மண்டைய கண்ட மான் வறைக் கருனை,
25
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர,
வரை உறழ் மார்பின், வையகம் விளக்கும்,
விரவு மணி ஒளிர்வரும், அரவு உறழ் ஆரமொடு,
புரையோன் மேனிப் பூத்தசல.......................
முரைசெல அருளியோனே
30
........................யருவிப் பாயல் கோவே.
திணை பாடாண் திணை; துறை கடைநிலை.
சேரமான் வஞ்சனைத் திருத்தாமனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:56:08(இந்திய நேரம்)