தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இதல்

இதல்
319
பூவல் படுவில் கூவல் தோண்டிய
செங் கண் சில் நீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முது வாய்ச் சாடி
யாம் கஃடு உண்டென, வறிது மாசு இன்று;
5
படலை முன்றில் சிறு தினை உணங்கல்
புறவும் இதலும் அறவும் உண்கெனப்
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனான்,
முயல் சுட்ட ஆயினும் தருகுவேம்; புகுதந்து
ஈங்கு இருந்தீமோ, முது வாய்ப் பாண!
10
கொடுங் கோட்டு ஆமான் நடுங்கு தலைக் குழவி
புன் தலைச் சிறாஅர் கன்று எனப் பூட்டும்
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்,
வேந்து விடு தொழிலொடு சென்றனன்; வந்து, நின்
பாடினி மாலை அணிய,
15
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே.
திணையும் துறையும் அவை.
ஆலங்குடி வங்கனார் பாடியது.

320
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி,
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென,
பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர்
5
தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட,
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சி, கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்,
இல் வழங்காமையின், கல்லென ஒலித்து,
10
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென,
ஆர நெருப்பின், ஆரல் நாற,
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி,
15
தங்கினை சென்மோ, பாண! தங்காது,
வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே.
திணையும் துறையும் அவை.
வீரை வெளியனார் பாடியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 03:11:57(இந்திய நேரம்)