இப்பெருங் காப்பியத்திற்குக் கதைத்தலைவன்
வாசுதேவனின் அவதாரம் என்று கருதப்படுகின்ற
திவிட்டனேயாவான். இந்நூலாசிரியர் இவனைப்
பாயிரத்தின்கண் செங்கண் நெடியான் என்றும்,
கொற்றங்கொள் நேமி நெடுமால் என்றும்
சிறப்பித்தோதுகின்றார். ஆயினும் திவிட்டன்
தந்தையாகிய பயாபதி மன்னனும் கதைத்தலைவன்
என்னுமளவிற்கு இந்நூலின்கண் சிறப்பிடம் பெற்றுத்
திகழ்தலைக் காணலாம். இம்மன்னர் பெருமான்
திருக்குறளின்கண் கூறப்படும் இறைமாட்சிக்குச்
சிறந்ததோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனன்.
இவ்வரசனைப்பற்றி இந்நூலாசிரியர்,
"மன்னிய பகைக்குழா மாறும் வையகம்
துன்னிய வரும்பகைத் தொகையு மின்மையால்
தன்னையுந் தரையையுங் காக்கு மென்பதாம்
மன்னவன் றிறத்தினி மருள வேண்டுமோ,"
"மேலவர் மெய்ப்பொருள் விரிக்கும் வீறுசால்
நூலினாற் பெரியவர் நுழைந்த சுற்றமா
ஆலுநீ ரன்னமோ டரச வன்னமே
போலநின் றுலகினைப் பொதுமை நீக்கினான்"
எனப் புகழ்ந்து
பாராட்டுகின்றார். இம்மன்னர் பெருமான்
சான்றோர்களையே
நல்லமைச்சராக அமைத்துக்கொண்டு அச்சான்றோர்
காட்டிய நெறி நின்று
செங்கோலோச்சுவானாயினன். இவனுடைய அமைச்சரைப்பற்றி
நூலாசிரியர்,
“வழிமுறை பயின்று வந்த
மரபினார் மன்னர் கோமான்
விழுமல ரடிக்கண் மிக்க
வன்பினார் வென்றி நீரார்
எழுவளர்த் தனைய தோளா
ரிளையவ ரின்ன நீரார்
உழையவ ராக வைத்தா
னோடைமால் களிற்றி னானே"
தருவாகத் திகழ்ந்தான்
என்பர். இதனால் நாட்டின்கண் அரசியல் நன்கு
வளம்
பெற்றிருக்கும் பொழுது தான் கலைவளமும் பெருகும்
என்னும் கருத்துடையர் இப்புலவர்
பெருமான் என்பது புலப்படுகின்றது.