Primary tabs
திரு. சு. அ. இராமசாமிப் புலவர் அவர்கள் இம் மாபெருங் காப்பியத்திற்குத் தாமே உரை வரைந்து கொடுப்பதாகக் கழகத்தார்பால் ஒப்புக்கொண்டு இந்நூலினை எடுத்து வந்திருந்தனர். மேலும் இதற்கு உரை வரையத் தொடங்கி யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம் பிள்ளை யவர்கள் வெளியிட்டுள்ள சூளாமணியின் மூலப்படியிலுள்ள செய்யுட்கள் அனைத்தையும் பக்கத்திற்கு ஒவ்வொன்றாக எழுதி முடித்துப் பின்னர்ப் பாயிரம் தொடங்கி 6. தூதுவிடு சருக்கம் முடிய, அஃதாவது 572. செய்யுட்களுக்கு உரையும் விளக்கமும் வரைந்திருந்தனர். ஆனால் இவற்றின் இடையே அங்கங்கே சில செய்யுட்களுக்கு உரை வரையாது விட்டுமிருந்தனர். அதற்குக் காரணம் அவை அரிதுணர் பொருளனவாக விருந்தமையேயாம். இந்நிலையில் அவருக்கு வேறு நூல்கள் எழுதும் வேலையும் இருந்தமையால் இச் சூளாமணிக்கு உரை யெழுதும் பணியை என்பால் ஒப்புவிக்கக் கருதி என்னை அன்புடன் அழைத்தனர். அழைத்து அவர் எழுதியிருந்த பகுதிகளையும் மூலப்படியினையும் வேறு சில துணை நூல்களையும் எனக்கு வழங்கி இவ்வுரையினை எழுதி முடிக்கும்படி பணித்தார்கள். இவ்வாறு இம் மாபெரும் பணியை மேற்கொண்ட நான் இதற்கு உரை எழுதி முடிக்க வேண்டுமாயின் ஆருகத சமய தத்துவங்களை நன்கு அறிவது இன்றியமையாதென உணர்ந்தேன்.
பேராற்றல் படைத்த ஆசிரியர் நச்சினார்க்கினியர் சிந்தாமணிக்கு உரை எழுதிய காலத்தே ஆருகத சமய சான்றோர்கள் அவர் உரையினைப் பார்வையிட்டு அச்சமயக் கருத்துக்கள் பிழைபட்டிருத்தலை யுணர்ந்து அவ்வுரையினை யேற்க மறுத்தனர் என்பதும் பின்னர் அப்பேராசிரியர் விடாப்பிடியாக அவ்வாருகத சமய நுணுக்கங்களைப் பயின்றறிந்து பின்னர் நன்கு உரை எழுதி முடித்தார் என்பதும் யாம் கேள்விப்பட்டிருக்கிறோ மல்லமோ? எவ்வாற்றானும் சிந்தாமணியையே ஒத்துள்ள இப் பெருங் காப்பியத்திற்கு உரை வகுக்கு முன்னர் அச்சமய தத்துவங்களை உணர்தல் வேண்டும் என்று கருதி யான் இதற்கு உரை எழுதத் தொடங்கு முன் அச்சமயச் சார்பாய் உள்ள சிந்தாமணி, நீலகேசி முதலிய பழம் பெரு நூல்களையும் இக்காலத்தே வெளிவந்துள்ள அச்சமயச் சார்பான ஆராய்ச்சி