தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

| Choolamani |


அவ்வரசன் அவ்வனத்தின்கணிருந்த அருகன் கோயிலுள் நுழைந்து ஆங்கு எழுந்தருளியுள்ள இறைவனை முறைப்படி வழிபாடுசெய்து வெளியே வந்தான். அப்பொழுது அந்தரசாரிகளாகிய சாரணர் இருவர் அத்திருக்கோயிலின் முற்றத்தே இறங்கி இறைவழிபாடு செய்த பின்னர் அம்முற்றத்தின்கண் ஓர் அசோகமரத்தின்கீழ் இடப்பட்டிருந்த சிலா தலத்தின்மேல் அமர்ந்து அரசன் முதலியோர்க்கு அருகக் கடவுளினுடைய வரம்பிலின்பம் பெறுதற்குரிய அறங்களைச் செவியறி வுறுத்துப் போயினர். அவ்வறங்கேட்ட பின்னர்ச் சுயம்பிரபை ஒரு சிறந்த நோன்பினை மேற்கொண்டனள். அரசன் மணப்பருவமெய்திய தன் மகளின் திருமணவினை குறித்துப் பின்னர்த் தன் அமைச்சர்களோடே பெரிதும் ஆராய்ந்தான். அவ்வமைச்சர்கள் இச்செயல்பற்றி நாம் ஆராய்ந்து முடிவுசெய்வதைக் காட்டிலும் சிறந்த நிமித்திகனாகிய சதவிந்துவினை வினவி அவன் கூறியவழியில் ஒழுகுதலே நன்றென்று ஒருமுகமாகக் கூறினர்.

அதுகேட்ட சடிமன்னன் தன் மகளிடத்துக்கொண்டுள்ள அன்பு காரணமாகத் தன் திருவடிகள் நோவ நடந்து அந்நிமித்திகன் இல்லத்தை எய்தினான். அரசன் வரவு கண்ட நிமித்திகன் பெரிதும் மகிழ்ந்து அம்மன்னனுக்குப் பரதசக்கரவர்த்தி முதலாகத் திவிட்டன் ஈறாக உள்ள அரசர் வரலாற்றினை விரித்துக் கூறி அத்திவிட்டனே சுயம்பிரபைக்குக் கணவன் ஆவான் என்றும், அத்திவிட்டன் இன்னும் ஒரு திங்களில் ஒரு சிங்கத்தின் வாயைப் பிளந்துகொன்று தன் வீரத்தினை உலகினுக் குணர்த்துவான். வேந்தே! இந்நிகழ்ச்சியானும் என்கூற்று உண்மை என்பதனை உணர்ந்துகொள்க என்று கூறினான்.

அதுகேட்ட சடிமன்னன் மனமகிழ்ந்து அரண்மனையையடைந்து தன் கோப்பெருந்தேவிக்கு இச்செய்தியைக் கூறிப் பின்னர் அமைச்சர்களை அழைத்து இச்செய்தி பற்றி ஆராய்வானாயினன். அவ்வமைச்சர்கள் 'அங்ஙனமாயின் யாம் இப்பொழுதே திவிட்டன் தந்தையாகிய பயாபதி வேந்தன்பால் ஒரு தூதனைவிடுத்தல் நன்'றென்றனர். மன்னனும் அதற்கியைந்து மருசி என்னும் ஒரு சிறந்த தூதனைப் போதன நகரத்தரசனாகிய பயாபதியின்பாற் செலுத்தினான்.

முன்னரே தூதுவன் வரவினை எதிர்பார்த்திருந்த பயாபதி மன்னனுடைய ஏவலனாகிய துருமகாந்தன் மருசியை மகிழ்ச்சியுடன் வரவேற்று அவனுக்கென அமைத்திருந்த சிலாதலத்தில் இருத்தி முகமன் கூறி மகிழ்வித்தான். மன்னனும் அத்தூதன் வரவினை உணர்ந்து மங்கலப்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 12:40:18(இந்திய நேரம்)