தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

| Choolamani |


பொருள்களோடே மருசியை வரவேற்க மங்கையர் சிலரை விடுத்தான். அத்தூதுவனும் அப்பொழிலையும் மாதர்களையுங் கண்டு இவ்விடம் துறக்கநாட்டினும் சிறப்புடைத்து என வியந்தான்.

பின்னர்ப் பயாபதியின் மக்களாகிய விசயனும் திவிட்டனும் யானையேறிப் புட்பமாகரண்டத்தை எய்தி மருசியைக் கண்டு அவனையும் ஒரு யானைமேலேற்றி அழைத்துச் சென்றனர். மன்னவனும் ஒரு பொன்மன்றத்திலே மன்னர் பலர் தன்னைச்சூழவிருந்து மருசியை வரவேற்றான். மருசி பெரிதும் மகிழ்ந்து சடிமன்னனின் திருமந்திர வோலையைப் பயாபதிக்குக் கொடுத்தான். சடிமன்னன் தன் மகள் சுயம்பிரபையைத் திவிட்டனுக்கு மணம் செய்விக்க விரும்புவதாக எழுதியிருந்ததைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தான். மருசியும் அவ்வவையோரும் பெரிதும் அளவளாவி இருந்தனர். பின்னர்ப் பயாபதி மருசிக்குச் சிறப்புக்கள் பலவும் செய்து அத்திருமணத்திற்குத் தான் பெரிதும் உடன்பட்டிருத்தலையும் உணர்த்தி அத்தூதுவனை விடுத்தான்.

பயாபதியின்பால் தூதுசென்ற மருசி மீண்டும் இரதநூபுரத்தை எய்திப் பயாபதி கூறிய செய்திகளையும் உணர்த்தினன். பின்னர் அம்மன்னவன் அமைச்சர்களை அழைத்து இனி யாம் செய்யக் கடவதென்; என ஆராய்ந்தான். அவ்வமைச்சர்கள் நம் நிமித்திகன் கூறியபடி திவிட்டன் சிங்கத்தைக் கொல்லும் வீரச்செயல் நிகழ்கின்றதா என்பதனை அறிவதற்கு ஒற்றரை விடுத்தல் நன்றென்று கூறினர். மன்னவனும் அங்ஙனமே ஒற்றர் சிலரை விடுத்து மகிழ்ந்திருந்தான்.

இனி, வித்தியாதர ருலகின்கண் வடசேடியை ஆண்டுவந்த அச்சுவகண்டன் என்னும் பேரரசன் தன்னுடைய வெற்றி முதலியவற்றால் பொச்சாப்புடையனாய்ச் செருக்குற்றிருந்தான். அவன் நிலைமை கண்ட சதவிந்து என்னும் அவனுடைய நிமித்திகன் அவனை இடித்துரைத்து 'வேந்தே! நீ இங்ஙனம் பொச்சாப் பெய்திச் சோர்ந்திருத்தல் அடாது' என்றும் 'நிலவுலகில் உனக்குப் பகைவன் ஒருவன் தோன்றி வளர்கின்றான்' என்றும் 'அப்பகையினை நீ எளிதென் றிகழ்ந்திருத்தல் கூடா' தென்றும் அறிவுறுத்தினான்.

அதுகேட்ட அச்சுவகண்டன் சினந்து அந்நிமித்திகன் கூற்றினை ஆராய்தற் பொருட்டு அமைச்சர்களுடன் சூழ்ந்து அப்பயாபதியின்பால் இறைப்பொருள் பெற்றுவரும்படி தூதர் நால்வரை விடுத்தான். பேராற்றல்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 12:40:29(இந்திய நேரம்)