Primary tabs
வாய்ந்த அச்சுவக்கண்டனுக்கஞ்சிய பயாபதிவேந்தன் அத்தூதுவர்பால் அவன் விரும்பிய திறைப்பொருளைக் கொடுத்துவிட முயன்றான். அஃதுணர்ந்த திவிட்டன் அத்தூதுவரைத் தடுத்து அச்சுவகண்டனையும் இகழ்ந்து அவர்களை வறிதே விடுத்தான்.
இங்ஙனம் வறிதே சென்ற தூதுவர் அச்சுவகண்டனிடத்தே செல்லுவதற்கஞ்சி அவன் அமைச்சனாகிய அரிமஞ்சுவின்பாற் சென்று திவிட்டன் செயலைக் கூறினர். அதுகேட்ட அவ்வமைச்சன் அரிகேது என்னும் மாயவித்தை மிக்க ஒரு வித்தியாதரனை அழைத்து 'நீ சிங்கவுருவங்கொண்டு சென்று அவன் நாட்டினை அழிப்பதோடு அத்திவிட்டனையுங் கொன்று வருவாயாக' என்று ஏவினான். அவ்வரிகேது சிங்கமாகிச் சென்று சுரமைநாட்டை அடைந்து ஆங்குள்ள உயிரினங்களைக் கொன்று பெரிதும் அழிவுசெய்தான்.
இச்செய்தியை யுணர்ந்த திவிட்டன் அம் மாயச்சிங்கம் இருந்த இடத்தை எய்தி அதனைக் கொல்லும் பொருட்டுத் துரத்திச் செல்லுங்கால் மாயச்சிங்கமாகிய அவ்வரிகேது அஞ்சி ஓடி உண்மைச்சிங்கம் உறைகின்ற ஒரு குகையின் உள்ளே புகுவான்போலக் காட்டி மறைந்தனன். துரத்திச் சென்ற திவிட்டன் அச்சிங்கம் அக்குகையினூடிருப்பதாகக் கருதி அதன் வாயிலின்கட் சென்று ஆரவாரம் செய்து நின்றான். அதனுள் உறைந்த உண்மைச்சிங்கம் பெரிதும் வெகுண்டு திவிட்டன்மேற் பாய்ந்தது. திவிட்டனும் அச்சிங்கத்தோ டெதிர்த்துப் போரிட்டு அதன் வாயைப் பிளந்து கொன்று வீழ்த்தினான்.
இவ்வாறு திவிட்டன் சிங்கத்தைக் கொன்று வீழ்த்திய மறச்செயலை ஒற்றரால் உணர்ந்த சடிமன்னன் விரைந்து சுயம்பிரபையின் திருமணத்திற்கு ஆவன செய்யத் தொடங்கினான். நால்வகைப்படையும் சுற்றத்தாரும் தன்னைச் சூழப் போதன நகரத்திற்குப் புறப்பட்டான். சுயம்பிரபை தோழிமாருடன் அழகிய விமானத்தில் ஏறித் தந்தையோடு புறப்பட்டாள். அனைவரும் போதன நகரத்தை எய்தினர். அஃதுணர்ந்த பயாபதி மன்னன் சிறப்போடே சடிமன்னனின் எதிர்சென்று வரவேற்றனன். சடிமன்னன் சுயம்பிரபையை அழைத்துப் பயாபதியை வணங்கும்படி செய்தான். சுயம்பிரபையைக் கண்ட மன்னன் பெரிதும் மகிழ்ந்து அவளைப் பெரிதும் பாராட்டினான்.
பின்னர்ச் சுயம்பிரபை திவிட்டனைத் தன் விமானத்தில் இருந்தபடியே கண்டு அவன்பாற் பெரிதும் காதல் கொள்வாளாயினள். மாதவசேனை