Primary tabs
மாணிக்கவாசகர் வரலாற்றுச் சுருக்கம்
சைவ சமயாசாரியர்களுள் ஒருவராகிய மாணிக்கவாசக அடிகள் அவதாரம் செய்த ஊர் திருவாதவூர். இது மதுரைக்குக் கிழக்கே பன்னிரண்டு மைல் தொலைவில் உள்ளது. இவர் வாழ்ந்த இடத்தில் இன்று ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. இவரது பிள்ளைத் திருநாமம் திருவாதவூரர் என்பர். மாணிக்கவாசகர் என்பது தீட்சாநாமம். இவர் அமாத்திய அந்தணர் மரபைச் சேர்ந்தவர். அமாத்தியர் - அமைச்சர். திருவாசகமும் திருக்கோவையாரும் இவர் பாடிய நூல்களாகும். திருவாசகம் என்பது, ‘தெய்வத் தன்மை பொருந்திய மொழி’ என்பதாம். இறைவனால் ஆட்கொள்ளப்பட்டுப் பிரிந்த பின்னர் மீண்டும் இறைவனைச் சேர வேண்டும் என்று வருந்திப் பாடிய பகுதிகளே திருவாசகத்தில் மிகப்பலவாகும். திருக்கோவையார் அகப்பொருள் துறையில் அமைந்தது. இவை இரண்டும் எட்டாந் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அடிகளது காலத்தை ஏனைய மூவரது காலத்துக்கு முற்பட்டது என்று சிலரும், பிற்பட்டது என்று சிலரும் பல ஆதாரங்களைக் காட்டிக் கூறி வருகின்றனர். எனினும், அடிகள் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் அல்லர் என்பது எல்லார்க்கும் உடன்பாடு.
இவர் இளமையிலே எல்லாக் கல்வியும்
நிரம்பப்பெற்றுத் திறம்பட விளங்கினார். பாண்டிய
மன்னன் இவரது திறமையையும் தகுதியையும் அறிந்து
தனக்கு அமைச்சராக ஏற்றுக்கொண்டான்.
பரகதி பாண்டியற் கருளினை போற்றி’
என்று அகவலிலும், இன்னும் பிற பகுதிகளிலும் பாண்டியனைப் பற்றிய குறிப்பை நோக்கும்போது, அடிகளுக்கும் பாண்டியனுக்கும் உள்ள தொடர்பு விளங்கும்.
இவர், பாண்டியன் ஏவலால் பெரும்பொருள் கொண்டு, குதிரை வாங்கும்பொருட்டுக் கீழைக்கடற்கரைக்குச் சென்றார். அப்பொழுது வழியில் திருப்பெருந்துறையின்கண் அடிகளது முன்னைத் தவத்தால் சிவபெருமான் ஆசிரியத் திருக்கோலங் கொண்டு குருந்த மர நீழலில் அடியார் புடை சூழ வீற்றிருக்கக் கண்டார்; காந்தம் கண்ட இரும்பு போல அவர்பால் ஈர்க்கப்பட்டு அவரை வணங்கினார். குருவடிவாய்க் காட்சியளித்து அறவாழி