Primary tabs
-
வித்வானும், கத்தோலிக் கிறிஸ்தவரும் சர்வ சமரச கீர்த்தனை,
நீதிநூல் முதலிய பல அரிய நூல்களின் ஆசிரியரும்,
டிஸ்டிரிக்ட் முன்சீபும் ஆகிய இப்பெரியவர்
கிருஷ்ணபிள்ளையை தமதிடத்துக்கு அழைத்துச்சென்று,
அங்கு ஒரு சபைகூட்டி, கற்றோரையும் கனதனவான்களையும்
அழைத்து, வித்வானது காவியத்தையும் அவரது வித்வ
சாமர்த்தியத்தையும் புகழ்ந்து பேசி அவர்களை
சன்மானித்தனராம்.(2) எளியோர்மீது இரக்கம். ஏழைகளிடத்தில் வித்வான்
மிகுந்த இரக்கங்காண்பித்து வந்ததாக அவரை அறிந்தோர்
கூறுகின்றனர். அவருடைய காவியத்திலும் இக்குணம்
சிறப்பித்துச் சொல்லப்பட்டிருக்கின்றது. அன்பின் குணம்
மிகுந்த நமது வித்வான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்பொழுது
வெளியே யாசகர்கள் வந்து பிட்சைக்கு நிற்பதை
அறிந்தாரானால் அவர் தமது இலையைச் சோறு கறிகளுடன்
கொண்டு வந்து அவர்களுக்குக் கொடுத்துவிடுவதைத் தாம்
அடிக்கடிப் பார்த்திருப்பதாக இவருடைய பௌத்திரர்களில்
ஒருவர் கூறுகின்றார்.(3) பரோபகார சிந்தை. இந்நற்குணத்தை திருஷ்டாந்தப்
படுத்தக் கூடிய ஒரு சம்பவத்தை இங்கெடுத்துக் கூறுவோம்.
வித்வானுடைய அன்பான சீஷரும், இவரது நற்குணசீலத்தால்
கவரப்பட்டு கிறிஸ்தவ பக்தனாகி, சிறந்து விளங்கின
பாளையங்கோட்டை திவான் பகதூர் A. S. அப்பாசாமி
பிள்ளையவர்கள் தாமே எழுதியுள்ள இச்சம்பவமாவது : -"நாற்பது வருடங்களுக்குமுன் தூரதொலையிலிருந்து
நெட்டையும் மெலிந்த தேகியுமான கறுப்பு நிறமுள்ள ஒரு
சைவ வாலிபன் விபூதி தரித்து, கையில் புஸ்தகங்கள்
ஏந்தினவனாக, ஒருநாள் மாலை ஒர் வித்வானைச் சந்தித்து
'ஐயா, இவ்வூரிலிருக்கும் பாடசாலையில் என்னைச் சேர்த்து
எனக்கு வேண்டிய உதவி புரியவேணும்' என்று கேட்டான்.
அவர் சந்தோஷமாக அப்படிச் செய்வதாக வாக்குக்கொடுத்தார்.
கொஞ்சநேரம் அந்த வாலிபனோடு அந்த இடந்தேடி
வருவதற்கு உள்ள காரணத்தையும் யோகக்ஷேமம்
முதலானவைகளையும்பற்றிச் சம்பாஷித்துக்கொண்டிருந்தார்.
பொழுது இருட்டிவிட்டது. அந்த ஊரில் இந்த வாலிபன்
சாப்பிடக்கூடிய சைவ வீடு கிடையாது. அவன் பட்டினியாய்
இருக்கவேண்டும், அல்லது இரண்டு மூன்று மைல் தூரம்போய்
சைவ வீடுதேடி சாப்பிடவேண்டும். அவன் வெகுதூரம்
நடந்துவந்த சிரமத்தினாலும் திக்குத்திசை தெரியாததினாலும்
இருட்டிப்போனதினாலும் பட்டினியாயிருப்பதைத்தவிர வேறு
வழியில்லை. அவனுக்கும் சுயமாய் சமையல்பண்ணத் தெரியாது.
அந்த ஊரில் சரியான கடைகளுமில்லை. வித்வானுக்கு
இவனைப் பட்டினியாய்ப் போட்டுவிட்டு தான் புசிக்கவும்
மனம்வரவில்லை. கொஞ்சநேரம் இப்படியாக இருவரும்
யோசித்து மறுக்கடிப்பட்டு ஒரு உபாயம் செய்தார்கள். கொஞ்ச
தூரத்துக்கப்பால் மூழியண்ணன் கிணறு என்று ஒரு நல்ல
தண்ணீர் கிணறு இருந்தது. அரிசி காய்கறி விறகு முதலிய
சாமக்கிரியைகளையும் பாத்திரங்களையும் கொடுத்து, அந்த
வாலிபனைக் கிணற்றண்டை அடுப்புக் கூட்டி சமையல்
செய்யும்படி சொல்லிக்கொடுத்து சமையல் செய்து
சாப்பிடுமட்டும் கூடவே அன்பாயங்கே காத்திருந்தார்.
இடைக்கிடையே தட்டுப்பட்ட சாமான்களை அவரே தமது
வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு