தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kachchik Kalambagam-சுகந்தரு - 8




பாதகந்தரு துன்பொழி வகை.

கட்டளைக் கலித்துறை.

சுகந்தரு கச்சிப் பதிவந் தடியர் துயர்களைவோர்
நகந்தரு மெல்லியற் காம விழியிரு நாழிநெல்லால்
உகந்தரு முப்பத் திரண்டறம் ஓம்பச்செய் உத்தமர்பா
தகந்தரு துன்பொழிப் பார்பணி வீரவர் தாண்மலரே.             (8)

(இ-ள்.) சுகம் தரு - இன்பத்தைத் தருகின்ற, கச்சிப் பதி வந்து - திருக்கச்சிப் பதியில் எழுந்தருளி, அடியர் துயர்களைவோர் - அடியார் துக்கங்களை ஒழிப்பவரும், நகம் தரு மெல்லியல் காம விழி - மலையரையன் பெற்ற மகளாகிய மேன்மையான சாயலையுடைய காமாட்சி, இருநாழி நெல்லால் - இரண்டு படி நெல்லாலே, உகந்து - மகிழ்ந்து உயர்ந்து, அரு - அரிய, முப்பத்து இரண்டு அறம் ஓம்ப - முப்பத்திரண்டு அறங்களையும் செய்யும்படி, செய் உத்தமர் - செய்த உத்தமரும், பாதகந் தரு - தாம் அடியார்க்குப் பாதகத்தைத் தருகின்ற, துன்பு ஒழிப்பார் - துன்பத்தை ஒழிப்பவருமாகிய, அவர் தாள்மலர் - அந்த ஏகாம்பர நாதரின் திருவடித் தாமரையை, பணிவீர் - வணங்குவீர் (எ-று.)

காமக் கண்ணியார் வேளாளர்க்கு இருநாழி நெல்லைக் கொடுத்து அதைக் கொண்டு நெல்லைப் பெருக்கி உலகில் 32-அறம் செய்யும்படி உதவினர்.

பாதகம் தரு துன்பு (துன்பம்) ஒழிப்பார்; அவர் தாள் மலரே பணிவீர் என இயைக்க.

நகம் - போகாதது என்ற காரணப் பொருளுடைய மலை.

(உகப்பு - தொல் - சொல். உரி, 3) உகந்து, உவந்து என்னும் பொருட்டு.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 23:16:34(இந்திய நேரம்)