Primary tabs
கல்மனத்தைக் குழைவித்தல் கம்பற்குக் கூடும்
இரட்டை ஆசிரிய விருத்தம்.
மாதுமையாள்
பனிமலையில் வளர்ந்தாள்நின்
மதலையரிற் கயமு கத்தோன்
வரமுனிவன்
வேண்டவட வரையேட்டிற்
பாரதப்போர் வரைந்தான்; நீபப்
போதலங்கல்
அணிகுமரன் குன்றுதொறும்
பேருவகை பூப்ப மேவிப்
புனிதவிளை
யாட்டயர்ந்தான்; கச்சியமர்
புண்ணியநீ கயிலை மேரு
மாதிரத்தே
வதிந்தனை; யென் கல்லனைய
மனத்தூடுன் குடும்பத் தோடு
மருவவொரு
தடையுமிலை மலைசிலையா
வளைத்த நினக் கெளிதே, என்றன்
கோதுடைய
மனச்சிலையைக் குழைத்தன்பின்
நெகிழ்வித்தல் ஐய முன்னாட்
குருகுய்ய
உபதேசங் கூறியநீ
எனக்குரைத்தாற் குறைமட் டாமே. (14)
(இ-ள்) பனிமலையில்-இமயமலையில், மாது உமையாள்-உமாதேவி, வளர்ந்தாள்-வளர்ந்தாள், நின் மதலையரில்-நின் புதல்வருள், கயமுகத்தோன் - யானைமுகத்தையுடைய விநாயகன், வரமுனிவன் - மேலான வியாச முனிவன், வேண்ட-வேண்டிக்கொள்ள, வடவரை யேட்டில் வடக்கேயுள்ள மேருமலையை ஏடாகக்கொண்டு அதில், பாரதப்போர் - பாரதப்போரை, வரைந்தான்-எழுதினான், நீபப் போது அலங்கல் - செங்கடம்பு மலராலாகிய மாலையை, அணி - அணிந்த, குமரன்-முருகன், குன்றுதொறும் - மலைகள் தோறும், பேர் உவகை பூப்ப - பெரிய மகிழ்ச்சி உண்டாக, மேவி - தங்கி, புனிதம் விளையாட்டயர்ந்தான் - தூய திருவிளையாடலைச் செய்தான்.
கச்சியமர் புண்ணிய - காஞ்சியில் எழுந்தருளிய நல்வினையை நற்றவம் புரிவார்க்கு ஈந்து விளங்கும் நல்லவரே! நீ கயிலை மேரு மாதிரத்தே - தேவரீர் கயிலை மலையிலும், மேருமலையிலுமே, வதிந்தனை - வசித்தனை, (ஆதலால்) என் கல்லனைய - எனது கல்லையொத்த, மனத்தூடு - மனத்தில், உன் குடும்பத்தோடு - உனது குடும்பத்துடன்,
மருவ ஒரு தடையுமிலை - பொருந்தி வாழ்வு புரிந்தருள ஒரு தடையுமில்லை, மலை - பொன்மலையாகிய மேருமலையை, சிலையா(க) வளைத்த - வில்லாக வளைத்த, நினக்கு - தேவரீருக்கு, என்றன் - எனது, கோது உடைய - குற்றமுடைய, மனச்சிலையை - மனமாகிய மலையை, குழைத்து - குழையச் செய்து, அன்பின் நெகிழ்வித்தல் - அன்போடு நெகிழச் செய்தல், எளிதே - எளிதாகும், ஐய - ஐயனே, முன் நாள் - முற்காலத்து, குருகு உய்ய - நாரை உய்ய, உபதேசங் கூறிய - மெய்யறிவுரை மொழியைச் சொல்லிய, நீ - தேவரீர், எனக்கு உரைத்தால் - எனக்குச் சொன்னால், குறைமட்டாமே - குறை அதிகம் ஏற்படாதன்றே.
கஜம் - கயம் - யானை. முனிவன் - வியாசன். போது - மலர் (பொழுதில் மலர்வது, காலவாகுபெயர்.) மலரும் பருவத்தில் உள்ள பேரரும்பு. மாதிரம் - மலை.
மாலை மலரு மிந்நோய் (குறள்: 1237).
குறை மட்டாமே - குறைவு அளவு படுமோ? ஏகாரம் வினாப் பொருளது. (ஆகுமோ - குறை ஆகாது.)
உன் மனைவி மலையில் வளர்ந்தாள்; உன் மூத்த மகன் மலையில் எழுதினான்; உன் இளைய மகன் மலைதோறும் ஆடுகின்றான்; நீ கயிலைமலையில் வாழ்கின்றாய். எனவே, உன்குடும்பம் மலையை விருப்பம்கொண்டிருத்தலால் மனமாகிய மலையில் நீ குடும்பத்தோடு வாழ்வாய்.
அங்ஙனம் நீ வாழ என் மனமாகிய மலையை நெகிழ்ச்சி அடையச் செய்வாய்; அவ்வாறு செய்வது எளிதானதே. எவ்வாறெனில் (முன் ஒரு திண்ணிய பொன்மலையாகிய மேரு மலையை வளைத்தாயாதலால் என்க.) அஃறிணைப் பிறப்பினதாகிய ஒரு நாரைக்கு அறமுரைத்த நீ ஆறறிவு உடைய எனக்கு அறநெறி காட்டிப் பக்குவம் வருவித்தல் குறையாகாது.