தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kachchik Kalambagam-தொண்டர்க் - 41




அறுசீர் ஆசிரிய விருத்தம்

      தொண்டர்க் குறவே யானாரைத்
            தூய மறைமா நிழலாரை
      அண்டர்க் கிறையா மடலாரை
            அக்கும் எலும்பும் அணிவாரைக்
      கொண்டல் வண்ணன் எண்கண்ணன்
            கூறற் கருஞ்சீர் கொண்டாரைக்
      கண்டத் துறையு  மாறுகடற்
            கடுவுண் டாரைத் துதிப்பாமே.                      (41)

(இ-ள்.) தொண்டர்க்கு - அடியவர்க்கு, உறவே ஆனாரை - உறவாக ஆனவரை, தூய - மறுவற்ற, மறைமா நிழலாரை - வேதமாகிய மாமரத்தின் நிழலில் எழுந்தருளியவரை, அண்டர்க்கு - வானவர்க்கு, இறை ஆம் - தலைவராகிய, அடலாரை - வல்லமை உடையாரை, அக்கும் எலும்பும் அணிவாரை - சங்கு மணியையும் எலும்பையும் அணிபவரை, கொண்டல் வண்ணன் - முகில் போன்ற கருநிறமுடைய திருமாலும், எண் கண்ணன் - எட்டுக் கண்களையுடைய நான்முகனும், கூறற்கு - இத்தன்மையன் என்று சொல்லுதற்கு, அருஞ் சீர் கொண்டாரை - அரிய சிறப்புக் கொண்டவரை, கண்டத்து உறையுமாறு - கழுத்தில் தங்கும்படி, கடல் கடு உண்டாரை - கடலின்கண் தோன்றிய நஞ்சை உண்டவரை, துதிப்பாமே - யாம் துதிப்போம், ஏ நெஞ்சே நீயும் வருவாயாக.

துதிப்பாம் - தன்மைப்பன்மை.

எலும்பு அணிவார்: “கங்காளம் ஆமாகேள் காலாந் தரத்திருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ” என்பதனாலும் அறியலாம்.


<

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-10-2019 16:21:57(இந்திய நேரம்)