தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kachchik Kalambagam-இன்படைய - 69




இன்னிசை வெண்பா

இன்படைய வேண்டின் இகலற்க - வன்பிறவித்
துன்பொழிய வேண்டினவந் துன்னற்க - அன்புருவாம்
போதனருள் வேண்டுமெனிற் பொய்யற்க - சூதகலச்
சூதநிழ லான்கழலைச் சூழ்.                        (69)

(இ - ள்.) இன்பு அடைய வேண்டின்-இன்பத்தை அடைய விரும்பினால், இகலற்க - பிறரிடத்து மாறுபாடு கொள்ளற்க, வன் பிறவித் துன்பு - நீக்குதற்கரிய வலிமையையுடைய பிறப்பின் துன்பம், ஒழிய வேண்டின் - ஒழிய விரும்பினால், அவம் துன்னற்க - (வீட்டு நெறிக்குக் கேடுதரும்) பாவச்செயலைச் செய்யற்க, அன்பு உருவாம் - அன்பே வடிவமாகிய, போதன் - மெய்யறிவுருவனாஞ் சிவபிரானது, அருள் வேண்டு மெனில் - அருள் வேண்டுமே ஆனால், பொய்யற்க - பொய் பேசாது ஒழிக, சூது அகல - வஞ்சகம் நீங்க, சூதம் நிழலான் - மாமரத்தின் நிழலில் வீற்றிருக்கும் ஏகாம்பரநாதரது, கழலை - கழலணிந்த திருவடியை, சூழ் - எண்ணுக.

அன்புருவாம் போதன் - அன்பே வடிவாகிய (மெய்யுணர்ந் தோரால்) தெளியப்படுபவன். (போதம் - தெளிதல்.)

நெஞ்சு - முன்னிலை எச்சம்.

‘சூழ்க’ என்பது ‘சூழ்’ என விகாரமாயிற்று.

இகலென்ப எல்......பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் ஆதலால் ‘இகலற்க’ என்றார்.

கழல், தானியாகுபெயராய்த் திருவடிகளை யுணர்த்தி நின்றது. வியங்கோளெல்லாம் வேண்டிக்கோடற்பொருளில் வந்தன; விதித்தற்பொருளில் வந்தனவெனவும் கொள்ளுப.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-10-2019 15:17:59(இந்திய நேரம்)