Primary tabs
குமரகுருபரசுவாமிகள் வரலாற்றுச் சுருக்கம்
பாண்டி நாட்டிலேயுள்ள ஸ்ரீவைகுண்டத்திலே சைவவேளாளர் குலத்திலே சண்முக சிகாமணிக் கவிராயரும் அவர் மனைவியார் சிவகாமியம்மையாரும் செய்த தவப்பயனாக ஒரு நன் மகனார் பிறந்தனர். அவர் ஐந்தாண்டளவும் பேசாதிருந்தமை கண்ட பெற்றோர், திருச்செந்தூர் சென்று முருகக் கடவுளை வழிபட அப்பெருமான் அருளால் அப்புதல்வர் ஊமை நீங்கிச் சைவ சித்தாந்த சாத்திர சாரமாய் விளங்கும் ‘கந்தர் கலிவெண்பா’ என்னும் பாடலை அப்பெருமான்மீது அருளிச்செய்தனர். முருகக் கடவுள் அவர் கனவிலே குமர வடிவங்கொண்டு ‘நீ குருபரனாகுக’ என்றருளியதால், அன்று முதலாக அவர் குமரகுருபர ரென அழைக்கப்பட்டார்.
முருகக்கடவுள் ஆணைப்படி குமரகுருபரர் ஒரு சமயம் வட திசை செல்லும்போது ‘மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ பாட, அக்காலத் தரசராகிய திருமலை நாயக்கர் மீனாட்சியம்மை யருளால் அதனைத் தெரிந்து அப்பிள்ளைத்தமிழை அம்பிகை திருமுன் அரங்கேற்றுவித்தனர். அப் பிள்ளைத்தமிழின் வருகைப் பருவத்து ஒன்பதாவது செய்யுளாகிய ‘தொடுக்குங் கடவுட் பழம் பாடற் றொடையின் பயனே’ என்று தொடங்குஞ் செய்யுளுக்குக் குமரகுருபரர் பொருளுரைக்கும்பொழுது மீனாட்சியம்மையார் அருச்சகரின் பெண்போன்று தோற்றம்கொண்டு அரசர் கழுத்திலணிந்திருந்த மணிவடத்தைக் கழற்றிக் குமரகுருபரர் கழுத்திலிட்டு மறைந்தருளினர். குமரகுருபரர் பின்னர் ‘மீனாட்சியம்மை குறம்’ ‘மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை’ ‘மதுரைக்கலம் பகம்’ ‘நீதிநெறிவிளக்கம்’ என்பனவற்றை இயற்றி யருளினார்.
பின்பு திருவாரூர் சென்று தியாகராசப் பெருமானை வணங்கித் ‘திருவாரூர் நான்மணிமாலை’ என்னும் நூலைக் குமரகுருபரர் பாடினார். அப்பால் தருமபுரஞ் சென்று அங்கே நான்காவது ஞான ஆசிரியராய் எழுந்தருளியிருந்த மாசிலாமணித் தேசிகரிடம் ஞானம் பெற விரும்பி, அவராணைப்படி சிதம்பரஞ் செல்லப் புறப்பட்டு, வைத்தீசுரன் கோவில் அடைந்து, குமரக்கடவுள்மீது ‘முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்’ என்னும் நூல் பாடினார். பின் சிதம்பரஞ் சென்று நடராசப் பெருமான்மீது ‘சிதம்பர மும்மணிக் கோவை’ ‘சிதம்பரச் செய்யுட்கோவை’ என்னும் இரண்டு நூல்களையும், அம்பிகைமீது, ‘சிவகாமியம்மை யிரட்டைமணிமாலை’ என்னும் நூலையும் பாடினார். பின் தருமபுரம் சாரவும், மாசிலாமணி தேசிகர் அவருக்கு ஞானப்பே றெய்துவித்தனர். அக்கருணையை வியந்து தம்மாசிரியர்மீது ‘பண்டார மும்மணிக் கோவை’ யென்னும் நூல் பாடி அதனை அவ்வாசிரியர்க்கு ஏற்பித்தனர்.
பின்னர் அம்மாசிலாமணி தேசிக ராணைப்படி தமக்குத் திருமலை நாயக்கராற் கொடுக்கப்பட்ட பொருளைக் கொண்டு காசிக்குப்போய், விசுவநாதப் பெருமான்மீது ‘காசிக்கலம்பகம்’ என்னும் நூல் பாடினார். அந்நாட்டு மகம்மதிய அரசனிடம் இடம் பெற விரும்பிக் கலைமகள்மீது ‘சகலகலாவல்லிமாலை’ பாடி இந்துத்தான் மொழியையறிந்து, அரசனிடம் சென்று, பல சைவ மடங்களும் கேதாரநாதர் கோயிலும் அமைத்தனர்.
பின்னர் மூன்றுமுறை தருமபுரம் வந்து தம் ஆசிரியரை வணங்கிக் காசிக்குப் போய்ச் சைவசமய வளர்ச்சி கருதிப் பல காரியங்கள் செய்து, காசியில் ஒரு வைகாசித் திங்கள் தேய்பிறைப் பக்கத்து மூன்றாம் நாளில் வீடுபே றெய்தினர்.