தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்



ஆசை வைத்தேன் ரத்தினமே!

அரூர் சந்தையில் தனது காதலியை அவன் கண்டு கொண்டான். வேலை முடிந்ததும் அவள் ஊருக்குப் புறப்பட்டாள். அவனும் பின் தொடர்ந்தான். வழியில் யாரும் இல்லை. அவன், அவள் மீது கொண்டுள்ள அன்பைப் புலப்படுத்திப் பாடுகிறான்,

 
அரூருப் பேட்டையிலே
அழகான சந்தையிலே
ஆலமரத்தடியில்-சின்னத்தங்கம்-நீ
ஆய்ந்தெடுத்த ரத்தினமோ ?
சொன்னாலும் ஆகாது
சொல்லவும் கூடாது
கண்டாலே போதுமடி-சின்னத்தங்கம் என்
கருமமெல்லாம் தொலைஞ்சி போகும்
கட்டாணி முத்தோ-நீ?
கற்கண்டோ சர்க்கரையோ ?
தொட்டாலே போதுமடி-சின்னத்தங்கம் என்
தொந்திரவு நீங்குமடி
ஆசைக் குகந்தவளே
ஆசார மானவளே
நேசித்தால் எந்தனுக்கு-சின்னத்தங்கம்
நினைவு தடுமாறுதடி
பதினாறு பக்கத்துக்கும்
மதிவு நிலா உன் முகமோ ?
அதனாலே உந்தன் மேலே-சின்னத்தங்கம்
ஆசை வச்சேன் ரத்தினமே !
 

சேகரித்தவர்:
S. சடையப்பன்

இடம்:
அரூர் வட்டம்,
தருமபுரி மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:08:06(இந்திய நேரம்)