Primary tabs
திணை பால் வேறுபாடு, சொற்களின் பொருளை ஒட்டியதே; கண்மூடி மரபை ஒட்டியது அல்ல.
வினைச்சொற்கள் முற்றுவினை, எச்சவினை என இருவகைப்படும். முற்றுவினைகளில் பெரும்பாலானவை திணை பால் உணர்த்தும் விகுதிகளோடு சேர்ந்து அமையும். பெயரெச்சங்களிலும் பண்பை உணர்த்தும் சொற்களிலும் பால் வேறுபாடு இல்லை. வினைப்பகுதிகளிலிருந்து வினைச்சொற்களும் அமையும்; பெயர்ச்சொற்களும் அமையும். ஆனால் பெயர்ப்பகுதிகளிலிருந்து வினைச் சொற்கள் அமைவது மிகக் குறைவு.
தமக்கென்று தனியே பொருள் இல்லாமல், சார்ந்த சொற்களின் பொருளை வேறுபடுத்த உதவும் சொற்களும், பொருளற்ற மற்றச் சொற்களும் இடைச்சொற்கள் எனப்படும்.
தமிழ் மொழியின் சொற்கள், அடிச்சொற்களோடு மற்ற உறுப்புகள் சேர்ந்து ஒட்டி அமையும் சொற்கள் (agglutinative). ஆகவே, சொற்களின் அமைப்பு. தெளிவாகத் தோன்றும். மிகப் பழைய இலக்கியங்களில் உள்ள சொற்களும் அவ்வாறு அமைந்தவைகளே. அவற்றின் அடிச்சொற்களும் இக்காலத்துச் சொற்களின் அடிச்சொற்களும் ஒரே வகையானவை. உணா (food) என்பது பழையசொல். ஊண் உண்டி என்பன இடைக்காலச் சொற்கள். உணவு என்பது இக்காலச் சொல். அடிச்சொல் உண் என்பது, மூன்றிலும் தெளிவாகத் தெரிகிறது. விகுதி முதலியன மட்டுமே வேறுபடும். ஆகவே, சிலமுறை படித்தபிறகு, பழங்காலத்துச் செய்யுளும் பழகிய தமிழாகவே உணரப்படுகிறது. அதனால்தான், இக்காலத்து மக்களும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய செய்யுள்களையும் படித்து உணர முடிகிறது. அதனாலேயே இலக்கிய வளர்ச்சியில் இடையறாத தொடர்பு இருந்து வருகிறது. பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட பக்திப் பாடல்களும் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கம்பர் முதலானோரின் பாடல்களும் இன்னும் பயன்படுவதற்குக் காரணம் இதுவே.
வாக்கிய அமைப்பு (syntax) மிகப் பழங்காலம்முதல் இன்று வரை ஏறக்குறைய ஒரே தன்மையாகவே இருந்து வருகிறது. சொற்களின் வடிவங்கள் ஒவ்வொரு திராவிட மொழியிலும் ஒவ்வொரு வகையாக மாறியபோதிலும், வாக்கிய அமைப்பு மட்டும் மாறாமலே ஒரே வகையாக