தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 14 -

இதழ்களில் எழுதும் எழுத்தாளர்களின் நடையோ, தமிழ் மக்கள் பேசும் பேச்சுத் தமிழை ஒட்டி அமைந்துள்ளது. பேச்சுத் தமிழில் பிறமொழிச் சொற்கள் கலக்கின்றன; வாக்கியங்கள் உணர்ச்சிக்கு ஏற்றவாறு அமைகின்றன. நாடக அரங்குகளிலும் பேச்சு மேடைகளிலும் அந்த நடையே உள்ளது. கவிதைகளில் தூய தமிழைப் பெரும்பாலும் கையாண்ட பாரதியாரும், உரைநடையில் கட்டுரைகள் எழுதியபோது, அந்த நடையையே கையாண்டார்.

திரு. வி. கலியாணசுந்தரர் இருவகையாரிடத்திலும் நெருங்கிப் பழகியவர். அவர் புலவர்க்குப் புலவர்; எழுத்தாளர்க்கு எழுத்தாளர். இலக்கிய நூல்களும் படைத்தார்; நாளிதழ் வார இதழ்களும் நடத்தினார். புலவர்களையும் எழுத்தாளர்களையும் இணைக்கும் பாலமாக அவருடைய வாழ்வு இயங்கியது. தொடக்கத்தில் வட சொற்கள் கலந்த நடையில் எழுதிவந்த அவர், தனித் தமிழ் இயக்கம் செல்வாக்குப் பெற்ற பிறகு, தூய தமிழில் எழுதத் தொடங்கினார். தக்க தமிழ்ச் சொற்கள் கிடைக்காதபோது மட்டுமே பிறமொழிச் சொற்களைக் கலந்தார். உணர்ச்சியற்ற நீண்ட வாக்கியங்களைவிட்டு, மக்களின் பேச்சில் உள்ளவாறு உணர்ச்சியான சிறு வாக்கியங்களையே கையாண்டார். இவ்வாறு அவருடைய எழுத்தும் பேச்சும், இரு சாரரையும் இணைக்கும் பாலமாக இருந்து தொண்டு செய்தபோதிலும், இருவகையார்க்கும் இடையே ஏற்பட்ட பிளவைப் போக்க முடியவில்லை. இன்றும் இருவகைத் தமிழ் நடைகள் தனித்தனியே இருந்து வருகின்றன.

வட்டார வழக்குகள்

இன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பேசப்படும் தமிழுக்குள்ளும் சிறுசிறு வேறுபாடுகள் இருந்து வருகின்றன. சென்ற நூற்றாண்டில் போக்குவரத்துக் குறைவாக இருந்த காலத்தில் இந்த வட்டார மொழி (dialects) வேறுபாடுகள் மிகுதியாக இருந்திருக்கும். போக்குவரத்துப் பெருகிய காரணத்தாலும், கல்வி நிலையங்களும் பாட புத்தகங்களும் செய்தித் தாள்களும் இதழ்களும் வானொலி முதலியனவும் தமிழ்நாடு முழுமைக்கும் எல்லாப் பகுதிகளுக்கும் பொதுவாக ஒரேவகையாக அமைந்து வருவதாலும், இப்போது அந்த வேறுபாடுகள் குறைந்துள்ளன எனலாம்; இனிப் பெருகுவதற்கு வழி இல்லை. ஆயினும், இன்றும் திருநெல்வேலிப் பகுதியார் பேசும் தமிழும், கோயமுத்தூரார் பேசும் தமிழும் சிற்சில வகையில் வேறுபட்டிருக்கினறன. அவைகளுக்கும் தஞ்சை திருச்சி மாவட்டத்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:11:24(இந்திய நேரம்)