Primary tabs
நாலடியார்
திருக்குறளுக்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் பழைய நீதி நூல் நாலடியார் என்பது. அது நான்கு அடிகள் கொண்ட வெண்பாவால் ஆகியது ஆகையால், அந்தப் பெயர் பெற்றது. நானூறு செய்யுள்கள் கொண்டது. திருக்குறள் இரண்டு அடிகளால் ஆகியது; நாலடியார் நான்கு அடிகளால் ஆகியது. இந்த அடிக் கணக்கை வைத்து இரண்டு நூலையும் ஒருங்கே போற்றும் பழமொழி ஒன்று உண்டு. ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ என்பது அந்தப் பழமொழி.
இந்த நூலின் செய்யுள்கள் பலரால் பாடப்பட்டவை. இவை பாடப்பட்டதுகுறித்துப் பழைய கதை ஒன்று வழங்கிவருகிறது. பல மலைகளின் சமண முனிவர்கள் எண்ணாயிரம் பேர் வாழ்ந்து வந்தார்களாம். அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் பஞ்சமும் வறட்சியும் ஏற்படவே, அவர்கள் பாண்டியநாட்டில் மதுரைக்கு வந்தனர். பாண்டியனுடைய உதவி பெற்றுத் தமிழ் ஆராய்ச்சியில் காலத்தைச் செலவிட்டனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு தம் நாட்டில் பஞ்சம் தீர்ந்ததாகச் செய்தி அறிந்து தம் இருப்பிடங்களுக்குத் திரும்ப எண்ணினர். பாண்டிய மன்னன் அவர்களைப் பிரிந்து செல்ல இசைவு தராமல் தயங்கினான். அந்தச் சமண முனிவர்கள் எண்ணாயிரவரும் ஆளுக்கு ஒரு வெண்பா எழுதித் தம் இருக்கைகளில் வைத்துவிட்டு ஒரு நாள் இரவில் சொல்லாமல் புறப்பட்டுச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் பாண்டியன் செய்தி அறிந்து மிக வருந்தினான். அவர்களின் பிரிவுக்காக நொந்த மனத்தோடு, அந்தப் பாடல்கள் எழுதிய ஏடுகளை