தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 248 -

14. வெளிநாடுகள் தந்த இலக்கியம்

இலங்கை

பழங்காலம் முதற்கொண்டே இலங்கை தமிழ் வளர்த்த நிலமாக இருந்துவருகிறது. இலங்கையின் வடபகுதியாகிய யாழ்ப்பாணத்திலும் கிழக்குப் பகுதியாகிய மட்டக்களப்பிலும் புலவர் பலர் வாழ்ந்து தமிழ் நூல்கள் பல இயற்றித் தந்துள்ளனர். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈழத்துப் பூதன்தேவனார் என்ற புலவர் அந்த நாட்டினராய்த் தமிழ் வளர்த்திருக்கிறார். அவர் இயற்றிய ஏழு பாட்டுகள் சங்க இலக்கியத்துள் சேர்ந்துள்ளன (ஈழம் என்பது இலங்கையைக் குறிக்கும் பழைய தமிழ்ச்சொல்). இலங்கையின் ஆட்சிமொழியாகப் பதினெட்டாம் நூற்றாண்டுவரையில் தமிழே இருந்துவந்தது. சிங்களவரும் தமிழ் கற்றுவந்தனர். சிங்களவரில் சிலர் தமிழ் நூல்கள் இயற்றியுள்ளார். ஆட்சி புரிந்து வந்த சிங்கள அரசர்கள் ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்து கொண்ட காலத்திலும் தமிழிலேயே கையெழுத்து இட்டனர். ஆகையால் நெடுங்காலமாகத் தமிழ் இலக்கியம் இலங்கையிலும் வளர்ச்சி பெற்று வந்ததில் வியப்பு இல்லை.

இலங்கைத் தமிழ் நூல்கள்

வடமொழி காளிதாசரின் காப்பியத்தின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் இயற்றப்பட்டுள்ள இரகுவம்சம் என்ற காப்பியம் இலங்கையில் இருந்த புலவராகிய அரசகேசரி என்பவரால் (பதினாறாம் நூற்றாண்டில்) இயற்றப்பட்டதாகும். ஈராயிரத்துநானூறு செய்யுள்கொண்ட காப்பியம் அது. தமிழ்நாட்டில் தலபுராணங்கள் பல எழுந்த காலத்தில் இலங்கையிலும் அத்தகைய புராணங்கள் பல இயற்றப்பட்டன. தமிழ்நாட்டில் கோவை உலா கலம்பகம் சதகம் தூது அந்தாதி முதலான நூல் வகைகள் பெருகிய காலத்தில் இலங்கையிலும் அவ்வகையான நூல்கள் படைக்கப்பட்டன. தக்கிண கைலாச புராணம், கோணாசல புராணம், புலியூர்ப் புராணம், சிதம்பர சபாநாத புராணம் முதலியன இயற்றப்பட்டன. சிவராத்திரிப் புராணம், ஏகாதசிப் புராணம் என்பவனவும் அங்குப் பிறந்தவைகளே. சூது புராணம், வலைவீசு புராணம் என்பன புதுமையானவை. கனகி புராணம் என்பது ஒரு தாசியின் வாழ்வுபற்றியது. கிறிஸ்தவச் சமயச் சார்பான தமிழ் நூல்களும் இலங்கையில் இயற்றப்பட்டன. முருகேச பாண்டிதர் நீதி நூல் முதலிய சிலவகை நூல்களை இயற்றினார். சிவசம்புப் புலவர் என்ற ஒருவர் செய்யுள்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:16:57(இந்திய நேரம்)