1. பாட்டுறுப்புப் பெயர்கள்
பல்லவி என்னுஞ்சொல் வடமொழியிலின்மையாலும், நீண்ட காலமாய்த்
தமிழ்நாட்டுலக வழக்கில் வழங்கிவருவதனாலும், கருநாடக சங்கீதம் என்பது பண்டை
இசைத்தமிழின் பெயர்மாற்றமே யாதலாலும், அது இப் பனுவலில் தென்சொல்லாகவே
கொள்ளப் பெற்றுள்ளது. துணைப் பல்லவியாலும் பிற வுறுப்புகளாலும் பல்லவி பன்முறையும்
அவாவப் பெற்று நிற்பதால் பல்லவாவி என்னும் சொல் பல்லவி என்று மருவி யிருக்கலாம்.
பல்லவிக்குத் துணையாயிருப்பது துணைப் பல்லவி. சரணம் என்னும் வடசொல்
அடி அல்லது பாதம் என்னும் பொருளதாகையாலும், அடி (அல்லது பாதம்) என்னும் சொல்
தமிழில் வேறு உறுப்புப் பெயராக (அதாவது சரணத்தின் பகுதியைக் குறிக்கும் சொல்லாக)
வழங்குவதாலும், பாட்டிற்கு உரு எனும் பெயருண்மையாலும், சரணம் என்னும் உறுப்பு இங்கு
உருவடி எனக் குறிக்கப்பெற்றுள்ளது.
தொகையரா என்னும் உருதுச்சொற்கு, உரைப்பாட்டு என்பது ஒத்த தமிழ்ச்சொல்லாகும்.
பாணி, தாளம் என்னும் இரண்டும், பண்டை யிசைத்தமிழ் நூல்களில்
ஒருபொருட் சொல்லாக ஆளப் பெற்றுள. பாடுவார் கையினால் தட்டுவது பாணி என்றும்,
ஆடுவார் பாதத்தினால் தட்டுவது தாளம் என்றும் பெயர் பெற்றனவாகத் தெரிகின்றன.
பண்-பாணி = கை. பண்ணுவது பாணி. பண்ணுதல் செய்தல். பாட்டைக் குறிக்கும் பாணி
என்னும் சொல், இராகம் என்று பொருள்படும் பண் என்னும் சொல்லினின்று பிறந்ததாகும்.
கையைக் குறிக்கும் பாணி என்னும் சொல், கடல்கோளுக்குப்பின் தமிழில் வழக்கற்றது
போலும்! வடமொழியில் இச் சொற்கு வேரில்லை. தாள்-தாளம். தாள்-பாதம்.
தாளப் பெயர்கள் இப் பனுவலில் பின்வருமாறு ஆளப்பெற்றுள:
பிறமொழிச்சொல்
தமிழ்ச்சொல்