தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   32


 

யினர். புறப்பொருள் உலகியல்பானன்றி   வாராமையின்,  அது  நாடக
வழக்கம் அன்றாயிற்று.                                    (56)

57. மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
சுட்டிஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்.

இது,   நடுவணைந்திணைக்குரியதோர்  இலக்கணம்   உணர்த்துதல் நுதலிற்று.

அகன் மக்கள் நுதலிய ஐந்திணையும் - அகத்திணையுள் கைக்கிளை
பெருந்திணை ஒழிந்த ஐந்திற்கும்   உரியவாகிய   நிலமும்   காலமும்
கருப்பொருளுமன்றி மக்களைப்பற்றி   வரும்   புணர்தலும்   பிரிதலும்
இருத்தலும் இரங்கலும்   ஊடலும்    என்று   சொல்லப்பட்ட   ஐந்து
பொருண்மையும்,     சுட்டி    ஒருவர்     பெயர்    கொளப்பெறார்
(அவ்வைந்திணைக்   கண்ணும்  தலை  மகனாகப்  புலனெறி வழக்கம்
செய்ய வேண்டின்)     நாடன்    ஊரன்     சேர்ப்பன்     என்னும்
பொதுப்பெயரானன்றி     ஒருவர்க்கு    உரித்தாகி    வரும்   பெயர்
கொள்ளப்பெறார் புலவர்.                                  (57)

58. புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது
அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே.

இஃது, எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று.

புறத்திணை மருங்கின்  பொருந்தின்  அல்லது  -  ஒருவர்  பெயர்
புறத்திணை    மருங்கிற்   பொருந்தினல்லது,  அகத்திணை மருங்கின்
அளவுதல்    இல - அகத்திணை மருங்கின் வருதல் இல்லை. [ஏகாரம் ஈற்றசை].

இதனாற்   சொல்லியது ஒருவர்க்குரித்தாகி வரும்பெயர் அகத்திணை
பற்றி வரும் கைக்கிளை பெருந்திணையினும் வரப் பெறாது என்பதூஉம்,
புறத்திணையுள்    வரும்  என்பதூஉம்,  ஆண்டும்  பாடாண் பாட்டுக்
காமம் பொருளாக வரின்  அவ்வழி  வரூஉம்  என்பதூஉம் கூறியவாறு.
இதனான்  அகப்பொருள்  ஒருவரைச் சாராது பொதுப்பட வருமென்பது
கொள்க.                                               (58)

முதலாவது அகத்திணை இயல் முற்றிற்று.

இரண்டாவது

புறத்திணை இயல்

இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், புறத்திணையியல் என்னும்
பெயர்த்து. இது புறப்பொருள் உணர்த்துதலாற் பெற்ற பெயர்.

அஃது     யாங்ஙனம்    உணர்த்தினாரோ   எனின்,      மேல்
அகத்திணையாகிய   எழுதிணையும்    சாற்றி,    அவற்றின்   புறத்து
நிகழ்வன   எழுதிணை உணர்த்தினார் என்று கொள்க. அவை:-

மலையாகிய குறிஞ்சித்திணைப்புறம் நிரைகோடலும் நிரை  மீட்டலும்
என்னும்  வேறுபாடு குறித்து வெட்சி எனவும் கரந்தை எனவும் இரண்டு
குறி பெறுதலும்.

காடுறையுலகாகிய முல்லைப்புறம்  மண்நசை வேட்கையால் எடுத்துச்
செலவுபுரிந்த    வேந்தன்மேல்    அடல் குறித்துச் செலவு புரிதலான்,
அவ்விரு   பெருவேந்தரும்  ஒரு வினையாகிய செலவு புரிதலின் அது
வஞ்சி என ஒரு குறி பெருதலும்.

புனலுலகாகிய மருதத்துப்புறம்  எயில் அழித்தலும், எயில் காத்தலும்
என்னும் வேறுபாடு குறித்து உழிஞை எனவும் நொச்சி எனவும் இரண்டு
குறி பெறுதலும்.

மணலுலகாகிய  நெய்தற்புறம் இரு  பெருவேந்தரும்  பொருதலாகிய
ஒரு  தொழிலே புரிதலால் அது தும்பை என ஒரு குறி பெறுதலும்,

நடுநிலைத்திணையாகிய     பாலைப்புறம்   வேந்தரே    யாயினும்
ஏனையோராயினும்   தமது மிகுதியாகிய வெற்றியைக் குறித்தலால் அது
வாகை  என ஒரு குறி பெறுதலும்,

பெருந்திணைப்புறம்    நிலையாமையாகிய  நோம்திறப்  பொருளே
குறித்து  வருதலின் காஞ்சி என ஒரு குறி பெறுதலும்.

கைக்கிளைப்புறம் செந்திறமாகிய ஒரு பொருளே குறித்து  வருதலின்
பாடாண் என ஒரு குறி பெறுதலும் உணர்த்தியவாறு கண்டு கொள்க.

மேலை ஓத்தினுள்,

''புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது,
அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே''    (அகத். 58)

என            அகத்திணைச்செய்யுள்             இயற்பெயர்
கூறப்பெறாதென்றமையானும்,   புறத்திணை    மருங்கிற்   பொருந்தும்
என்றமையானும்   உலகியலோடு   ஒத்துவரும்     காமப்பொருளாகப்
பாடாண் பாட்டின்கண் இன்பம் இயற்பெயர் சார்த்தி வரப்பெறும் என்று
கொள்க.

''ஆன்ற சிறப்பின் அறம்பொருள் இன்பமென
மூன்றுவகை நுதலிய துலகம் அவற்றுள்
அறமும் இன்பமும் அகலா தாகிப்
புறன்எனப் படுவது பொருள்குறித் தன்றே''

என்னும் பன்னிருபடலச் செய்யுள் புறப்பொருள் அறமும்  இன்பமும்
அகலாதாகி   எனக்  கூறினார்;  அவர் கூறுதல் வாகைத் திணைக்கண்
'கட்டில் நீத்த   பால்'   முதலாகக்'   காமம்   நீத்த   பால்,   ஈறாக
அறங்கூறுதலில் அச்சார்பாகக் கூறியது மயங்கக் கூறுதலாம்.

''ஆங்ஙனம் உரைப்பின் அவற்றது வகை
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:42:14(இந்திய நேரம்)