தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   38


 

பெருஞ்சிறப்பினையுடைய     கெடாத   விழுப்புகழைப்   பொருந்திய
பூவை நிலையைக் கூறுதலும்.

பூவை   மலர்ச்சியைக்    கண்டு   மாயோன் நிறத்தை ஒத்ததெனப் புகழ்தல்.    நாடெல்லை  காடாதலின்,  அக்  காட்டிடைச்  செல்வோர்
அப்பூவையைக்   கண்டு    கூறுதல்.  உன்னம் கண்டு கூறினார் போல
இதுவும் ஒரு வழக்கு.

உதாரணம்

"பூவை விரியும் புதுமலரில் பூங்கழலோய்
யாவை விழுமிய யாமுணரேம் - மேவார்
மறத்தொடு மல்லர் மறங்கடந்த காளை
நிறத்தொடு நேர்தருத லான்."           (புறப்.பாடாண்.3)

இஃது  உரையன்றென்பார், மாயோன் முதலாகிய    தேவர்களோடு
உவமித்தலே பூவைநிலை யென்ப.

உதாரணம்

"இந்திரன் என்னின் இரண்டேகண் ஏறூர்ந்த
அந்தரத்தான் என்னின் பிறை இல்லை - அந்தரத்தின்
கோழியான் என்னின் முகன் ஒன்றே கோதையை
ஆழியான் என்றுணரற் பாற்று. ''      (முத்தொள்ளாயிரம்)

வேறு கடவுளரை நோக்கி உவமித்து   வருபவையெல்லாம்   பூவை
நிலையாகக் கொள்க. என்னை?

"ஏற்றூர்தி யானும் இகல்வெம்போர் வானவனும்
ஆற்றலும் ஆள்வினையும் ஒத்தொன்றின் ஒவ்வாரே
கூற்றக் கணிச்சியான் கண்மூன்று இரண்டேயாம்
ஆற்றல்சால் வானவன் கண்"         (முத்தொள்ளாயிரம்)

என   முத்தொள்ளாயிரத்து  வந்தவாறு  காண்க.  பிறவும்  அன்ன.
பூவைநிலையும் அந்  நிலத்தின்   தெய்வமாகிய   கருப்பொருளாதலின்,
அதன்மேல் வந்தது.

ஆர் அமர் ஓட்டலும் - அரிய அமரைப் போக்குதலும்;

உதாரணம்

"புலிக்கணமுஞ் சீயமும் போர்க்களிறும் போல்வார்
வலிச்சினமும் மானமுந் தேசும் - ஒலிக்கும்
அருமுனை   வெஞ்சுரத்  தான்  பூசற்  கோடிச்
செருமலைந்தார்  சீற்றஞ் சிறந்து."       (புறப்-கரந்தை.4)

ஆபெயர்த்துத்தருதல் - நிரை மீட்டல்.

உதாரணம்

"அழுங்கல்நீர் வையகத்து ஆருயிரைக் கூற்றம்
விழுங்கியபின் வீடுகொண் டற்றால் - செழுங்குடிகள்
தாரார் கரந்தை தலைமலைந்து தாங்கொண்டார்4
நேரார்கைக் கொண்ட நிரை"            (புறப்.கரந்தை.1)

எனவும்,

"ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது
இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த
வல்வில் மறவர் ஒடுக்கங் காணாய்
செல்லல் செல்லல் சிறக்கநின் உள்ளம்
முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கு மான்மேற்
புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே."    (புறம்- 259)

எனவும் வரும்.

சீர்சால்   வேந்தன்    சிறப்பு   எடுத்து  உரைத்தலும்  -  சீர்மை
பொருந்திய வேந்தனது மிகுதியை எடுத்துக் கூறலும்.

உதாரணம்

"அங்கையுள் நெல்லி அதன்பயம் ஆதலால்
கொங்கலர் தாரான் குடை நிழற்கீழ்த் - தங்கிச்
செயிர் வழங்கும் வாளமருள் சென்றடையார் வேல்வாய்
உயிர்வழங்கும் வாழ்க்கை உறும்"       (புறப்.கரந்தை 31)

இது மற்றுள்ள திணைக்கும் பொது.

தலைத்தாள்  நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் - தன்மாட்டுள்ள
போர்வலி    முயற்சியினாலே   கொடுஞ்    சொற்களைத் தன்னொடு
புணர்த்திக் கூறுதலும்.

உதாரணம்

"ஆளமர் வெள்ளம் பெருகின் அதுவிலக்கி
வாளொடு வைகுவேம் யாமாக-நாளுங்
கழிமகிழ் வென்றிக் கழல்வெய்யோய் ஈயப்
பிழிமது உண்பார் பிறர்."               (புறப்.கரந்தை.11)

இது மற்றுள்ள திணைக்கும் பொது.

வரு     தார்    தாங்கல்    வாள்    வாய்த்து  கவிழ்தல் என்று
இருவகைப்பட்ட    பிள்ளை     நிலையும்-     மேல்     வருகின்ற கொடிப்படையைத் தாங்கலும் வாள் வாய்த்தலாற் படுதலும் என இரண்டு வகைப்பட்ட பிள்ளை நிலையும்.

உதாரணம்

"பிள்ளை கடுப்பப் பிணம்பிறங்க வாள்எறிந்து
கொள்ளைகொள் ஆயந் தலைக்கொண்டார்-எள்ளிப்
பொருதழிந்து மீளவும் பூங்கழலான் மீளான்
ஒருதனியே நின்றான் உளன்".           (புறப்.கரந்தை.7)

இது வருதார் தாங்கல்.

"உரைப்பின் அதுவியப்போ ஒன்னார்கைக் கொண்ட
நிரைப்பின் நெடுந்தகை சென்றான் - புரைப்பின்
றுளப்பட்ட வாயெல்லாம் ஒள்வாள் கொளவே
களப்பட்டான் சென்றான் கரந்து".         (புறப்.கரந்தை.6)

இது வாள் வாய்த்துக் கவிழ்தல்.

வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:43:21(இந்திய நேரம்)