தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   74


 

பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே."       (குறுந்-17)

அவ்வழித் தலைமகன் கூறிய சொற்கேட்டு, இஃது அறிவும் அருளும்
நாணமும்   உடையார்   செய்யார்   எனக்   கூறியவழித்  தலைமகன்
கூறியதற்குச் செய்யுள் :

"நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்".                  (குறள்-1133)

எனவும்,

"அறிகிலா ரெல்லாரும் என்றேயென் காமம்
மறுகில் மறுகும் மருண்டு"                  (குறள்-1139)

எனவும்  வரும்.  பிறவு மன்ன. மடல்மா கூறாது பிற கூறியதற்குச்
செய்யுள் :-

"பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும்
பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்து மற்றிவள்
உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்
முறையுடை அரசன் செங்கோல் வையத்து
யான்தற் கடவின் யாங்கா வதுகொல்
பெரிதும் பேதை மன்ற
அளிதோ தானேயிவ் அழுங்கல் ஊரே."       (குறுந்-276)

இவ்வாறு இரந்து பின்னிற்றலும் மடலேறுவல் என்றலும் கைக்கிளை
பெருந்திணைப்   பாற்படுமோ    எனின்,     அவ்வாறு    வருவன
அகத்திணைக்கும்  புறத்திணைக்கும்     பொதுவாமாறு    வருகின்ற
சூத்திரத்தான் விளங்கும்.                                  (11)

100. பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும்
அன்புற்று நகினும் அவட்பெற்று மலியினும்
ஆற்றிடை யுறுதலும் அவ்வினைக் கியல்பே.
என்- எனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று.

மேல்  தலைமகன்  `மடல்மா  கூறும்   இடனுமாருண்டே' என்றார்.
இஃது   அவன்  மடல்மா  கூறுதற்கு    நிமித்தமாகிய   நீக்கத்தினை
மாறுபட்டுக்  கூறாத்  தலைமகள்  இயல்பைக்  கூறிப்   பெயர்ப்பினும்,
அஃதறிந்து    தாம்    உடன்படத்   தலைமகன்    வருத்தத்தினான்
மெலிகின்றமை  கூறிய  இடத்தினும் தலைமகன் குறையை    மறுப்புழி
அன்பு   தோன்ற   நக்க   இடத்தும்,   தோழி உடன்பாடுற்றவழியும்,
தலைமகனும் மேற் சொல்லப்பட்ட மடல்மா கூறுதல் இடையூறுபடுதலும் தோழியிற் கூட்டத்திற்கு இயல்பு என்றவாறு.

உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை.

பண்பிற் பெயர்ப்பினும்-தலைமகள் இளமைப்பண்பு கூறிப் பெயர்த்த
வழித் தலைமகன் கூறியது. அதற்குச் செய்யுள்:-

"குன்றக் குறவன் காதல் மடமகள்
வண்டுபடு கூந்தல் தண்தழைக் கொடிச்சி
வளையள் முளைவாள் எயிற்றள்
இளைய ளாயினும் ஆரணங் கினளே."       (ஐங்குறு-256)

பரிவுற்று   மெலியினும்  - பரிந்த  வுள்ளத்துடன் மெலிதலுறுதலும்.
பரிவுற்றுத்  தோழி   மெலிதலாவது `உடம்படுவளியாள் என்றாற் போல
வருவது. அவ்வழித் தலைமகன் கூற்று:-

"தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்குந் துயர்."                   (குறள். 1135)

அன்புற்று நகினும்- அன்பு தோன்றும் உள்ளத்துடன் நக்க காலும்
கூற்று நிகழும். அன்புற்று நக்கவழித் தலைமகன் கூறியதற்குச் செய்யுள்:-

"நயனின் மையிற் பயனிது என்னாது
பூம்பொறிப் பொலிந்த அழலுமிழ் அகன்பைப்
பாம்புயிர் அணங்கி யாங்கும் ஈங்கிது
தகாஅது வாழியோ குறுமகள் நகாஅது
உரைமதி யுடையுமென் உள்ளஞ் சாரல்
கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழி போலச்
சேயரி பரந்த ஆயிழை மழைக்கண்
உறாஅ நோக்க முற்றவென்
பைதல் நெஞ்சம் உய்யு மாறே."            (நற்றிணை.75)

அவட்பெற்று மலியினும்- தோழி உடம்பாட்டினைப் பெற்று மகிழல்,
இரட்டுற   மொழிதலான்   தலைமகளை     இருவகைக்   குறியினும்
பெற்று மகிழினும் என்றும் கொள்க.

உதாரணம் :-

"எமக்குநயந் தருளினை யாயிற் பணைத்தோள்
நன்னுதல் அரிவையொடு மென்மெல இயலி
வந்திசின் வாழியோ மடந்தை
தொண்டி அன்னநின் பண்புபல கொண்டே."   (ஐங்குறு.175)

இது அவட்பெற்று மலியுந் தலைவன் கூற்று.

இனி, உள்ளப்   புணர்ச்சியா  னின்றி  யியற்கை யிடையீடு பட்டுழி,
பின் தலைமகள் குறியிடங்  கூறியவழி யதனைப்  பாங்கற்குரைத்தற்குச்
செய்யுள் :- 

"அணங்குடைப் பனித்துறைத் தொண்டி அன்ன
மணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கிழைப்
பொங்கரி பரந்த உண்கண்
அங்கலிழ் மேனி அசையியல் எமக்கே".      (ஐங்குறு.174)

எனவுஞ் சிறுபான்மை வரும்,

"காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ஒவ்வேம் என்று. "            (குறள்.1114)

இது தலைவியைப் பகற்குறிக்கண் பெற்று மலிதல்.

"மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்." (குறள்.1116)

இஃது இரவுக்குறிக்கண் தலைவன் அவட்பெற்று மலிந்தது.

"மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி".                       (குறள்.1118)

என்பதும் அது.

ஆற்றிடை உறுதலும்   -   தான்சேறும்   ஆற்றிடை   இடையூறு
உண்டாயயிடத்தும் கூற்று நிகழும்  இரட்டுற  மொழிவான்  வரைவிடை
வைத்துப்  பிரிந்தான்.  தான்  சேறும்  ஆற்றின்கண்   வருத்தமுற்றுக்
கூறலும் கொள்ளப்படும்.

"குருதி வேட்கை உருகெழு வயமான்
வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கும்
மரம்பயில் சோலை மலியப் பூழியர்
உருவத் துருவின் நாள்மேயல் ஆரும்
மாரி எண்கின் மலைச்சுர நீளிடை
நீ நயந்து வருதல் எவனெனப் பலபுலந்து
அழுதனை உறையும் அம்மா அரிவை
பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப்
பூதம் புணர்த்த புதிதியல் பாவை
விரிகதிர் இளவெயில் தோன்றி அன்னநின்
ஆய்நலம் உள்ளி வரினெமக்கு
ஏமம் ஆகும் மலைமுதல் ஆறே".         (நற்றிணை.192)

இந்   நற்றிணைப்  பாட்டு  தலைவி  ஆற்றினது அருமை செப்பத்
தலைவன் செப்பியது.

"ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின்
தூங்குதோல் கடுக்குத் தூவெள் ளருவிக்
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி
மரையினம் ஆரும் முன்றிற்
புல்வேய் குரம்பை நல்லோள் ஊரே".         (குறுந்.235)

இக்குறுந்தொகைப்   பாட்டு   தலைவன்   வரைவிடை  வைத்துச்
சேறுவான் கூறியது.

101. பாங்கர் நிமித்தம் பன்னிரண் டென்ப.

என்- எனின், பலவகை மணத்திற் பாங்கராயினார் துணையாகுமிடம்
இத்துணையென வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று.

பாங்கராயினார்    துணையாகக் கூடும்  கூட்டம்     பன்னிரண்டு
வகையென்றவாறு.

நிமித்தம்  என்பது  நிமித்தமாகக்   கூடும்  கூட்டம்,  அக்கூட்டம்
நிமித்தமென ஆகுபெயராய் நின்றது.   பாங்கராற்   கூட்டம்   பாங்கர்
நிமித்தமென   வேற்றுமைத்  தொகையாயிற்று.  அவையாவன:- பிரமம்
முதலிய நான்கும்,  கந்திருவப்  பகுதியாகிய  களவும்,  உடன்போக்கும்
அதன்கண்   கற்பின்  பகுதியாகிய   இற்கிழத்தியும்  காமக்கிழத்தியும்,
காதற்பரத்தையும், அசுரம் முதலாகிய மூன்றுமென இவை.         (13)

102. முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே.

என் - எனின்,   மேற்சொல்லப்பட்ட     பன்னிரு   வகையினும்
கைக்கிளைப் பாற்படுவன வகுத்துணர்த்துதல் நுதலிற்று.

எண்வகை  மணத்தினுள்ளும்  முன்னையவாகிய  அசுரம்   முதல்
மூன்றும் கைக்கிளைப்பாற்படும் என்றவாறு.                    (14)

103. பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே.

என்- எனின், மேற்சொல்லப்பட்டவற்றுள்   பெருந்திணைக்குரியன
உணர்த்துதல் நுதலிற்று.

எண்வகை   மணத்தினுள்ளும்    பிரமம்     முதலிய   நான்கும்
பெருந்திணைப் பாற்படும் என்றவாறு.                         (15)

104. முதலொடு புணர்ந்த யாழோர் மேன
தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே.

என்- எனின், மேற்சொல்லப்பட்ட ஒருதலைக் காமமும் பொருந்தாக்
காமமுமன்றி, ஒத்த அன்பின் வருங்கூட்டம் உணர்த்துதல் நுதலிற்று.

முதல் என்பது நிலமும்   காலமும்.  நிலத்தொடும்   காலத்தொடும்
பொருந்திய  கந்திருவர் பாற்பட்டன கெடுதலில்லாத சிறப்பினையுடைய
ஐந்து வகைப்படும் என்றவாறு.

முதலொடு   புணர்ந்த   என்றாரேனும்  `வந்தது  கண்டு வாராதது
முடித்தல்' (மரபியல்  -  112.)   என்பதனால்  ஒழிந்த கருப்பொருளும்
உரிப்பொருளும் கொள்ளப்படும்.   நிலம்   என்பது  இடம்  இதனாற்
சொல்லியது.  ஒத்த  காமமாகிக்    கருப்பொருளொடும்     புணர்ந்த
கந்திருவநெறி  இட   வகையான்  ஐந்து    வகைப்படும்  என்றவாறு.
அவையாவன   களவும்  உடன்போக்கும்,  இற்கிழத்தி,  காமக்கிழத்தி,
காதற்பரத்தையும் எனச் சொல்லப்பட்ட ஐவகைக் கூட்டம்.

இச்சொல்லப்பட்ட      பன்னிருவகைப்பட்ட      கூட்டத்திற்கும்
பாங்கராயினார் நிமித்தமாக  வேண்டுதலின்,  அவற்றுள்  தலைவற்கும்
தலைவிக்கும் ஒத்த காதலுள்    வழிப்   பாங்கராயினாரால்   நிகழும்
நிகழ்ச்சி   கந்திருவப் பகுதியாகவும்  ஒருதலை  வேட்கையாகிய  வழி
இவரால்  வரும்  நிகழ்ச்சி கைக்கிளையாகவும் ஒப்பில் கூட்டமாகிய
வழிப்பெருந்திணை யாகவும்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:53:13(இந்திய நேரம்)