தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5289


 

நும்மில் புலம்பான் வாடைக்கு   வருந்தினே   மென்றலின்  இரண்டுங்
கூறினாள்.

“அம்ம வாழி தோழி நலமிக
நல்ல வாயின அளியமென் றோள்கள்
மல்ல லிருங்கழி மல்கும்
மெல்லம் புலம்பன் வந்த மாறே.”          (ஐங்குறு.120)

“அம்ம வாழி தோழி பன்மாண்
நுண்மண லடைகரை நம்மோ டாடிய
தண்ணந் துறைவன் மறைஇ
அன்னை யருங்கடி வந்துநின் றோனே”      (ஐங்குறு.115)

இவை   தோழிக்குக்கூறியன.  ‘பெற்றவழி  மலியினும்’ எனப் பெறு
பொருள்  இன்னதெனவும்  இன்னார்க்குக்  கூறுவதெனவும்  வரையாது
கூறவே,  பிற பெற்று மலிந்து பிறர்க்குக் கூறுவனவுங் கொள்க.

“அம்ம வாழி தோழி யன்னைக்
குயர்நிலை யுலகமுஞ் சிறிதால் அவர்மலை
மாலைப் பெய்த மணங்கம ழுந்தியொடு
காலைவந்த முழுமுதல் காந்தள்
மெல்லிலை குழைய முயங்கலும்
இல்லுய்த்து நடுதலுங் கடியா தோட்கே.”       (குறுந்.361)

இது பெற்றவழி மகிழ்ந்து தோழிக்கு உரைத்தது. இதற்கும் இரண்டுங்
கூறினாள்.

வரும் தொழிற்கு அருமை வாயில் கூறினும்-தலைவன் இடைவிடாது
வருதற்கு, ஆண்டு நிகழும் ஏதம்  பலவாற்றானும் உளதாம் அருமையை,
வாயிலாகிய தோழி கூறினுந் தலைவிக்குக் கூற்று நிகழ்தலுள;

அது,

“நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்து
இனிதடங் கினரே மாக்கண் முனிவின்று
நனந்தலை யுலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.”               (குறுந்.6)

இதனுட்     பொழுது  சென்றதில்லையென்றும்,  மாக்கள்  இன்னுந்
துயின்றிலரென்றும் அருமையை வாயில் கூறியவழித்,  தலைவி யாமமும்
நள்ளென்றும் மாக்களுந் துயின்றும் வந்திலரென  வருந்திக்  கூறியவாறு
காண்க.

நாம்  ஏவிய   தொழில்   ஏற்றுக்கொண்டு   வருகின்றவன்,   ஒரு
காரணத்தானன்றி வாராதொழியுமோ வென்று  தலைவி   கொள்ளுமாறு
கூறுமென்றற்குத் தொழிலென்றார்.

கூறிய வாயில்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:27:15(இந்திய நேரம்)