Primary tabs
-
2.1 அடிப்படைச் சான்றுகள்
தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் இச்சொல் (தமிழகம்) மொழியையும் நாட்டையும், நாட்டில் வாழ்ந்த மக்களையும் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே தமிழ்நாடு, தமிழ் கூறும் நல்லுலகம் எனப் பழைய இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது என்பதை முந்தைய பாடத்தில் பார்த்தோம்.
தென் இந்தியாவின் ஓர் அங்கமாக விளங்கும் தமிழகம் அதன் வரலாற்றில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து இருக்கின்றது. தமிழரின் மரபும், பண்பாடும், தமிழ் மொழியும் காலச்சூழல்களில் சிக்குண்டும், அந்நியக் கலப்புகள் பலவற்றுக்கு உட்பட்டும் சில மாறுதல்களை ஏற்றுக்கொண்டுள்ளன. இருப்பினும் தலைசிறந்த நாகரிகத்தைத் தன்னகத்தே கொண்டிருந்தது தமிழகம் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. பழந்தமிழகத்தின் வரலாறானது பண்டைய எகிப்து, பாபிலோனியா, சுமேரியா, உரோம், கிரீஸ் ஆகிய நாடுகளின் வரலாற்றுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது என்பது உண்மை. நமக்குக் கிடைக்கப்பெற்ற வரலாற்றுச் சான்றுகளே இதனை உறுதிப்படுத்துகின்றன.
பழங்காலத்தில், பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாகத் தமிழகத்திலும் வராலாற்று நிகழ்ச்சிகளை ஏடுகளில் எழுதிவைக்கும் வழக்கத்தை மக்கள் மேற்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.
பழங்காலத் தமிழர்கள் தங்கள் வரலாற்றினைக் குறித்து வைக்க வில்லையே தவிர, அவர்களுடைய வாழ்க்கை முறைகளை அறிய உதவும் புதைபொருட் சின்னங்கள், இலக்கியக் குறிப்புகள் ஆகியவை மிகுதியாகவே நமக்குக் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் பல சிறந்த இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. இது அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை. இவற்றில் தமிழகத்தை ஆண்ட மன்னரைப் பற்றியும், அரசியல், பழக்க வழக்கங்கள் குறித்தும் ஆங்காங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
இவையேயன்றி அயல்நாட்டு அறிஞர் பெருமக்கள் தென் இந்தியா பற்றியும் பழந்தமிழர் வரலாறு பற்றியும், பண்பாடு, நாகரிகம் பற்றியும் விரிவாகக் குறித்து வைத்துள்ளனர். தமிழகத்தில் கோயில்களிலும் குகைகளிலும் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், வரையப்பட்டுள்ள ஓவியங்களும் அவ்வக்காலத்து மக்களின் வரலாற்றைக் கூறும்வண்ணம் அமைந்துள்ளன.