Primary tabs
-
6.0 பாட முன்னுரை
நாட்டுப்புற மரபுகள் என்னும் நான்காம் தொகுதியில் ஆறாவது பாடமாக நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் இடம் பெறுகிறது. பொதுவாக நாட்டுப்புறக் கலை மரபினை நிகழ்த்து கலை மரபு (Performing Art Tradition), பொருட்கலை மரபு அதாவது கைவினைக் கலை மரபு (Material Art Tradition) என நாட்டுப்புறவியல் அறிஞர்கள் இரண்டாகப் பகுத்துரைப்பர். முதலாவதாக உள்ள நிகழ்த்து கலை மரபு குறித்து நான்காம் பாடமான நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் என்பதில் கற்றுத் தெளிந்திருப்பீர்கள். இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள கைவினைக் கலை மரபு பற்றியே இப்பாடத்தில் நீங்கள் அறிந்து கொள்ளப் போகின்றீர்கள்.
தமிழரின் புழங்கு பொருள் பண்பாட்டின் (Material Culture) பழமையை அறிவதற்கு ஆதாரமாக விளங்குபவை நாட்டுப்புறக் கைவினைக் கலைகள், மனித வாழ்க்கையோடு நெருங்கிய உறவு இக்கைவினைக் கலைகளுக்கு உண்டு. தத்தித் தவழும் குழந்தை அழுதால் கிலுகிலுப்பையை ஆட்டி மகிழ்ச்சிப் படுத்துவதில் தொடங்கி, இறந்த பின்பு அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் சுடுகாடு கொண்டு செல்வது வரை கைவினைக் கலைகளின் பங்களிப்பு மனித வாழ்வில் தொடர்ந்து வருவதை நாம் காணலாம். இத்தகைய கைவினைக் கலைகள் பற்றிய விளக்கம், வகைப்பாடு, தஞ்சை வளர்க்கும் கலைகள், தனித் தன்மைகள், கைவினைக் கலைகள் பண்பாட்டோடு கொண்டுள்ள உறவு, கலைகளின் இன்றைய நிலை ஆகியவை குறித்து விளக்குவதாக இப்பாடம் அமைகிறது.