Primary tabs
-
2.0 பாட முன்னுரை
இயற்கையின் அழகைக் கண்டு, மகிழ்ந்து, இன்பம் அனுபவித்த கவிஞர்களில் பலர் தாம் கண்டு நுகர்ந்த இன்பத்தைப் பிறரும் அனுபவித்து மகிழவேண்டும் என்ற நோக்கத்தில் தம் கவிதைகளைப் புனைந்தனர். இத்தகைய கவிஞர்களுள் இயற்கையைப் பற்றிப் பாடியுள்ள புலவர்களுள் ஒரு சிலரே சிறப்புக்கும், பாராட்டுக்கும் உரியவர்களாகத் திகழ்கின்றார்கள். குறிப்பாக ஆங்கிலக் கவிஞர் வோர்ட்ஸ்வொர்த் (Wordsworth) சிறந்த இயற்கைக் கவிஞராகக் கருதப்படுகிறார். சமஸ்கிருதத்தில் காளிதாசரைக் குறிப்பிடுவர். சங்ககாலத்தைச் சார்ந்த கபிலர், இயற்கையைப் பற்றிப் பாடிய தமிழ்க் கவிஞர்களுள் முதன்மையானவர். இருபதாம் நூற்றாண்டில், இயற்கையைப் பற்றிப் பாடிய கவிஞர்களுள், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலையாயவர்.
இயற்கையில் தாம் கண்டு, அனுபவித்து ஆனந்தம் அடைந்ததற்குக் காரணமான ஒவ்வொரு பொருளைப் பற்றியும் பாரதிதாசன் அருமையான கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். ஒவ்வொரு கவிதையும், கவிஞரின் இயற்கை ஈடுபாட்டையும், இயற்கைப் பொருள்களைப் பற்றிய அவரது புதிய அணுகுமுறைகளையும் மிகச் சிறப்பாக வெளியிடுகிறது.
இந்தப் பாடத்தில், பாரதிதாசன் எந்த அளவிற்கு இயற்கையின் மீது ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது விளக்கப்படுகிறது. இயற்கைக் காட்சிகளிலும், இயற்கைப் பொருள்களைப் பற்றியும், காலை, மாலை போன்ற பொழுதுகளைப் பற்றியும் பறவை இனங்களைப் பற்றியும் பாடிய பாரதிதாசன், அவற்றின் மூலம் எத்தகைய சமுதாயக் கருத்துகளைத் தெரிவித்தார் என்பது இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளது.