Primary tabs
-
இயற்கைக் காட்சிகளைப் பற்றிப் பாடிய பாரதிதாசன், இயற்கைப் பொருள்களாகிய வானம், நிலா, ஞாயிறு முதலியவை பற்றியும் பல பாடல்களைப் பாடியுள்ளார். தம் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு இவற்றைத் தளமாகக் கொண்டு பாடியுள்ளார்.
அளவிட முடியாதது, அலகிட முடியாதது வானம். இந்த வானத்தில் தான் எத்தனை அழகுகள். பகலில் ஞாயிறு, இரவில் நிலா, விண்மீன்கள் கூட்டம், மேகங்களின் ஊர்வலம். இத்தனையும் கொண்டுள்ள இந்த வானத்தின் அழகினை, மாலை நேரத்தில் பார்த்தால், உள்ளத்தை அள்ளுகின்ற காட்சியாக இருக்கும். இந்தக் காட்சி தரும் இன்பத்தை - அழகினைத் தம் பாடலில் வெளிப்படுத்துகிறார் பாரதிதாசன்.
(பாரதிதாசன் கவிதைகள் காட்சி இன்பம்: வரிகள்: 1 - 3)
அந்திவானத்தின் அழகுக் காட்சியை ஒரு குன்றின்மேல் நின்று பார்க்கிறாராம். அந்தி வானத்தின் அருமையான காட்சி, அவரைப் பரவசப்படுத்தியிருக்கிறது. எனவே, என்ன அழகு ! என்ன அழகு ! என்று வியக்கிறார். அந்தி வானத்தின் வண்ணத்தை, ஞாயிறு மறையும் போது தோன்றும், அந்த அழகை, பொன்னைப் போல் பிரகாசிக்கிறது என்கிறார் பாரதிதாசன்.
வானம் தந்த அழகுக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த கவிஞர், அதன் தன்மையை வெளிப்படுத்துகிறார்.
காற்று, தீ, நீர், ஞாயிறு, நிலவு போன்ற உலக இயக்கத்தின் அடிப்படைக் கூறுகளை வழங்கிய வானத்தின் சிறப்பை எண்ணி எண்ணி வியப்படைகிறார்.
விரிந்த வானே, வெளியே - எங்கும்
விளைந்த பொருளின் முதலே
திரிந்த காற்றும், புனலும் - மண்ணும்,
செந்தீ யாவும் தந்தோய்
தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச்
செறிந்த உலகின் வித்தே,
புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம்
புதுமை ! புதுமை ! புதுமை !(இரண்டாம் தொகுதி, 4. இயற்கைச் செல்வம் - வரிகள்: 1 - 8)
வானத்தின் தன்மையை - அதன் வாயிலாகக் கிடைக்கும் பயன்களையும் சிறப்புகளையும் - புதுமை ! புதுமை ! புதுமை ! என்று புகழ்கிறார்.
கதிரவன் வழங்கும் இயற்கைக்காட்சிகளைப் பற்றிப்பல பாடல்கள் பாடியுள்ளார் பாரதிதாசன். ‘மலர்ந்தது காலை, பூத்தது கதிர், விழுந்ததது தங்கத்தூற்றல்’ என ஒவ்வொரு நாளையும் தொடங்கி வைக்கும் கதிரவனைக் குறிப்பிடுவார். கதிரவனின் தோற்றமும் மறைவும் பார்ப்பவர் மனத்தில் இன்பம் ஊட்டும். பாரதிதாசன் கதிரவனின் தோற்றப் பொலிவினைக் கண்டு மகிழ்ந்திருக்கிறார்.
காட்சி (175kb)
(எதிர்பாராத முத்தம்.
பெண்ணழகி தண்ணீர்த்துறைக்கு’, வரிகள்:1 - 2)
என்று கூறும் பாரதிதாசன், இன்னொரு பாடலில்,
(தமிழச்சியின் கத்தி)
என்று, கதிரவன் தோன்றியதை மலர்ந்தது, பூத்தது என்று மிக நயமாகக் குறிப்பிடுகிறார்.அதோடு அவர் மனம் திருப்தி அடையவில்லை. கீழ்த்திக்கில் கதிரவன் தோன்றும்போது, கீழ்வானத்தில், கதிரவன் கதிர்கள் ஒளி வீசிக் கொண்டு வெளியே வரும். இந்த ஒளிமயமான வண்ணக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த கவிஞர்,
(அழகின் சிரிப்பு. கடல், கடலும் இளங்கதிரும்: வரிகள்: 1 - 3)கதிரவனின் தோற்றத்தால் இருள் அகன்றது. அதோடு, அதன் கதிர்கள் ஒளி மழையை வழங்கியது. எத்தகைய ஒளி மழை? தங்க ஒளி மழை என்கிறார் பாரதிதாசன். கதிரவன் தோற்றத்தின் இயற்கைக்காட்சியை எப்படியெல்லாம் கவிஞர் நினைந்து நினைந்து மகிழ்ந்திருக்கிறார் பாருங்கள்!
கதிரவனின் தோற்றக் காட்சியின் அழகைக் கண்டு மகிழ்ந்த பாரதிதாசன், அதனைத் தன் கருத்தை வெளியிடுவதற்கு உரிய வாயிலாகவும் பயன்படுத்திக் கொண்டார்.
• பகலவன் பரிசு
ஒரே தன்மை உடைய கதிரவனை, இரண்டு இடங்களில் இரண்டு விதமான செய்திகளை வழங்குவதாகச் சுவையாகக் குறிப்பிடுகிறார்.
விடியற்காலத்தில், கதிரவன் தோன்றுவதற்கு முன்னரே, தலைவி எழுந்து, முற்றத்திற்கு வந்து, தண்ணீர் தெளித்து, அரிசிமாவால் அழகான கோலம் போட்டாள். அப்பொழுது தோன்றிய கதிரவன், அவள் செயலைப் பாராட்டும் வகையில், பொன் போன்ற ஒளியைப் பரிசாகக் கொடுத்தானாம்.
(குடும்ப விளக்கு முதற்பகுதி,
‘ஒருநாள் நிகழ்ச்சி’, ‘கோலமிட்டாள்’ வரிகள்: 14 - 15)
(பகலவன் = சூரியன்)கதிரவன் கீழ்த்திக்கில் தோன்றியதும் இருள் நீங்கி ஒளிவருவது இயற்கை. அதைச் சுவையாக விளக்குகிறார் கவிஞர், காலைக் கடமைகளைத் தொடங்கிய ஒரு பெண்ணுக்குப் பொன் போன்ற ஒளியைக் கொடுத்தான் என்று எவ்வளவு சிறப்பாகச் சொல்லுகிறார் பாருங்கள்!
• பரிதியின் நடுக்கம்
இன்னொரு இடத்தில், இதற்கு மாறுபட்ட நிலையில் குறிப்பிடுகிறார். ‘குடும்ப விளக்கு’ என்ற பாடலில் உள்ள தலைவிக்குப் பரிசு வழங்கிய கதிரவன், ‘இருண்ட வீடு’ என்ற நூலின் தலைவி கோலம் போடுவதைப் பார்த்ததும், கண்கள் நடுங்கின என்று குறிப்பிடுகிறார்.
(இருண்ட வீடு, பகுதி. 4 வரிகள் 23-24)
(பரிதி = சூரியன்)பெண்கள், கதிரவன் தோன்று முன்னரே, எழுந்து, முகம்கழுவி, தன் கூந்தலைக் கட்டிக் கொண்டு வந்து, கோலம் இடுவார்கள். அதுதான் மரபு. ஆனால், இந்தப்பெண், கதிரவன் நடு உச்சிக்கு வந்த பின் முகம் கழுவாமல், தன் கூந்தலைக் கூட ஒழுங்கு படுத்தாமல், பல் துலக்காத நிலையில் வருகிறாள். வந்தவள், வரும் வழியில் கிடந்த மாட்டுச் சாணத்தை எடுத்து, குவளையில் மிஞ்சியிருந்த பாலில் கலக்கி, முற்றத்தில் தெளித்தாள். தலைவிரி கோலமாக இருந்த அவளது கூந்தல் சிலிர்த்த முள்ளம்பன்றிபோல் காட்சி அளித்தது. இந்தக் கோலத்துடன் அவள் தலை நிமிர்ந்ததும் பகலவன் அவளின் தோற்றத்தைப் பார்த்து நடுங்கினான் என்கிறார் பாரதிதாசன்.
பெண்களின், கடமையையும் அதைச் செவ்வனவே செய்யவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தவே பாரதிதாசன் இவ்வாறு கூறுகிறார். குடும்பத்தின் சீர்மை கெடாது பாதுகாக்கப்பட வேண்டுமென்பதே பாரதிதாசனின் நோக்கம்.
பெரும்பான்மையான கவிஞர்கள், நிலவின் அழகைப் பற்றிப் பலவிதமாகப் பாடியுள்ளனர். பல உவமைகளுக்குப் பயன்படுத்தியுள்ளனர். பொதுவாக, நிலவைப் பெண்களின் முகத்தின் அழகோடு ஒப்பிட்டுப் பாடுவர். ஆனால், பாரதிதாசன், நிலவின் அழகை மட்டும் மனத்தில் கொள்ளவில்லை; அதற்கு மேலும் சென்று தம் கருத்துகளின் விளக்கத்திற்கு உரிய கருவியாகவும் பயன்படுத்தியுள்ளார்.
கவிஞர் பாரதிதாசன், தம் நண்பர்களுடன் இரவு வேளையில் தோணியில் சென்றபொழுது ஏற்பட்ட அனுபவத்தையும், பார்த்த இயற்கைக் காட்சியையும் அடிப்படையாகக் கொண்டு ஓர் அருமையான கவிதை புனைந்துள்ளார். அதில் நிலவைப்பற்றிப் பாடும்பொழுது,
முத்துச் சுடர் முகம் ஏனோ - இன்று
முற்றும் சிவந்தது சொல்வாய்.
இத்தனை கோபம் நிலாவே - உனக்கு
ஏற்றியதார் என்று கேட்டோம்
உத்தரமாக எம் நெஞ்சில் - மதி
ஒன்று புகன்றது கண்டீர்.
சித்தம் துடித்தது நாங்கள் - பின்னால்
திரும்பிப் பார்த்திட்டபோது
தோணிக் கயிற்றினை ஓர் ஆள் - இரு
தோள் கொண்டு இழுப்பது கண்டோம்.
என்று, நிலவின் தோற்றத்தில் தன் கருத்தை ஏற்றிக் கூறுகிறார்.நிலவின் ஒளிபொருந்திய முகம், இன்றும் சிவந்து காணப்படுகிறதாம். காரணம் என்ன? என்று சிந்திக்கும் கவிஞர்க்குக் காரணம் தெரியவில்லை. இன்று ஏன் இந்தக் கோலம்? தற்செயலாகத் திரும்பிப் பார்த்தார் கவிஞர். காரணம் புரிந்து விட்டது. ஓர் ஏழைத் தொழிலாளி, தோணிக் கயிற்றினைத் தன் தோள்களைக் கொண்டு இழுப்பதைக் கண்டார். நிலவின் முகம் சிவப்பதற்குக் காரணம் இதுதான். ஏழைத் தொழிலாளி மீது பாவேந்தர் கொண்ட ஈடுபாட்டை அக்கறையை இக்கவிதை எவ்வளவு சிறப்பாக வெளியிடுகிறது பாருங்கள்! இயற்கைப் பாடல்களிலும் கவிஞர் தன் சமுதாயச் சிந்தனையை வெளியிடுகிறார்.
இயற்கையின் அழகுகளில் ஒன்றாகிய நிலவைப் பற்றிப் பாடும் பொழுது கூட, இந்தச் சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருக்கும் ஏழைகளின் நினைவு பாரதிதாசனுக்கு வருகிறது.
தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிது கூழ் தேடுங்கால், பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின்நிலவே உனைக் காணும் இன்பம் தானோ?
(புரட்சிக்கவி, இரண்டாவது எண்சீர்விருத்தம், 5-வது பாடல், இறுதி 4 வரிகள்)
(ஆர = முழுவதுமாக)பல நாள் பசியோடு வாடும், ஏழை மக்கள், சிறிது அளவாவது உணவு கிடைக்காதா என்று ஏங்கும் பொழுது, எதிர்பாராதவிதமாக, ஒரு பானை முழுவதும் உணவு கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்? அதைப்போல, அழகு நிலவே ! உன்னைக் காணும் போது நான் இன்பம் அடைகிறேன் என்று பாடுகிறார் பாரதிதாசன். ஏழைகளின் துயரில் அக்கறை கொண்ட கவிஞர், இயற்கைப் பொருள்களில் அதை ஏற்றிச் சொல்கிறார்.
-
மலையின் அழகைப் பாரதிதாசன் எவ்வறு எடுத்துரைக்கிறார்?
[விடை]- மலையின் மூலம் அவர் வெளியிடும் சமுதாயக் கருத்து யாது?
[விடை]- மழை தரும் அழகுக் காட்சியை விளக்குக.
[விடை]- வானத்தின் அழகு பாரதிதாசனின் பாடல்கள் மூலம் எவ்வாறு வெளியிடப்படுகிறது?
[விடை]- கதிரவனின் தோற்றக் காட்சியைக் கவிஞர் எவ்வாறு வருணனை செய்கிறார்?
[விடை]- நிலவு சிவப்பாக மாறுவதற்குப் பாரதிதாசன் கூறும் காரணம் யாது?
[விடை] -