Primary tabs
2.6 தொகுப்புரை
பொதுவாக, பாவேந்தர் பாரதிதாசனால் இயற்றப்பட்ட பாடல்களில் பெரும்பாலும் தமிழ் உணர்வும், சமுதாயச் சீர்திருத்த உணர்வும் காணப்பட்டாலும், அழியாத இயற்கைக் காட்சிகளையும், பொழுதுகளையும், பொருள்களையும் பற்றிப் பாடும் பொழுது கூட, தம் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளையும், இலையினுள் மறைந்திருக்கும் காய்போல் வெளிப்படுத்தியுள்ளார்.
இப்பாடத்தில், மலை, மழை போன்றவை தரும் அழகுக் காட்சிகளின் சிறப்பினைக் கூறுவதோடு, தம் கருத்துகளையும், அவற்றின் மூலம் வெளிப்படுத்துகிறார். இயற்கைப் பொருள்களாகிய வானம், கதிரவன், நிலவு ஆகியவற்றின் இயற்கைத் தன்மையிலும், பாரதிதாசன் பல வகையான கருத்துகளைக் குறிப்பிடுகிறார். காலை, மாலை, இரவு ஆகிய பொழுதுகளைப் பற்றிப் பாடும் பொழுதும், மயில், கிளி போன்ற பறவைகளைப் பற்றிப் பாடும் பொழுதும், தம் கருத்துகளை வெளியிடுவதற்குரிய சாதனமாகவும் அவற்றைப் பயன்படுத்தியுள்ளார். எனவே இயற்கையைப் பற்றிய தம் பாடல்களில், இயற்கையில் தமக்கு ஏற்பட்ட ஈடுபாட்டை வெளிப்படுத்தியதோடு, தமது சிந்தனைகளையும் அவற்றின் மூலம் எடுத்துரைத்தார்.