Primary tabs
-
தமிழர் பொருளீட்டும் முயற்சியில் திரைகடல் கடந்தனர். கால்டுவெல் கூறுவது போல எங்கெங்கெல்லாம் பிழைக்க வாய்ப்பு உண்டோ அங்கெல்லாம் எறும்புச் சாரிகளாகத் தமிழர் ஏகினர். கரும்புத் தோட்டங்களிலும், தேயிலைக் காடுகளிலும், காப்பி, ரப்பர் விளையுமிடங்களிலும், வணிகச் சந்தைகளிலும், அலுவலகங்களிலும், செல்வர் இல்லங்களிலும் பற்பல பணி செய்தனர். சில நாடுகளில் மதிக்கப்பட்டனர்; சில இடங்களில் துன்புறுத்தப்பட்டனர்.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா, மொரீசியசு, ரீயூனியன், தென் ஆப்பிரிக்கா, பிரான்சு, பிஜித்தீவு, மேற்கிந்தியத் தீவுகள், தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கெல்லாம் சென்று குடியேறினர் தமிழர்.
இலங்கையில் தமிழர் அடைந்த இன்னல்கள் எண்ணிலவாகப் பெருகிவிட்டதை இன்றைய வரலாறு காட்டுகின்றது. அகதிகளாகத் தமிழகம் நோக்கிக் கண்ணீர் வற்றி உலர்ந்த கண்களோடு பல்லாயிரவர் தமிழகத்திற்குள் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
வளைகுடா நாடுகளிலும், அமெரிக்காவிலும் சென்று பொருள் தேடிவரும் தமிழர் தாயகம் திரும்பி வசதியான வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர். இந்நாடுகளைத் தவிர இந்தியாவின் வடபகுதியில் பல நகரங்களிலும் சென்று பிழைப்பு மேற்கொண்ட தமிழர் பலர். அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மொரீசியசு போன்ற நாடுகளில் சென்ற தலைமுறைகளில் சென்று தங்கிவிட்ட தமிழர்கள் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் மறந்துவிட்டனர். தங்கள் மூதாதையர் தமிழ்நாட்டுக்காரர்கள் என்பதைத் தவிர இவர்களுக்கு வேறு ஏதும் தெரியவில்லை.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. தமிழக எல்லைகள் பெற்ற மாற்றங்கள் யாவை?
2. தணிப்பரிதாம் துன்பமிது எனக் கவிஞர் எதைக் கூறுகிறார்?
3. சாதி உணர்வை ஒழிக்க அரசு (தமிழ்நாட்டில்) மேற்கொள்ளும் முயற்சிகள் யாவை?
4. திரைப்படத்தைக் குறித்துப் பாமரத் தமிழன் என்ன கருதுகிறான்?
5. தமிழக அரசு பணி வாய்ப்பில் பெண்களுக்கு என்ன நன்மை செய்துள்ளது?
6. தமிழர் குடியேறிய நாடுகள் சிலவற்றைக் கூறுக.